Jan 7, 2013

ஜெயலலிதா பிரதமராவது காலத்தின் கட்டாயம் - நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கொள்ளை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் 100 ஆண்டுகள் பேசும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டதில் பேசுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன். தமிழகத்தில் பாசிச, கொடுங்கோல், இருண்ட ஆட்சி நடத்தி வந்த கருணாநிதியை எதிர்த்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.கவை தொடங்கினார். அவரது வழியில் இன்று ஜெயலலிதா மக்களுக்கான நல்லாட்சி நடத்துகிறார். திறமையிருப்பவர்களுக்கு அ.தி.மு.க. வில் பதவி கிடைக்கும் என்பதற்கு, நானே முன்உதாரணம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேசுவதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதாவை 10 நிமிடங்கள் மட்டுமே பேசிய நிலையில், மணி அடித்து உ்ட்கார சொல்லி அவமானப்படுத்தி விட்டனர். ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசின் அநாகரீகமாக செயலை கண்டித்து முதல்வர் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டார். தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்படுவதை எடுத்துரைக்க முதல்வர் டில்லிக்கு சென்றார். அவரை அவமானப்படுத்த மத்திய அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதல்வரை திட்டமிட்டு அவமானப்படுத்தி உள்ளனர். பட்டி மன்றத்தில் பேசுபவர்களுக்கே 30 நிமிடங்கள் ஒதுக்குகின்றனர். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேச வெறும் 10 நிமிடங்களை டில்லி ஒதுக்குகிறது. இது எந்த விதத்தில் நியாயம். தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச, உயர் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா 3 நாட்கள் கூட்டி விவாதித்தார். முடிவில் 343 மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தார். 234 தொகுதி மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்கு 3 நாட்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா நடத்துகிறார். ஆனால் டில்லி ஏகாதிபத்தியமோ, 30 மாநில மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு நாள் கூட்டம் நடத்துகிறது. டில்லியின் காலடியில் நாம் இருக்கிறோம் என டில்லி நம்மை ஏறி மிதிக்கிறது. இதை கருணாநிதி போன்றவர்கள் சகித்துக் கொள்ளலாம். ஆனால், நாம் எப்படி சகித்துக் கொள்வது. முன்பு அண்ணா கூறினார், மாநிலங்கள் மாநிலங்களாகவே இருக்கின்றன. முதல்வர் என்ற சூழ்நிலை கைதியாக உள்ளேன். மாநில சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது அ.தி.மு.க. ஆனால், மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, கருணாநிதி தி.மு.க. செயற்குழுவை கூட்டுவதாக அறிவிக்கிறார். செத்துக் கிடக்கும் தி.மு.க. விற்கு உயிர் கொடுக்க ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார். 2001-2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியின் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்கிக்காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. மொத்த மின் தேவை 10 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. ஆனால் மின் உற்பத்தி 10 ஆயிரத்து 500 மெகாவாட். உபரியாக இருந்த 500 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கண்ட் மாநிலத்திற்கு விற்பனை செய்து அரசு கஜானாவிற்கு வருவாய் சேர்த்தவர் ஜெயலலிதா.
ஆனால் அடுத்த வந்த கருணாநிதி, தமிழகத்தை சின்னாபின்னமாக்கி விட்டார். தற்போதைய தமிழகத்தின் மொத்த மின் தேவைக்கும் மொத்த பற்றாக்குறைக்கும் உள்ள இடைவெளி நான்காயிரம் மெகாவாட் ஆகும். தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மொத்த மின்சாரத்தையும் தமிழகத்திற்கே கொடுத்தால் மின் தேவை பூர்த்தியாகிவிடும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா கொண்வந்த மின் உற்பத்தி திட்டத்தை, அடுத்த வந்த கருணாநிதி நிறைவேற்றியிருந்தால், தற்போது தமிழகத்தில் மின் வெட்டு அறவே இருக்காது.
அதுமட்டுமின்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், கொடர் மின் இழப்புகளாக ரூ. 50 ஆயிரம் கோடியும், அனைத்து வங்கிகளிலும் 50 ஆயிரம் கோடி மின்துறைக்கு கடன், தனியார் நிறுவனங்கள்மூலம் 11 ஆயிரம் கோடி கடன், ஆக மொத்தம் ரூ. 1.6 லட்சசம் கோடி கடனில் மின்வாரியத்தை கடனாக்கியவர் கருணாநிதி.
அதன்பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா, துருப்பிடித்திருந்த மின்வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செசய்து, உயிர்ப்பித்தார். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபின்னர், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறையை அறவே நீக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில், உப்பூரில் 2 ஆயிரம் மெகாவாட், உடன்குடியில், 800 மெகாவாட், எண்ணூரில் 600 மெகாவாட், வடசென்னையில் 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உத்தரவிட்டு, நிதியும் ஓதுக்கீடு செய்தார். அங்கு பணிகள் துரிதமாக நடக்கிறது.
தமிழகத்தில் மே மாதத்திற்குள் மின்வெட்டு அறவே நீக்கப்பட்டு, மின் மிகை மாநிலமாக திகழும். இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்க நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தமும் போடப்பட்டு விட்டது. இதுமட்டுமின்றி, பரமக்குடியில், ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, ரூ. 920 கோடியில், சூரியசக்தி மின்சாரம், ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் தயாரிக்க நிதி ஓதுக்கீடு செய்து, திட்டம் விரைவில் செயல்பட உள்ளது.
டில்லி அரசு திரும்ப ஒப்படைத்த உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்க மறுக்கிறது டில்லி ஆட்சி. பல முறை மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் அதற்கான பதில்கூட இல்லை. இதானால், முதல்வர் நீதி மன்றத்தை நாடினார். நீதிமன்றம், தேசிய மின்வாரியத்திடம், தமிழகத்திற்கு உபரி மின்சாரம் தரமுடியுமா? முடியாதா? எட்டு நாளில் பதில் தரவேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழகத்திற்கு உபரி மின்சாரம் கொண்டு செல்ல கேரிடர் வசதி இல்லை. என்றது மின்வாரியம். ஆனால், இந்தியாமீது பகையை கக்கும் பாக்கிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, மத்திய அரசு கொடுக்கிறது.
மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க, தலைவர் கருணாநிதி, உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்குமாறு கேட்டாரா? கருணாநிதி கேட்டால், பிரதமர், சோனியாகாந்தி மறுப்பார்களா? அல்லது இதற்காக செயற்குழுவில்தான் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினாரா ? , அ.தி.மு.க., ஆட்சிக்கு சரிவை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி காவேரி பிரச்னையில், தமிழக மக்களுக்கு துரோகம் செய்தவர்தான் கருணாநிதி. இந்திராகாந்தி பிரதமராவதற்கு, தமிழகத்தில் ஒரு கைக்கூலியை தேடினார். அதில் கருணாநிதி வீழ்ந்தார். சர்க்காரியா கமிஷன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்காக, இந்திராகாந்தியின் கட்டளையை ஏற்று, காவிரி பிரச்சினை வழக்கை மீண்டும் தமிழக அரசு தொடராமல் மவுனம் காத்தார். அப்படி வழக்கு தொடர்ந்திருந்தால், தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு 1974 ல் கிடைத்திருக்கும். தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தும் தனது சுயநலத்திற்காக, தமிழகத்தின் வாழ்வாதார உரிமையை கருணாநிதி தான் வழக்கில் இருந்து விடுபட விட்டுக் கொடுத்தார்.
காவிரி பிரச்சினையில், நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது எம்.ஜி.ஆர்.தான். அவரை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக கர்நாடகா சென்று, முதல்வர் ஷெட்டருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் ஷெட்டரோ காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமுடியாது என ஆணவமாக பதில் கூறினார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார் முதல்வர் ஜெயலலிதா. காவிரி தண்ணீர் பிரச்சனையில் இவ்வளவு கஷ்டத்திற்கும் யார் காரணம். கருணாநிதி தானே.
பதவிமீது கருணாநிதிக்கு அவ்வளவு மோகம். சாகும் வரை கட்சி தலைவர் பதவி மற்றவர்களுக்கு இல்லை என சூசகமாக சமீபத்தில் கருணாநிதி கூறியுள்ளார். அவருக்குப்பின் கட்சி பதவிக்காக மகன்கள் அடித்துக் கொள்ளப் போகின்றனர். கருணாநிதிக்கு சுயநலம் மட்டுமே முக்கியம். தன்னை காக்க யாரையும் பலி கொடுப்பார். மத்திய அமைச்சராக உள்ள அழகிரி மதுரையை புனரமைக்க ஏதாவது திட்டம் செயல்படுத்தினாரா? நாடாளுமன்றத்தில் பேசினாரா? .
தமிழகத்தில் மின் உற்பத்திக்கு தரமான நிலக்கரியை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் 4330 மெகாவாட் மின்சசாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தரமறுக்கிறது மத்திய அரசு. மண்ணென்ணை அளவை குறைக்கிறது மத்திய அரசு. இப்படி தமிழகத்தை எப்படியெல்லாம் வஞ்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் வஞ்சித்து வருகிறது. இதை எதிர்த்து கருணாநிதியோ, எதிர்கட்சி தலைவரோ குரல் கொடுத்தது உண்டா?
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் தற்போது டெசோ மாநாட்டை கூட்டுகிறார் கருணாநிதி. எதற்காக இந்த டெசோ மாநாடு. சோனியாவை குளிர்விக்க, தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்தவர்தானே கருணாநிதி. இலங்கைக்கு போர்விமானங்கள், ஆயுதங்கள், படைகளை மத்திய அரசு அனுப்பியபோது, அதற்கு வழிவகை செய்தவர் கருணாநிதிதானே? அப்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ முதல்வர்களாக இருந்திருந்தால், அது நடந்திருக்குமா? உண்மையிலேயே இலங்கை தமிழர்கள்மீது கருணாநிதிக்கு பாசம் இருந்தால், முதல்வராக இருந்தபோது, மத்திய அரசிலிருந்து தி.மு.க, வெளியேறும் என அறிவித்திருந்தால், டில்லி நடுங்கி இருக்கும்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கல்வெட்டு தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் உணர்வை வெளிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள்தண்டனை வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.
மத்திய அரசின் அனைத்து எதிர்ப்புகளையும்மீறி தமிழக மக்களின் நல்வாழ்விற்காக பல அரிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். அனைத்து திட்டங்களும் மக்களுக்காகத்தான். இதுபோன்ற ஓரு சிறப்பான ஆட்சி இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின், மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை அறிவித்து, தான் முதல்வராக வெற்றி பெற்றதாக உத்திரபிரதேச முல்வர் அகிலேஷ் கூறுகிறார்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம், இந்தியாவிலு்ள்ள 20 கோடி விவசாயிகளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு மத்திய அரசு தள்ளி விட்டுள்ளது. ஏழை, நடுத்தர விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை நேரடியாக இனி விற்பனை செய்ய முடியாது. பலர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை தற்போது மத்திய அரசு மீண்டும் வெளிநாட்டவருக்கு விற்று விட்டது. சோனியாவிற்காக பிரதமர் இந்தியாவை விற்று விட்டார்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனைத்கட்சியினரும் தடம் மாறியபோது, துணிச்சலாக, எதிர்த்து ஓட்டளித்து, இந்தியாவின் மானத்தை காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் முதல்வர் அவமானப்படுத்தப்பட்டார். இப்போது நாம் கேட்கின்ற இடத்தில் உள்ளோம். அதை விடுத்து கொடுக்கிற இடத்திற்கு செல்ல வேண்டும். இந்தியாவின் மானத்தை காக்க யுத்தம் நடக்கப் போகிறது. அருமையான நிர்வாகத்திறன், 8 மொழிகள் பேசும் ஆற்றல், மக்களின் நல்வாழ்விற்கான நலத் திட்டங்கள், திறமையான நிர்வாகத்துடன் தமிழகத்தில் முதல்வராக உள்ள ஜெயலலிதா, விரைவில் பிரதமர் நாற்காலியில் அமர உள்ளார். இது காலத்தின் கட்டாயம். கருணாநிதி குடும்பத்தினரின் செல்வாக்கிற்கு காரணம் எம்.ஜி.ஆர்.தான்:
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தாரே துரைமுருகன், அவர் படிப்பதற்கு உ்தவி செய்தவர் எம்.ஜி.ஆர்., அதுமட்டுமின்றி, கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் கடன்பட்டு, துன்பப்பட்டபோது, அவரை நாடிச் சென்று, நீங்கள் சினிமா எடுங்கள் நானும், ஜெயலலிதாவும் இலவசமாக நடித்து தருகிறோம் எனக் கூறிய எட்டாவது வள்ளல் எம்.ஜி,ஆர்., அவரது யோசனையில் பிறந்ததுதானே மேகலா பிக்சர்ஸ், அதன் முதல் படம்தானே எங்கள் தங்கம். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியின்மூலம் கிடைத்த பணத்திலிருந்து பெற்றதுதானே முரசொலி மாறன், கருணாநிதியின் செல்வாக்கு. அதுதானே இன்று வரை நீடிக்கிறது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

No comments: