Aug 9, 2019

இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்-indian-education-sytem

சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்

indian-education-sytem-things-to-learn-from-surya-agaram
சமஸ்
வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு படகே ஆச்சரியம் என்றாலும், சிறுவனின் துறுதுறுப்பும் வலையிலிருந்து மீன்களை அவன் கொய்த லாகவமும் படகை நோக்கி என்னை இழுத்தன. துடுப்புபோல இருந்தவனுடன் பேசலானேன்.
அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மனநலம் குன்றியவள். ஒரு தங்கை இருக்கிறாள் படிக்கிறாள், வீட்டு வேலைக்கும் செல்கிறாள். குப்பத்திலிருந்து நள்ளிரவில் சில மைல்கள் தொலைவை சைக்கிளில் கடந்து கடற்கரைக்கு வந்தால், சிறுவன் இந்த மூவர் குழுவில் சேர்ந்துகொள்ளலாம். உடன்கடல் மீன்பிடிக்கு இரவு இரண்டு மணி வாக்கில் கடலுக்குள் சென்று, ஆறு மணி வாக்கில் திரும்பிவிடுவது அவர்களுடைய வழக்கம். வீட்டுக்குச் செல்ல எட்டு மணி ஆகும். நூறு ரூபாய் கிடைக்கும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும். மருத்துவர் ஆகி சேவை புரிய வேண்டும் என்றான். வியர்வையில் நனைந்துவிட்டிருந்தவனைக் கை குலுக்கி அனுப்பிவைத்தேன்.
எப்போது தூங்குவான்?
ஓராண்டுக்கு முன் அவனை மீண்டும் பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்பட்ட ‘அறம் செய்ய விரும்புவோம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவனாக அவன் முகத்தைப் பார்த்தேன். எனக்கு அப்போது அவன் அந்தப் புத்தகத்துக்குள் இருப்பவர்களில் ஒருவனாகத் தெரிந்தான்.
என்னை நிலைகுலையச் செய்த புத்தகங்களில் ஒன்று அது. சமூகத்தின் கீழ்த்தட்டிலிருந்து கல்வி உதவி பெற்று மேல் நோக்கி வருபவர்கள் எந்த மாதிரியான பின்னணியில் இருந்தெல்லாம் வருகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அவர்களுடைய குடும்பச் சூழல் என்ன, அவர்களுடைய வாழ்க்கை பிற்பாடு எப்படி மாறுகிறது, அவர்கள் என்னென்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புகைப்படங்களோடு சொல்லும் அந்தப் புத்தகம், மனசாட்சியுள்ள எவருடைய நெஞ்சத்தையும் குமுறச் செய்யும்.நம்முடைய அகராதியிலிருந்து அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பிள்ளைகளின் குடியிருப்புகள் எதையும் நாம் வீடுகள் என்று குறிப்பிடவே முடியாது. வெறும் நூறு சதுரடி அல்லது இருநூறு சதுர அடிக்கு உட்பட்ட குடிசைகள்; கீழே மண் தரை, மேலே கீற்றுக்கூரை, சுவர்களாகச் சாக்குத் துணி; நான்கு பேர், ஐந்து பேர் கொண்ட குடும்பம் அதற்குள் வசிக்கிறது. அவர்களுடைய உடைமைகள், சமையல், படுக்கை, வாழ்க்கை சகலமும் அதற்குள்தான். பொருளாதார அழுத்தம் மட்டுமல்ல அது; நெஞ்சத்தில் ஒரு பெருமூட்டைபோல ஒட்டுமொத்த சமூக அழுத்தத்தையும் தூக்கிச் சுமந்துகொண்டுதான் பள்ளிக்கூடங்களை நோக்கி மூச்சிரைக்க அவர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களைத்தான் நாம் சொல்கிறோம், “இது ஒரே நாடு பன்னிரண்டு ஆண்டுகள் படித்து நீ எடுத்த உன் பள்ளிக்கூட மதிப்பெண்கள் போதாது; நான் வைக்கும் இன்னொரு தேர்வில் நீ டெல்லியிலும் சென்னையிலும் வருஷத்துக்கு பத்து லட்சம் வரை கட்டி சிறப்புப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுடன் மோதி ஜெயிக்க வேண்டும்; நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்குப் போ! இன்னும் ஓடு!”
இந்த 10 வருஷத்தில் ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்; அவர்களில் 1,169 பேர் பொறியாளர்கள்; 54 பேர் மருத்துவர்கள். இவர்களில் 90% பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நம் கண்ணுக்குப் புலப்படும் தூரத்தில் இருப்பது மட்டும் உலகம் அல்ல என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது இந்தக் கல்விப் பணி” என்றார். “பெற்றோர் இறந்துவிட்டார்கள். விண்ணப்பம் வாங்கக்கூட அந்த மாணவியிடம் பணம் இல்லை. நாம் செய்தது சின்ன உதவி. ஆனால், அது இன்று இந்திய ராணுவத்தில் அவரை மருத்துவராக ஆக்கியிருக்கிறது. கல் உடைக்கிற தொழிலாளியின் மகனும், ஆடு மேய்ப்பரின் மகனும் மருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். கல்வி ஒரு சமூக அறமாக இருக்க வேண்டும். ‘பணம் இருந்தால் விளையாடு’ என்கிற சூதாட்டமாக அது மாறக் கூடாது இல்லையா?”
சூர்யா நிறுவியது என்றாலும், ‘அகரம் அறக்கட்டளை’ என்பது சூர்யா மட்டும் அல்ல; இப்படி ஒரு அமைப்புக்கு கருத்துருவம் கொடுத்த எழுத்தாளர் ஞானவேல், செயலுருவம் கொடுத்த கல்வியாளர் கல்யாணி, அமைப்பைச் சுமந்து பொறுப்பேற்று நடத்தும் ஜெயஸ்ரீ, தங்களுடைய பணிகளுக்கு அப்பாற்பட்டு எளியோரின் கல்விக்காகச் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஏழை மாணாக்கரின் எதிர்காலத்துக்காக நிதியளிக்கும் கொடையாளர்களின் கூட்டுச் சேர்க்கை அது. “உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை நேரில் பார்க்கச் செல்லும்போது, நல்ல உடைகூட இல்லாத நிலையில் வெளியே வர சங்கடப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் பிள்ளைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களை அடுத்தகட்டத் தேர்வுக்காக அருகில் உள்ள நகரத்துக்கு அழைத்தால் பலரிடம் பஸ் செலவுக்குக்கூடப் பணம் இருக்காது. பெண் பிள்ளைகளின் எல்லா படிப்புச் செலவையும் நாம் ஏற்றுக்கொண்டாலும்கூட, சமூகச்சூழல் சார்ந்து பெற்றோர்கள் யோசிப்பார்கள். உயர்கல்வி படித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது, திருமணச் செலவு என்று எல்லாமே மாறிவிடும் என்று அஞ்சுவார்கள். ஏழ்மை என்றால் அப்படி ஒரு ஏழ்மை இங்கே இருக்கிறது; நாம் கிராமங்களிலிருந்து நிறைய தூரமாகிவிட்டோம்” என்றார் ஞானவேல்.
நான் ‘அகரம்’ அமைப்பின் மீது கொண்டிருக்கும் பெருமதிப்பு அது தன்னிடம் உதவி கோரும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க உருவாக்கிக்கொண்டிருக்கும் தேர்வு முறையில் இருக்கிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு மாணாக்கர்களை அது வரிசைப்படுத்துவதில்லை. உயர்கல்விக்கு உதவி கேட்டு விண்ணப்பிப்பவர்களைத் தேர்ந்தெடுக்க ‘அகரம்’ கையாளும் முறைமை இது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 150 புள்ளிகள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 50 புள்ளிகள். அரசுப் பள்ளி மாணவர் என்றால் 15 புள்ளிகள். மாற்றுத்திறனாளி என்றால் 20 புள்ளிகள். தலித்துகள் அல்லது பழங்குடியினர் அல்லது இலங்கை அகதிகள் என்றால் 25 புள்ளிகள். மலைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர் என்றால் 25 புள்ளிகள். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத குக்கிராமத்தினர் என்றால் 20 புள்ளிகள். மின் வசதி இல்லாத வீட்டில் வசிப்பவர் என்றால் 10 புள்ளிகள். தாயை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 20 புள்ளிகள். தந்தையை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 10 புள்ளிகள். குடிநோய்க்கு ஆளாகி குடும்பத்தைக் கவனிக்காதவராகத் தந்தை இருந்தால் 5 புள்ளிகள். குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வரும் மாணவர் என்றால் 10 புள்ளிகள். பெற்றோர் பத்தாம் வகுப்பு வரைகூடப் படித்திராதவர்கள் என்றால் 10 புள்ளிகள். தன்னார்வலர்கள் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் நேரில் செல்கிறார்கள். உண்மையை உறுதிசெய்கிறார்கள். அவர்களுடைய கள நிலவர அறிக்கைகளிலிருந்தே ‘அகரம்’ தன்னுடைய செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது.
எளியோர் கல்விக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட பேராசிரியர் கல்யாணி வகுத்தளித்த முறைமை இது. “ஏன் தந்தையில்லாக் குழந்தைக்கு 10 புள்ளிகள் என்றும் தாயில்லாக் குழந்தைக்கு 20 புள்ளிகள் என்றும் பிரித்திருக்கிறீர்கள்? பொதுவாக, தந்தையில்லாக் குழந்தைகள்தானே பொருளாதாரரீதியாக அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் நம் சமூகத்தில் இருக்கிறது?” என்று பேராசிரியரிடம் கேட்டேன். “அந்தப் பொதுப்பார்வை தவறு என்பதையே எங்கள் களப்பணி அனுபவத்தில் உணர்ந்துகொண்டோம். தந்தையில்லாக் குழந்தைகள் எப்படியோ தாயால் படிக்கவைக்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால், தாயில்லாக் குடும்பங்களோ சீரழிந்துவிடுகின்றன. அந்தக் குடும்பங்களில் விழும் முதல் அடி குழந்தைகளின் படிப்புக்குத்தான்” என்றார் கல்யாணி.
அடிப்படையில், நம்முடைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருக்கிறதா, தந்தைவழிச் சமூகமாக இருக்கிறதா என்ற கேள்வியை நீங்கள் சொல்லும் கள உண்மைகள் எழுப்புகின்றன என்று சொன்னேன். “இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றார் கல்யாணி. “தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளில் குடிநோயானது குடும்பங்களைச் சீரழிக்கும் பெரும் சமூக அவலமாக மாறியிருப்பதை எங்களுடைய இந்தப் பயணத்தில் பல குடும்பங்களின் நிலையிலிருந்து உணர்ந்தோம். அதனால்தான் அப்படிப்பட்ட குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 5 புள்ளிகளைக் கூடுதலாகக் கொடுக்கிறோம். நன்றாகப் படிக்கும் ஒரு நல்ல மாணவர் பன்னிரண்டாம் வகுப்பின்போது உடல்நிலை அல்லது குடும்பச் சூழல் பாதிக்கப்பட்டு கொஞ்சம் மதிப்பெண் குறைகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பொருட்டில் அவர் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. அதனால்தான் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டுவருகிறோம். எப்படியும் ஒரு நல்ல மாணவர் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது; அதற்கு நம்முடைய அமைப்பு முறை காரணமாகிவிடக் கூடாது!”
நூற்றுக்குத் தொண்ணூறு சத மதிப்பெண்களை எடுப்பவர்களுக்கு மட்டும் ‘அகரம்’ உதவவில்லை; நாற்பது சத மதிப்பெண்களைப் பெறுபவர்களுக்கும் அவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்பைப் பெற உதவுகிறது. “நம்மூரில் ஒரு வழக்கம் உண்டு. கல்விக்கு உதவுகிறேன் என்ற பெயரில் முதல் வரிசை மதிப்பெண்கள் எடுத்தவர்களை அழைத்து பணத்தைக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு மலைக் கிராமத்தில் கல்வியறிவில்லாத தாய் - தகப்பன்களுக்குப் பிறந்து, ஏழ்மையை எதிர்கொள்ள காட்டு வேலைக்குப் போய்க்கொண்டே படித்து அறுபது சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவி, நகரத்தில் எல்லா வசதிகளோடும் படித்து தொண்ணூறு சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவருக்குச் சளைத்தவர் இல்லையே? முன் வரிசையில் வருபவர்களுக்கு உதவத்தான் அரசாங்கமே இருக்கிறதே; பின்னே நிற்பவர்களையும் அல்லவா முன்னுக்குத் தள்ளுவது உண்மையான உதவி?”
இந்திய அரசும் பொதுச் சமூகமும் பெற வேண்டிய முக்கியமான பார்வை மாற்றம் இது. இந்திய அரசு இன்று உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் பேராசிரியர் கல்யாணி உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. நம்முடைய அமைப்பின் தேர்வு முறை கூடுமானவரை மாணவர்களை வெளித்தள்ளுகிறது. கல்யாணியின் வரையறைகளோ கூடுமானவரை மாணவர்களை உள்ளிழுக்கிறது.
ஊர் கண் விழிக்கும் வேளையில், சூரியனுக்கு முன் கடலிலிருந்து வெளிப்பட்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடி வரும் ஒரு சிறுவனிடம் உள்ள கல்வித் தேட்டத்தை உணரும் நிலையில் ஒரு அரசும் அமைப்பும் இல்லை என்றால், அவை உயிர்த்தன்மையை இழந்துவருகின்றன என்று பொருள். தம்மை விமர்சிப்போர் மீது பாய்வதை நிறுத்திவிட்டு நம்முடைய அமைப்புகள் முதலில் தன்னிலை உணரட்டும்; ஏனென்றால், ஜடங்களால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது!
- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in
தமிழ் இந்து நாளிதழுக்கும், திரு. சமஸ் அவர்களுக்கும் நன்றிகள்

Jun 21, 2019

பிரின்ஸ் ஆப் பெர்சியா Prince of Persia: The Sands of Time

                                            2010 ஆண்டு வெளியான திரைப்படம் இது.. கதையோட ஹீரோ டஸ்டன் ஒரு அனாதை.. அவரோட திறமையைப் பார்த்து வியந்த பெர்சியா நாட்டோட அரசர்.. சின்ன வயசான டஸ்டனை தத்து எடுத்து வளர்க்கிறார்.. அரசருக்கு டஸ், கர்சிவ்ன்னு ரெண்டு பசங்களும் இருக்காங்க.. டஸ், கர்சிவ்வோட சித்தப்பா நிஜாம்.. டஸ்டனைத் தவிர இவங்க எல்லாம் அரச குடும்பத்தாருங்க..பெர்சியாவோட எதிரிகளுக்கு புனித நகரமான "அலமட்" ஆயுதங்கள்

வாட்டர் டிவைனர் (Water Diviner)

            அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் 1920 ஆம் வருடம். ஆஸ்திரேலியாவின் பாலை போன்ற பெரும் பரப்பில் நீர் மட்டத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு நிபுணர் இரண்டு குச்சிகளை வைத்துக் கொண்டு அலைகிறார். ஒரு இடம் சிக்குகிறது. அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்குகிறார். ஒற்றை மனிதனாக சுமார் இருபதடி ஆழத்துக்கு குழியை வெட்டி மண்ணைச் சுமந்து வெளியில் வீசுகிறார். அவர் நீர்மட்டம் பார்த்த எல்லா இடங்களிலும் நீர் கிடைத்தது என்று சொல்ல முடியாது. இதுவும் கூட தவறான கணிப்பாக இருக்கலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்த்துவிடலாம் என்று கடப்பாரையை ஓங்கி நிலத்தில் இறக்க நீர் பொத்துக் கொண்டு வருகிறது. அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அதே உற்சாகத்தோடு வீட்டுக்கு வருகிறார்.
மனைவி தனியாக அமர்ந்திருக்கிறாள். ‘நீங்கள் கதை சொல்வதற்காக பசங்க தூங்காம காத்திருக்காங்க’ என்கிறாள். அறைக்குள் சென்று ஒரு புத்தகத்திலிருந்து கதையை வாசிக்கிறார். கேமிரா மெதுவாக கட்டில்களைக் காட்டுகிறது. அது வெறும் கட்டில்கள். நமக்கு சில்லிட்டு போய்விடுகிறது. வெறும் கட்டில்களுக்கு எதற்காக கதை படித்துக் காட்டுகிறார்? அவர் வெளியே வருகிறார். மனைவி அழுது கொண்டிருக்கிறாள். பேச்சை மாற்றும் விதமாக ‘இன்னைக்கு தண்ணீரைக் கண்டுபிடிச்சேன்’ என்கிறார். ‘நிலத்துக்குள் இருக்கும் தண்ணீரைக் கண்டுபிடிக்கும் உங்களால் சொந்தப் பசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அழுகிறாள். அடுத்த நாள் காலையில் மனைவி வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நீர் நிலையில் இறந்து கிடக்கிறாள். தற்கொலை.
முதல் உலகப் போரின் ஒரு சொட்டு வரலாற்றைத் தெரிந்து கொண்டால் மகன்கள் என்ன ஆனார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும்.
நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட துருக்கியப் பேரரசான ஒட்டாமன் பேரரசு முதல் உலகப் போரில் தள்ளாடத் தொடங்குகிறது. அப்பொழுது கேலிப்போலி என்னும் முக்கியத்துவம் வாய்ந்த போர் நடக்கிறது. இந்தப் போரில் துருக்கியை எதிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து இணைந்த கூட்டுப்படை போரிடுகிறது. கடுமையான போர் என்ற போதும் இந்தப் போரில் துருக்கிதான் வெற்றி பெறுகிறது. இருபக்கமும் ஏகப்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு கூட்டுப்படைகளை துருக்கியப்படையினர் துரத்தியடித்தார்கள். இந்த கேலிப்போலி சண்டையில் ஆஸ்திரேலியப் படையில் இணைந்து போரிடுவதற்காகத்தான் நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவரின் மூன்று மகன்களும் வருகிறார்கள்.
இப்பொழுது தற்கொலை செய்து கொண்ட அம்மாவையும் மகன்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் நாம் இணைத்துக் கொள்ளலாம்.
எல்லோரும் இறந்துவிட்டார்கள். நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவர் தனித்து நிற்கிறார். யாருமற்ற அநாதை. அவருடைய மகன்கள் இறந்து போன விஷயம் அவருக்குத் தெரியும். அதற்கான சில ஆதாரங்கள் அவரிடமிருக்கின்றன. அதைச் சுமந்து கொண்டு துருக்கியை அடைகிறார். அங்கு ஒரு இளம்பெண்ணும் அவளுடைய இளவயது மகனும் தங்கும் விடுதியை நடத்துகிறார்கள். அந்தச் சிறுவன் வலுக்கட்டாயமாக இவருடைய பையைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான். அவனைத் திருடன் என்று நினைத்தபடி துரத்துகிறார் ஆனால் அவன் விடுதிக்கு ஆள் பிடிக்கும் விதமாகத்தான் அப்படிச் செய்கிறான் என்று புரிந்து கொள்கிறார். அந்த விடுதியிலேயே தங்குகிறார். சிறுவனுக்கும் இவருக்குமான நட்பு தொடங்குகிறது.
விடுதி நடத்தும் பெண்மணியின் குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு. அந்தப் பெண்மணியின் கணவனும் போரில் காணாமல் போயிருக்கிறான். அவன் இறந்துவிட்டதாகச் சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்வதில்லை. அவள் ஒத்துக் கொள்ளும் அடுத்த வினாடி அவளைத் திருமணம் செய்து கொள்ள அவளது கணவனின் சகோதரன் தயாராக இருக்கிறான். ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. என்றபோதிலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். இது ஒரு கிளைக்கதை.
துருக்கி வந்தாகிவிட்டது. இனி எப்படி மகன்களைத் தேடுவது? அடையாளம் தெரியாமல் இறந்து போன போர் வீரர்களை ‘பெயரற்றவர்கள் அல்லது காணாமல் போனவர்கள்’ என்ற பெயரில் குவியல் குவியலாக புதைத்துவிடுகிறார்கள். மகன்களின் உடலை தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பது தன்னுடைய நோக்கம் என்று சொல்லி அதிகாரிகளிடம் மண்டாடுகிறார். ‘அதெல்லாம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லி ஆரம்பத்தில் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. திருட்டுத்தனமாக போர் நடந்த வளைகுடா பகுதிக்கு படகில் செல்கிறார்கள். இவர் வந்து சேர்ந்த பிறகு அவருடைய மகன்களின் பிணத்தைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். மகன்கள் இறந்து போன இடங்களை நோக்கி பயணம் விரிகிறது.
உலகப்போர் சம்பந்தமான திரைப்படங்களில் பெரும்பாலானவை இந்த மாதிரியான கதையம்சத்துடன்தான் இருக்கின்றன. போர் என்பது பெரும் வரலாறு. அதில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுகிறது. அப்படி மக்கிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை எடுத்து போரின் எதிர்விளைவுகள் அவை தனிப்பட்ட குடும்பங்களில் உருவாக்கக் கூடிய சலனங்கள் என்பனவற்றையெல்லாம் கதையாக்கி நம்மை நெகிழ்ந்து போகச் செய்வார்கள். அப்படியான படம்தான் The Water Diviner.
அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் உருவாக்கக் கூடிய த்ரில், எதிர்ப்படும் இடர்பாடுகள். விடுதி பெண்மனிக்கும் நாயகனுக்குமிடையிலான வெளியில் சொல்லப்படாத மென்மையான காதல் என்பவையெல்லாம் படத்தின் கண்ணிகள் என்றால் நாயகனின் நடிப்பும் விடுதிப் பெண்ணின் விறைத்த உடல் மொழியும் அவளது மகனாக நடித்த சிறுவனின் அப்பாவித்தனமான நடிப்பு போன்றவற்றையும் தூண்கள் எனலாம்.
படத்தில் நம்ப முடியாத காட்சி ஒன்று உண்டு. ஆயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம் போன்றதொரு போர்க்களத்தில் நீர்மட்டத்தைக் கண்டுபிடிப்பது போலவே தனது மகன்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டுபிடிக்கிறார். அது மட்டும்தான் நெருடலாக இருந்தது. கண்களை மூடி போரின் இறுதிக் காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி ‘இங்குதான் எனது மகன்கள் புதைக்கப்பட்டார்கள்’ என்கிறார். அவர்கள் தோண்டுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல் சிதலங்களைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல்கள் சிக்குகின்றன. அப்படியென்றால் இன்னொருவன்? அதுதான் க்ளைமேக்ஸ்.
2014 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.
படத்தின் நாயகன்தான் இயக்குநரும் கூட. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆரம்பத்தில் சில காட்சிகள் குழப்பமாக இருந்தது போலத் தோன்றியது. படம் நகரத் தொடங்கும் போது ஒன்றி விடுகிறோம். சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் காட்சியமைப்புகளுக்காகவும் இந்தப் படத்தை சிலாகிக்க வேண்டும். மிக எளிமையான கதை. நேர்த்தியான படமாக்கம். நல்ல நடிகர்கள் என்று பாராட்டப்பட வேண்டிய படம்.