Dec 20, 2012

திறந்தநிலைப் பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு;தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளர்

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்துவிட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகப் இளநிலைப் பட்டம் முடித்தவர்களை அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்காக வழக்கமான முறையில் இளநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு இணையாகக் கருதலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட அரசாணை விவரம்: பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோவுக்குப் பிறகு பி.இ. படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் முடித்த மாணவர்கள், பிளஸ் 2 முடித்து பி.இ. படித்த மாணவர்களுடன் சமமாகக் கருதப்பட்டு உதவிப் பொறியாளர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படிப்புக்குப் பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு பெற்று, பல அரசுப் பணிகளில் ஏற்கெனவே வேலையில் உள்ளவர்கள், தங்களது பணிவரன்முறை தொடர்பாக அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.
இவர்களையும், வழக்கமான முறையில் பட்டம் பெற்றவர்களையும் வேலைவாய்ப்பிற்கு இணையாகக் கருதலாமா என்பது குறித்து கல்வி நிர்ணயத் தகுதி குழுவில் பரிசீலித்து, அதன் பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், இணைக் கல்வி தகுதி நிர்ணயக் குழுவின் தீர்மானம் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையைப் பரிசீலித்த பிறகு அரசு கீழ்க்கண்ட உத்தரவைப் பிறப்பிக்கிறது.
1. பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு டிப்ளமோ, அதன்பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரக் கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் பெறப்பட்ட பட்டப்படிப்பு (10-3-3).
2. பதினோராம் வகுப்புக்குப் பின் (பழைய எஸ்.எஸ்.எல்.சி.) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட ஆசிரியப் பட்டயப் படிப்பு, பிறகு தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் இளங்கலைப் பட்டப்படிப்பு (11-2-3).
3. பத்தாம் வகுப்பு, இரண்டாண்டு ஐ.டி.ஐ., பின்னர் தொலைதூரக் கல்வி நிறுவனம் இளங்கலைப் பட்டப்படிப்பு (10-2-3)
4. பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு பட்டயப் படிப்பு, பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பு (லேட்டரல் என்ட்ரி) (10-3-2) ஆகியவற்றைப் படித்தவர்களை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-க்குப் பிறகு 3 ஆண்டு இளங்கலைப் பட்டம் படித்தவர்களுக்கு இணையாகக் கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு பெற அங்கீகரித்து ஆணையிடப்படுவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

No comments: