May 18, 2012

இன்றைய தமிழகம்


ஒரே நாளில் 25 கோடிக்கு விளம்பரம்: ஜெயாவின் புதிய புரட்சி!



சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது.

 தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.
ஒருவருட சாதனைகள் தாம்(சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.


சேதம் அடைந்த அண்ணா சிலைகள்! அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் கவனிப்பார்களா? 



சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடானது... பெண்களுக்கு சொத்தில் பங்குகிடைத்தது... சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றியது... தமிழ் ஆட்சிமொழிக்கான அங்கிகாரம் கிடைத்தது... ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் என்று கொண்டு வந்தது, உட்பட தமிழகம் இன்று உயரிய நிலைக்கு வர பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

நன்றி மறவாத அந்தகால தமிழ் பெரியோர்கள் அண்ணாவுக்கு ஊர்கள் தோறும சிலை வைத்தனர். தெருவுக்கு பெயர் வைத்தனர். அண்ணா உயிருடன் இருந்தபோதும், அவரது மறைவுக்கு பிறகும் பலர் தங்களின் குழந்தைகளுக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்து அவருக்கு நன்றி செலுத்தினார்கள்.
தமிழகத்தில் அண்ணா பெயரில் தெருக்களும், நகரும், சிலைகளும் இல்லாத ஊர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அண்ணாவின் புகழ் தமிழகம் எங்கும் நிறைந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக அண்ணாவின் பெயரில் தான் தமிழகத்தில் ஆட்சியே நடந்து வருகிறது.

ஆனால், இப்போது அண்ணா சிலைகள் எப்படி உள்ளார்...? என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. சேலம் மாவட்டத்தின் முக்கிய ஊராக இருக்கும் ஆத்தூர் நகராட்சியின் தலைவராக இருப்பவர் உமாராணி பிச்சைக்கன்னு, அ.தி.மு.க வை சேர்ந்த இவர் குடியிருக்கும் அம்பேத்கார் நகரின் நுழைவாயிலில் இருக்கும் அண்ணா அவகளின் முழு உருவச்சிலை கடந்த 1980 ஆண்டில், அ.தி.மு.க வினரால் நிறுவப்பட்டு அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வரகூர் அருணாசலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கு பிறகு, பராமரிப்பே இல்லாமல் போன அண்ணாவின் சிலையில் இப்போது இரண்டு கைகளும் சிதைந்து உடைந்து போய் கைகள் இல்லாத நிலையில் பரிதாபமாக உள்ளது.

இதேபோல, ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட அண்ணாவின் சிலையில் இப்போது தலையே இல்லாத நிலையில் உள்ளது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக இருக்கும் அமுதராணி சண்முகம் என்பவர் அ.தி.மு.க வை சேர்ந்தவர்தான்.

இந்த ஊர்களின் உள்ளாட்சி பொறுப்புகளில் இருப்பவர்கள் மாற்று கட்சிகரர்களாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், மாநிலத்திலும், மாவட்டத்திலும், உள்ளாட்சி பொறுப்புகளிலும் அ.தி.மு.க வினரே இருக்கிறார்கள்.

இவர்கள் அண்ணாவின் பெயரால் ஆட்சி நடத்திக்கொண்டு அந்த அண்ணாவையே கண்டுகொல்லாமல் இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நடத்த்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திராவிட இயக்க தலைவர்களின் கொள்கைகளையும் நோக்கங்களையும் நம்முடைய அரசியல்வாதிகள் மறந்து விட்டாலும், அந்த தலைவர்களின் சிலைகளையாவது அவமானப்படுத்தாமல் வைத்திருந்தால் நல்லது.

இவ்வளவு பணம் விளம்பரங்கள் செய்ய செலவு செய்யும் ஜெயலலிதா  அண்ணா சிலையை கவனிப்பார ? அல்லது  அவரது தொண்டர்கள் கவனிப்பார்களா?


No comments: