Nov 30, 2012

சோலார் ,காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் !

கடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழக மக்களுக்கு, வரப்பிரசாதம் போல், மிகக் குறைந்த விலையில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. தேவை அதிகரிக்கும் போது, இத்தொகை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
"காற்றாலை மின் உற்பத்தி-2012' மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் துவங்கி, மூன்று நாள்கள் நடக்கிறது. இதில், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த காற்றாலை கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.கண்காட்சியில் வர்த்தக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான காற்றாலைகள் மற்றும் சோலார் மின் உற்பத்தி பற்றிய கருத்தரங்குகள் நடந்தன. வர்த்தக அடிப்படையிலான, காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், வீட்டு உபயோகத்துக்கான மின் உற்பத்திக்கும் பங்களிக்கப்பட்டது.
பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது.
ஜெக்டோ எனர்ஜி நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை நிறுவ தயாராக இருந்தாலும், வர்த்தக பயன்பாட்டுக்கும் உரியதாக, மின் உற்பத்தி இருக்கும் என தெரிவிக்கிறது.இதன், ஆறு மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர்.
உள்ளூர் நிறுவனம்
திருப்பூர் மாவட்டம், கேத்தனூரில் காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம், 1.75 லட்சம் ரூபாயில் வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம் எனக் கூறுகிறது.இந்நிறுவனத்தின் ஆலோசகர் ராஜு கூறியதாவது:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும்.
சீதோஷ்ண நிலைகேற்ப...
இந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான, அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீடு
தற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார்.

அரசு மானியம் கிடைக்குமா?

சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக்க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும்.

மின்வெட்டு பிரச்னைதான் இன்றைக்கு ஹாட் டாப்பிக். புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் வருவதில் தாமதம், மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், காலநேரம் இல்லாத மின்வெட்டினால் ஏற்படும் பிரச்னைகள் என இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது.
மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மாற்று எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நமக்கு உடனடியாக கை கொடுப்பது மாற்று எரிசக்தித் திட்டங்களான காற்றாலையும், சூரிய மின்சாரமும்தான்.
சோலார் பவர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சிறிய அளவில் வீடுகளுக்கு மட்டுமல்ல, பெரிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்கள்கூட சோலார் பவரில் சாத்தியம் என்பதே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
சோலார் பவருக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்திதான். தமிழ்நாட்டில் பல இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தமிழ்நாடு மின் வாரியத்தோடு இணைந்து செயல்படுகின்றன. அதே சமயத்தில், வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய டவர்கள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையில் சாதகமான விஷயம்.
ஆனால், லேட்டஸ்ட் வளர்ச்சியாக, இப்போது சோலார் பேனல்கள் மற்றும் சிறிய அளவிலான காற்றாலைகள் என இரண்டையும் இணைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இந்த நவீன சிஸ்டத்தை வீடுகளுக்குப் பொருத்தித் தரும் ஏ அண்ட் டி சோலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் பேசினோம்.
ஹைபிரிட் சிஸ்டம்!
''சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக படும்போதுதான் சோலார் பவர் பேனல்கள் முழு அளவில் மின் ஆற்றலை தரும். சாதாரணமாக நிலவும் வெப்பநிலையிலிருந்து மின் ஆற்றலை உறிஞ்ச முடியும் என்றாலும், பேனல்களில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் குறைவான மின்சாரமே பேனல்களிலிருந்து பெற முடியும். ஆனால், காற்றாலை மின்சாரத்திற்கு இதுபோன்று எந்தத் தடையுமில்லை. காற்று வீசும் நேரத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. இதையே நமது தேவைக்கு ஏற்ப வீடுகளில் அமைத்துக்கொண்டால் எந்நேரமும் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதற்கேற்ப சோலார் - காற்றாலை இரண்டின் சேர்க்கைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ் என்கிறோம்.
இந்த முறையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற சோலார் பேனல்களும், காற்று மூலம் மின்சாரம் பெற சிறிய அளவிலான மின் இயற்றிகளும் பொருத்திக்கொள்ள வேண்டும். அதாவது, 30-லிருந்து 40 சதவிகிதம் வரை சோலார் பேனல்களும், 60 அல்லது 70 சதவிகிதம் காற்று மின் இயற்றிகளும் கொண்ட கலவைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ்.
பயன்கள்!
இந்த புதிய சிஸ்டத்தில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் நமக்கு முழுவீச்சில் சோலார் பேனல்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும். ஆனால், இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் பேனல்கள் முழுவீச்சில் மின் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், காற்றாலையில் இந்த கவலை இல்லை. மழை, வெயில், பகல், இரவு என்று எந்தத் தடையுமில்லை. பகலில் பேனல்கள் வழி உற்பத்தியும், இரவில் காற்றின் மூலமும், மழை, காற்று வீசக்கூடிய பருவ நிலைகளிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் முழு அளவிலான மின்சாரம் நமக்கு கிடைக்கும். 
எப்படி அமைப்பது?
பொதுவாக, தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளும் சீரான காற்று வீசும் புவி அமைப்பு கொண்டவைதான். எனவே, அனைத்து இடங்களிலும் இதை பொருத்திக்கொள்ளலாம்.  இந்த முறையில் காற்றாலை தரையிலிருந்து 60 அடி உயரத்தில் சுற்றும். அதாவது, வீட்டிற்கு அருகில் இடவசதி கொண்டவர்கள் தரைப்பகுதியிலும், மொட்டை மாடியிருந்தால் அதற்கேற்ப உயர அளவிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். 60 அடி உயரத்தில் இறக்கைகளின் சுற்றளவு சுமார் 1.5 முதல் 2.75 மீட்டர் வரை இருக்கும். 1 கிலோ வாட் காற்றாலை இயந்திரத்தின் மொத்த எடையும் 30 கிலோவுக்குள்தான் இருக்கும். 
சாதகமான விஷயங்கள்!
சாதாரணமாக காற்றில் இலைகள் அசையும் வேகத்தில் காற்று வீசினாலே இந்த மின் இயற்றி தானாகச் சுற்றத் தொடங்கிவிடும். அதாவது, காற்றின் வேகம் மிதமாக இருந்தாலே போதும். (நிமிடத்திற்கு 3.1 மீட்டர்)  அதேபோல இந்த மின் இயற்றியை இயக்குவதற்கு என்று தனியாக மின்சாரம் செலவிடத் தேவையில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாக இயங்கி தானாகவே நிற்கும் ஆற்றல் கொண்டது. சூரிய சக்தி, காற்று சக்தி இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எந்த பருவ நிலையிலும் நமக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்'' என்றார் அவர்.
செலவு எவ்வளவு?
தற்போது சோலார் பவர் மின் சாதனங்களை வீடுகளில் அமைப்பதற்கு ஆகும் செலவிலேயே இந்த சிஸ்டத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் அளித்து வருகிறது. ஒரு கிலோவாட் ஹைபிரிட் சிஸ்டம் அமைக்க 2.50 முதல் 3.00 லட்சம் வரை செலவாகும். அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், டிரஸ்ட்கள், லாப நோக்கமற்ற அமைப்புகள் இந்த சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளும்பட்சத்தில் ஒரு கிலோவாட்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒரு லட்சம்  வரை மானியம் கிடைக்கிறது. நிறுவனங்கள் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது இதற்கான செலவு தேய்மானத்துடன் சேர்த்துக் கணக்கில் காட்டி வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் நமக்கு இந்த திட்டம் ஒரு தீர்வாக இருக்கலாம்.
- நீரை.மகேந்திரன்,
படம்: தி.விஜய், ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பரே... நலமா...?

இணைய நண்பர்கள் இதைப்பற்றி கேட்டிருந்தார்கள்... சேமித்துக் கொண்டேன்... அவர்களுக்கு இதை பகிர்கிறேன்..

நன்றி...

K vijay said...

இதை எனது வீட்டில் அமைக்க முடியுமா ?
எனது வீட்டில் 3 A/C , 4 பேன், 6 tube light , mixie , grinder , fridge உள்ளது
இதற்க்கு எத்தனை KW பொறுத்த வேண்டும் ?
அதற்க்கு ஆகும் செலவு என்ன ?
இதற்க்கு சீனியர் சிட்டிசன் போன்றவர்களுக்கு வங்கி கடன் உதவி கிடைக்குமா ?
மத்திய அரசு மாநில அரசு மானியம் எவ்வளவு கிடைக்கும் ?
தனி தனியாக கிடைக்குமா அல்லது ஒரு மானியம் தான் கிடைக்குமா ?
அப்படி என்றால் நான் இதை வீட்டில் நிறுவுவதற்கும் மானியம் பெறுவதற்கும் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் ?
இதை வாங்குவதற்கு எந்த நிறுவனம் சிறந்தது ?
அவர்களே இதை செய்து கொடுப்பார்களா ?
அதற்க்கு தனியாக பணம் எதுவும் செலுத்த வேண்டுமா ?
இதை நிறுவிய பிறகு TNEB மின் இணைப்பை துண்டித்து விடலாமா ?
சோலார் மற்றும் காற்றலை மின் உற்பத்திக்கு அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்குமா ?
அப்படி என்றால் எப்பொழுது எவ்வளவு செலுத்த வேண்டும் ?
கேள்விகள் அதிகமாக இருந்தால் தயவு செய்து கோபித்து கொள்ள வேண்டாம்.
மின் கட்டணம் அதிகமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல்
இதை செய்வதால் என்னால் உலகம் மாசு அடைவதையும் தேவையற்ற பொருள்கள் விரயமாவதையும் ஓர் அளவுக்கு குறைக்கலாம் என்றும் ஒரு எடுத்துகாட்டாக இருக்கலாம் என்றும் இதை மற்றவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,
இதற்க்கு நல்ல விடை கிடைத்தால்
என் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் சொல்ல வசதியாக இருக்கும்,
இதை அவர்களும் செய்ய ஒரு முயற்சியாக இருக்கும்.