Showing posts with label மருத்துவர் கு.சிவராமன். Show all posts
Showing posts with label மருத்துவர் கு.சிவராமன். Show all posts

Aug 19, 2014

நலம் '360 8






ல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி... இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!
வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும்போது அது 'வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா, இல்லை வேறு ஏதேனுமா?’ என, நம்மில் பலர் குழம்புவோம். 'அலுவலகத்தில் போன வாரம் வரை ஆரோக்கியமாக இருந்த சீதாராமன், 'நெஞ்சு கரிக்குது’னு சொல்லிக்கிட்டே சரிஞ்சு விழுந்து, மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே செத்துப்போனானே...’ என்று நினைக்கும்போதே, நெஞ்சு படபடத்து முகம், உச்சந்தலை எல்லாம் வியர்த்து, மருத்துவமனைக்கு ஓடும் இளைஞர்கள் இப்போது அதிகம்.
அங்கே, 'எவ்வளவு நாளா இப்படி இருக்கு? நெஞ்சு எலும்புக்குக் கீழா, மார்பின் மையப்பகுதியிலா... எங்கே எரிச்சல் இருக்கு? சாப்பிட நேரமாகும்போது, பசி வரும்போது... வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, வேலை, சாப்பாட்டுப் பழக்கம், இன்ஷூரன்ஸ் சங்கதிகள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, 'இது வயிற்றுப்புண் மாதிரி தெரியலை. பித்தப்பை கல்லா இருக்குமோ... எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமே!’ என்பார்கள். 'ஸ்கேனா..? இது கல்லுக்கா, 'கல்லா’வுக்கா?’ என நம்மில் பலர் துப்பறியும் சாம்பு ஆவோம்.
முன்பெல்லாம், 'இது பித்தப்பை வீக்கமா இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்தவுடன், டாக்டர் முதலில் நமது வயிற்றைக் கைகளால் அழுத்தி பரிசோதனை செய்வார். நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக (அங்கேதான் ஈரல், பித்தப்பை எல்லாம் இருக்கின்றன) மருத்துவர் தனது விரல்களை அழுத்தமாக வைத்துவிட்டு, நோயாளியை மூச்சை நன்கு இழுத்து நிறுத்தச் சொல்வார். அப்போது பித்தப்பை வீக்கத்துடன் இருந்தால், அது முன்வந்து... கருவில் இருக்கும் குழந்தையின் தலைப்பகுதி தாயின் வயிற்றில் உணரப்படுவது போன்ற மெல்லிய உணர்வை மருத்துவர் விரலுக்குத் தரும். ஜான் பெஞ்சமின் மர்ஃபி என்கிற அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்த இந்தச் சோதனைக்கு 'மர்ஃபி சோதனை’ என்று பெயர்.
மருத்துவப் படிப்பில் மர்ஃபி சோதனை செய்யத் தெரியாவிட்டால், கண்டிப்பாக பாஸ் கிடையாது. ஆனால், நாம் மர்ஃபி ரேடியோவை ஓரங்கட்டியதுபோல, நம் மருத்துவர்களில் பலர் மர்ஃபி சோதனையையும் ஓரங்கட்டிவிட்டார்கள். 'அதான் ஸ்கேனும் சி.டி-யும் இன்னும் துல்லியமாச் சொல்லுதே...’ என்ற நினைப்பு, கூட்டம், நேரமின்மை எனப் பல காரணங்கள்.
ஆனால், பித்தக்கல்லுக்கான காரணம் என்ன என்று இன்னும் மிகச் சரியாக, துல்லியமாக நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. எதைத் தின்றால், எந்த என்சைமை, எவ்வளவு சுரந்து, ஜீரணிக்க வேண்டும் என்ற புரோகிராம், பல மில்லியன் ஆண்டுகளாக நம் மரபில் பொதிந்துவைத்திருக்கிறது நம் ஜீரண மண்டலம். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனப் புதுபுதுசாகப் பல பூச்சாண்டிகள் சாப்பாடு மூலம் வருவதால், அந்த மரபு புரோகிராம் குழம்புகிறது. தவிர, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டி சாப்பிடாமல் அடம்பிடித்து மெலிவது, நார்ச்சத்து, மேக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்கள் ஆகிய முக்கியமான சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்ச்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, எல்லா சாமிக்கும் ஏதாச்சும் சுயநல அப்ளிகேஷன் போட்டு வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவு... எனப் பல காரணங்களை, பித்தப்பை அழற்சிக்கும் கல்லுக்கும் காரணங்களாகக் கூறுகிறது நவீன மருத்துவம்.
'நோய் முதல் நாடி’ பார்ப்பதுதான் வைத்தியம் என்பதில் வள்ளுவனுக்கு மட்டுமல்ல... யூகி முனிக்கும் ஹாரிசனுக்கும்கூட வேறுபட்ட கருத்துகள் கிடையாது. 'தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப்புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் இந்தப் பித்தக்கல் பிரச்னைக்குப் பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாதத்தைக் குறையுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகம் எடுக்க வேண்டாம் என்பதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், யூகி முனியும் ஹாரிசனும் ஒரே புள்ளியில் நிற்பது புரியும்.
பித்தக்கல்லில் வகைகள் உண்டு. 'நிறையக் கொழுப்பு +  கொஞ்சம் உப்பு’ அல்லது 'கொஞ்சம் கொழுப்பு + நிறைய உப்பு’ எனக் கல் ஆக்கம் இருக்கக்கூடும். சிறுநீரகக் கல்லையும் பித்தக்கல்லையும் நிறையப் பேர் குழப்பிக்கொள்வது உண்டு. பித்தப்பைக்குள் இருக்கும் இந்தக் கல்லை, சிறுநீரகக்கல்போல கரைப்பது மிகக் கடினம். பித்தப்பைக்கல்லை மட்டும் உடைத்து துகளாகும் ஒலிக்கதிர் சிகிச்சை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மொத்தமாக பித்தப்பையையே எடுப்பதுதான் அதிகம் நடக்கிறது. எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் 1 செ.மீ-க்குக் குறைவாக 'தேமே’ என ஓரமாக இருக்கும் கல்லை அகற்றுகிறேன் என்று பித்தப்பையையே அகற்றுவது, பல நேரங்களில் அவசியம் இல்லாதது. 'அந்தப் பக்கமா குடல் ஆபரேஷன் பண்றோமே... கல் உள்ள இந்தப் பையையும் சேர்த்து எடுத்திடலாமே!’ என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதே சமயம், கல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்போதோ, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளியாக இருக்கும்போதோ, பித்தப்பை நாளப் பகுதியில் (DUCT) கல் சிக்கி அடைத்திருக்கும்போதோ, குடும்பத்தில் புற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்போதோ அல்லது ஈரல் நொதிகள் பெரிதாக மாற்றம் பெற்றிருக்கும்போதோ, குடும்ப மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னர் கல்லை அகற்றுவதில் தவறும் இல்லை. 'அய்யோ... பித்தப்பையை எடுத்துட்டா, பித்தம் சுரக்காமல் போய்விடுமே!’ என்ற அச்சமும் தேவை இல்லை. ஏனென்றால், பித்தப்பை என்பது, பித்தம் சுரக்கும் பை அல்ல; ஈரல் சுரக்கும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, செரிமானத்துக்குத் தேவையானபோது குடலுக்குத் தள்ளிவிடும் அமைப்பு.
ஒருபக்கம் அப்பெண்டிக்ஸ், அடினாய்டு, கருப்பை, பித்தப்பை போன்றவை, அதில் ஏற்படும் சிறு சிரமங்களுக்கு எல்லாம் 'என்னத்துக்கு பிரச்னை?’ என்றோ, 'அதான் இன்ஷூரன்ஸ் இருக்கே...
எடுத்துடுவோம்’ என்ற மேதாவித்தனத்திலோ அறுவைசிகிச்சையில் நீக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த புற்று முதலான அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில் தாமதித்து வருந்தும் சம்பவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. எனவே, உடல் நலம் பராமரிப்பு விஷயத்தில் நிறைய அக்கறையும், விசாலமான பார்வையும் கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.
சில நேரம் ஆதரவாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நோயைக் குணமாக்க முடியும். கைப்பற்றி அழுத்தி, தோள் சாய்த்துத் தட்டிக்கொடுத்தும் குணமாக்க முடியும். மடியில் உட்காரவைத்து வானம் காட்டி வாய் பிளக்கவைத்து அளிக்கும் ஒரு வாய் உணவின் மூலமும் குணமாக்குவது சாத்தியம். நெடுநாள் அனுபவ மூலிகை மருந்தின் மூலம் முற்றிலுமாகத் துடைப்பதும் சாத்தியம். நேற்றைய விஞ்ஞானம் ஆய்ந்து சொன்ன நவீனத்தின் மூலம் வீழ்த்துவதும் சாத்தியம். என்ன... 'என் நோய் இதில் எப்படிக் குணமாகும்?’ என்றெல்லாம் ஆய்வு செய்ய நேரம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் நிற்கும் சாமானியனின் நோயைத் துல்லியமாகக் கணித்து, கட்டிப்பிடிக்கணுமா... கத்தியை எடுக்கணுமா என்பதை புத்தியுடன் கொஞ்சம் அறத்தையும் தீட்டி தீர்மானிக்க வேண்டும் மருத்துவ உலகம். அவ்வளவே!
- நலம் பரவும்..

Jun 22, 2014

நலம் 360’ - 2


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
தொழில்நுட்பம், நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது உண்மைதான். நியூயார்க் நகரத்து வெள்ளைக்காரன், தான் பயணிக்க வேண்டிய விமானத்தின் இருக்கையை உறுதிசெய்ய, சென்னையின் கடற்கரை சாலையின் அடுக்குமாடி கம்பெனியில் இருந்து தெலங்கானா ராமண்ணாவிடம்தான் பேசியாக வேண்டும். 'யோசனைகாத தூரங்கள்’ எல்லாம் எலெக்ட்ரான் துகள்களுக்குள் நெருக்கப்பட்டு மைக்ரோ விநாடிகளில் கடந்துபோக ஆரம்பித்தாயிற்று. அதே சமயம், நம்மில் பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி... இந்தத் தொழில்நுட்ப வீச்சில் நாம் எல்லோரும் நெருங்கி இருக்கிறோமா... விலகி இருக்கிறோமா? என்பதுதான்.

இன்று இணையமும், முகநூலும், கைபேசிக் குறுஞ்செய்திகளும் நாம் எழுதிய அடுத்த கணத்தில், எமோட்டிக்கான் புன்னகையுடன் என்னதான் அதனையே பரிமாறினாலும், தொலைவும் காத்திருப்பும் தந்த உயிர்ப்பசையை உலரவைத்துவிட்டது என்பதே உண்மை. 

'நாட்டார் வழக்காற்றியல்’ மூத்த பேராசிரியர் தொ.பரமசிவம் தன்னுடைய 'வழித்தடங்கள்’ என்ற நூலில், ஒரு பொருளின் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான பண்பாட்டு விலகல் எந்த அளவு நம் சமூகத்தைச் சிதைக்கிறது என, மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். உற்பத்தி செய்யப்படும் பொருள் குறித்த முழுமையான அறிவை மரபுவழித் தொழில்நுட்பம் அறிந்திருக்கும். அது வீட்டுக்கான வாசற்கதவு செய்வதாக இருந்தாலும் சரி, மாதவிடாயின்போது வாந்தியுடன் வரும் வயிற்றுவலிக்கான கைப்பக்குவ மருந்து செய்வதாக இருந்தாலும் சரி, யாருக்காகச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எதைக்கொண்டு செய்கிறோம், நுகர்வோரின் மனம் அதில் எப்படிக் களிக்கும் என்ற பார்வை, மரபுவழித் தொழில்நுட்பத்தில் இருந்தது.

மூட்டு அறுவை மருத்துவர் 'எலும்புமுறிவை நான் இணைத்துவிட்டேன். நடக்கவைப்பதற்கு பிசியோதெரபிஸ்ட் வருவார்’ என்று மறைவதும், அதற்குள் அவசரமாக, 'சா£ர்... நான் என்ன சாப்பிடலாம்?’ என்றால், 'டயட்டீஷியனிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்கல்ல...’ என்று பதில் வருவதும், தொழில்நுட்பம் புகுத்தும் விலகலுக்கான நிதர்சன அடையாளங்கள்.

பாரதிதாசனின் கவிதையில் வரும் 'கொண்டவர்க்கு ஏது பிடிக்கும், குழந்தைகள் எது விரும்பும், தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன?’ என, உண்பவர் தம்மைக் காணும் அக்கறையைத் தொலைத்தோம். 'என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன?, எப்படித் தயாரித்தார்கள்?’ என்ற விவரங்கள் படுநேர்த்தியாக மறைக்கப்பட்ட குப்பை உணவுக்கூட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் துரித உணவின் படைப்புகள், பெரும்பாலும் நுகர்வோரிடம் இருந்து வெகுதூரம் திட்டமிடப்பட்டு விலகியே இருக்கிறது. மெக்ஸிகோ சோளம், ஜெர்மானிய இயந்திரத்தில் இத்தாலியன் நறுமணத்துடன், கிழக்காசியக் கூலிகளால் தயாரிக்கப்பட்டு, பின்னர் இங்கிலாந்து கம்பெனியால் இந்தியாவில் வணிகப்படுத்துவதில் எப்படி விலகுகிறோம், எப்படித் தொலைந்துபோகிறோம் என்பது தெளிவாகவே புரியும். படைப்பும் நுகர்வும் அந்நியப்பட்டுப்போனது, ஆதிக்க சக்திகளுக்கான அதிகபட்ச லாபத்துக்கான சுரங்கம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அது விளிம்பு நிலையில் உள்ள விலாசமற்ற மனிதர்களின் நலவாழ்வை மிதித்து நசுக்கி நாசமாக்குவது வேதனையான விஷயம். படைப்பின் சூட்சுமம் நேர்த்தியாக மறைக்கப்பட்டு, அதீத அலங்காரத்துடன் விற்கப்படும் 'ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, ஜீரண நலத்துக்குச் சிக்கல் வைப்பவை. காலை எழுந்ததும் சிரமம் ஏதுமின்றி மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

'காலைக் கடன்’ என்ற வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் எனத் தெரியவில்லை. உடனே பைசல் பண்ணாவிட்டால், வட்டியைக் குட்டியாகப்போட்டு வாழ்வைச் சிதைக்கும் கடன் சுமைபோல... மலச்சிக்கல் பல நோய்களைப் பிரசவித்து நல்வாழ்வுச் சிக்கலை உண்டாக்கும். நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகிய வலியுடன்கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் 'மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்தும், எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. 'கட்டளைக் கலித்துறை’ என்ற நூலோ நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்றும், சித்த மருத்துவ நோய் அணுகா விதியோ... 'மலத்தை அடக்கினாலோ

'முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே’

என்று அறிவுறுத்துகிறது. மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் தலையாய முதல் படியாக, சித்த மருத்துவமும் தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன. சமீபமாக, துரித நவீன வாழ்வியலில் இந்தப் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுகிறது. வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் பலமாக வளர்கிறது, 6.30 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் வண்டியேற வேண்டிய பால்குடி மறந்த பச்சிளம் கேஜி முதல், சில நேரங்களில் பல் துலக்காமல், குளிக்காமல்கூட ஆனால் மறக்காமல் செல்போன் ஹியர் பீஸை மட்டும் காதில் செருகிவிட்டு, பஸ் இருக்கையில் தூங்கிக்கொண்டே பயணிக்கும் கல்லூரி இளசுகள் வரை காலைக் கடன் கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி காலைக் கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. 'அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல வியாதிகளுக்கும் ஆரம்பம். அதிகாலையில் மலம் கழிப்போருக் குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். நேற்று சாப்பிட்ட உணவில் கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ, அதனால்தான் மலச்சிக்கலோ என வீட்டுப் பெரியவர் யோசித்து, அடுத்த முறை வாழைப்பூவின் அளவைக் குறைத்து சமைக்கும் தொழில்நுட்ப சாத்தியம், 'டூ மினிட்ஸ்’களில் சாத்தியம் இல்லை.

பாரம்பரியப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத 'அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். ஸ்கூல்விட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்குப் பறந்தோடும் குழந்தைக்கு மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசிக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவர வைக்கும். நாள்பட்ட மூட்டுவலி முதல் பக்கவாதம், தோல் நோய்கள் வரை உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பதுதான் பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடம் இரண்டு முறை பேதி எடுத்துக்கொள்வது நல்லது. உடனே 'பேதி மருந்து ரெண்டு பார்சல்...’ என மளிகைக் கடை சாமான் மாதிரி வாங்கி வராமல், குடும்ப மருத்துவரை அணுகி நாடி பார்த்து, உடல் வன்மை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்து எடுப்பதுதான் உத்தமம்.

மலச்சிக்கலைத் தவிர்க்க, கொஞ்சம் மலம் இறுகத் தொடங்கினாலோ அல்லது அதற்கான அழைப்பு காலையில் வரவில்லை என்றாலோ மெனக்கெடுவது மிக மிக அவசியம். பெருங்குடலில் தண்ணீர் அதிகம் உறிஞ்சப்படுவது, குடலின் இயல்பான அசைவுவேகம் குறைவு, இரும்பு வலிநிவாரணி மாத்திரைகள், நார்ச்சத்து அற்ற குப்பை உணவுகள்... என மலச்சிக்கலை வரவழைக்கும் அன்றாட விஷயங்கள் நிறைய. அலட்சியமும் சோம்பேறித்தனமும் கூடுதல் காரணங்கள்.

மைக்ராஸ்கோப் டெலஸ்கோப் வைத்து பார்த்தாலும், எந்த இணையத்தில் தேடினாலும் சிக்கவே சிக்காத சூத்திரத்தில் செய்யப்படும் இது மாதிரி உணவுகளுக்குள் சிக்காமல், நிறையவே கரிசனத்துடன் உருவாக்கப்பட்ட உணவையும் வாழ்வியலையும் அப்படியே பின்பற்றுவது நிறையவே நலம் பயக்கும். ஆனால், 'கொஞ்சம் கோணலா இருந்தாலும் குத்தமில்லை’ எனக் கும்மியடித்து விற்கப்படும் பல உணவுகள், சில நேரம் நல்வாழ்வை முற்றும் கோணலாக்கும் வாய்ப்பு உண்டு.

- நலம் பரவும்...


இரவில் படுக்கும்போது இளஞ்சூடான நீர் இரண்டு குவளை அருந்துவதும், காலை எழுந்ததும் பல் துலக்கி, பின்னர் இரண்டு குவளை சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

பச்சிளங்குழந்தைகளுக்கு 5-10 திராட்சைகளை (அங்கூர் திராட்சை அதிலும் குறிப்பாக ஆர்கானிக் கிஸ்மிஸ் வாங்குவது நல்லது. திராட்சைக்குத்தான் சகட்டுமேனிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள்.) நீரில் 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதனை நன்கு நீருடன் பிசைந்து கொடுக்கலாம்.

கடுக்காய்ப் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் சுகமாகக் கழிவதுடன் கடுக்காயின் எக்கச்சக்கமான ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வயோதிக மாற்றங்களைக் குறைக்கவும் செய்யும்.

மேலே சொன்னதுக்கு எல்லாம் பெப்பே காட்டும் நபருக்கு, நிச்சயம் மருத்துவ ஆலோசனை அவசியம். ஊசிப்பட்டாசு / பொட்டுவெடியில் இருந்து ஏகே 47 வரையிலான பல வகையான மலமிளக்கிகள் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த (விதை நீக்கிய பின்) தூள், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வரை சாப்பிடுவது காலையில் மலத்தை எளிதாகக் கழியவைப்பதுடன் பல ஆரோக்கிய அசைவுகளை உடலில் நிகழ்த்தும். 'திரிபலா’ என்றழைக்கப்படும் இந்த மும்மூர்த்திக் கூட்டணி, வீடுதோறும் இருக்க வேண்டிய நலப்பொக்கிஷம்.



ஐங்காயப் பொடி செய்முறை:

வயிறு சம்பந்தமான உபாதகளைத் தவிர்க்க ஐங்காயப் பொடி நல்ல உபாயம். அதன் செய்முறை இங்கே...

தேவைப்படும் பொருட்கள்: வேப்பம் பூ ஒரு டேபிள்ஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் ஒரு டேபிள் ஸ்பூன், மணத்தக்காளி வற்றல் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், திப்பிலி 6, சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இவை அத்தனையையும் உலர்த்தி, வறுத்து, பருப்புப் பொடி செய்வதுபோல் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். சுடுசோற்றில், குறிப்பாக வரகரிசி சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், சுவையுடன் ஆரோக்கியம் அலவன்சாகக் கிடைப்பது உறுதி!


நலம் 360’ - 1


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்

குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!



''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.



அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.



'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!



வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!



'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!



உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.



ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.



உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.



தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.



நம்பிக்கையோடு நலம் காப்போம்!



- நலம் பரவும்...



அன்னப்பொடி

தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.

செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.

உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்! 
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...

நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.

ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.

நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.

நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.

குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.

'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.

சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.

நன்றி ஆனந்த விகடன்