Nov 28, 2011

பேஸ்புக்கில் செக்ஸ் படங்கள் , வீடியோ, இணையதளத்தில் வெளியிட்டால் 5 ஆண்டு சிறை!


இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது.  பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார்.

கேரளாவில் முழுஅடைப்பு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது


கேரளாவில் இன்று கடையடைப்பு நடப்பதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.3 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரபலமானதாகும். இங்கு ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதில் 80 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதிப்பதை கண்டித்து கேரளாவில் விவசாயிகள், வர்த்தகர்கள் இன்று முழு கடையடைப்பு நடத்துகின்றனர். இதனால் கேரள மாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வராததால் ரூ.3 கோடி வரை  காய்கறி வியாபாரம் பாதித்துள்ளது. இடுக்கியில் பந்த் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு இன்று பந்த் நடந்து வருகிறது. இதனால் பஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.

Nov 27, 2011

செவ்வாய் கிரகத்துக்கு புறப்பட்டது நாசா ராக்கெட்; 55 கோடி கி.மீ. தூரம்.. 8 மாத பயணம்



நாசா,  -

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நேற்று ராக்கெட் அனுப்பியது.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் கோள் புதன். இதற்கு அடுத்து சுக்கிரன். 3-வதாக நாம் (பூமி). நமக்கு அடுத்து இருப்பது செவ்வாய். எல்லாம் தனித்தனியே தங்கள் ரூட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் என்பதால், எப்போதும் ஒரே இடைவெளி இருக்காது. மிக நெருக்கத்தில் வரும்போது பூமி - செவ்வாய் இடையே 5.6 கோடி கி.மீ. தூரம் இடைவெளி இருக்கும். அதிகபட்ச இடைவெளி 40 கோடி கி.மீ. வரை போகும்.

துயரங்கள் இலவசம்?! ஆனந்த விகடன் தலையங்கம்


'நஷ்டத்தில் மூழ்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்... கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட தவறுகளின் பின்விளைவு... கைகொடுக்காத மத்திய அரசு...' என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, பேருந்துக் கட்டணம், பால் விலை இரண்டையும் ஒரே மூச்சில் ஏற்றிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. மின் கட்டண உயர்வும் தவிர்க்க இயலாதது என்று திகில் முன்னோட்டம் தந்துள்ளார்.
 சபிக்கப்பட்ட நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு விழுந்திருக்கும் மற்றொரு மாபெரும் அடி இது. அதிலும், சுதாரிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் உடனடியாக அமலாக்கப்பட்ட கட்டண உயர்வால், கையில் போதிய பணம் இல்லாமல் பாதி பயணத்தில் இறங்கிச் சென்ற அப்பாவிகள் பட்ட அவமானம் அளவிட முடியாதது.
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு, தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளும் மாறி மாறி இலவச அறிவிப்பு நடத்தியபோது, அவர்களை வள்ளல்களாகவும், வானில் இருந்து இறங்கிவந்த தெய்வங்களாகவும் வாழ்த்தி வரவேற்றதன் விளைவுதானே இந்த விலையேற்றச் சுமை!

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.


தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழை காரணமாக பல கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்ளாததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, புயல் சின்னமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.