Dec 14, 2011

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு


நிலத்தை இழந்தால் மீட்டுவிடலாம், மொழியை இழந்து விட்டால்... மீட்கவே முடியாது என்பதை இந்திய வரலாறு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள். கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்​டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்ட​போது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.உருதும் அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை.
ஆனால், வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து, அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக்கொண்டது நடந்தேறியது.வரலாற்றின் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டோம்? தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்​குரிய ஒன்றாக மாறியது? சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மௌனம் மட்டுமே!இந்த வரலாற்று மாற்றத்துக்கு முதற்​காரணமாக இருந்தவர் மெக்காலே. அவர் உருவாக்கிய மேற்கத்தியக் கல்வி முறை, அந்தக் கல்வி முறையில் படித்து அரசுப் பணியாளர்களாக ஆனவர்கள், அவர்களின் வம்சாவழிகள், அந்தக் கல்வியை அப்படியே இன்றும் நடைமுறைப்படுத்தும் அரசுகள், கல்வியை வணிகமயமாக்கிய அமைப்புகள், ஆங்கிலப் படிப்பு மட்டுமே உயர்வானது என்று நம்பும் கல்வி நிலையங்கள், அந்தக் கருத்தியலைத் துதிபாடும் சாமான்யர்கள்... இப்படிச் சகலருக்கும் இந்தக் கல்வி மோசடியில் பங்கு இருக்கிறது.

தாய்மொழியில் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது அவமானமாகிப்​போன சமகாலச் சூழலில், இந்த அநியாயம் எப்படி உருவானது என்பதைக்கூட நாம் அறிந்துகொள்ளாமல் இருக்​கிறோம் என்பதே வெட்கப்பட​வேண்டிய உண்மை.1834-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் நாள் இந்திய சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக, இங்கிலாந்தில் இருந்து கடற்பயணம் செய்து மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தார் மெக்காலே. அப்போது,வில்லியம் பெனடிக் கவர்னராக இருந்தார். கடற்​கரையில் 15 குண்டுகள் முழங்க, மெக்கா​லேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர் வில்லியம் பெனடிக் கோடை கால ஒய்வுக்காக ஊட்டியில் தங்கி இருந்தார். ஆகவே, அவரைச் சந்திக்க மெக்காலே தானும் ஊட்டிக்குப் புறப்பட்டார்.மெக்காலேவை ஒரு பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கிக்கொண்டு பெங்களூர், மைசூர் வழியாக 11 நாட்கள் நடந்து ஊட்டிக்கு சென்றடைந்தார்கள். 400 மைல்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டார் மெக்காலே. அன்று, மெக்காலேவைப் பல்லக்கில் தூக்கிய நாம், இன்றும் இறக்கிவிடவே இல்லை. இந்தியர்கள் ஒவ்வொருவர் முதுகிலும் மெக்காலே இன்னும் உட்கார்ந்து இருக்கிறார். நாமும் வேதாளத்தை சுமக்கும் விக்ரமாதித்யனைப் போல, மெக்காலேவின் கல்வி முறையைத் தூக்கிக் கொண்டு அலைகிறோம்.மதராஸில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்திய விஜயம் எப்படி இருந்தது என்று மெக்காலேயிடம் கேட்டபோது, ''இந்திய மரங்களில் வீசும் காற்றுகூட எனக்கு உகந்ததாக இல்லை. ஒரே வெக்கை. எங்கு பார்த்தாலும் கறுத்த மனிதர்கள், குடிசை வீடுகள், வாறி இறைக்கும் வெயில், இந்தியா எனக்கு மூச்சுத்திணறலைத்தான் ஏற்படுத்துகிறது'' என்றார்.யார் இந்த மெக்காலே? அவர் ஏன் இந்தியா​வுக்கு வந்தார்? இந்த இரண்டு கேள்விகளின் பின்புலத்தில்தான் காலனிய ஆட்சியின் கடந்த காலம் சுருண்டிருக்கிறது.

தாமஸ் பேபிங்டன் மெக்காலே, 1800-ல் இங்கிலாந்தில் பிறந்தவர். அவரது அப்பாவும் அரசுப் பிரதிநிதியாக மேற்கிந்தியத் தீவுகளில் பணியாற்றியவர். சில காலம் வணிகமும் செய்து இருக்கிறார். மெக்காலே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். அவருக்கு இரண்டு சகோதரிகள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஹவுஸ் ஆப் காமன் உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியவர். காலனிய விசுவாசிகளில் முதன்மையானவர். ஆகவே, இந்தியாவில் காலனிய ஆட்சி வலுப்பெறுவதற்கு திட்டம் தீட்டுவதற்காக பிரிட்டிஷ்அரசு, மெக்காலேவை நியமனம் செய்தது.இந்தியா சிதறுண்டு கிடக்கிறது. ஒருமித்த சட்ட நடைமுறை இல்லை. உட்பூசல்கள் நிரம்பி இருக்கிறது. மக்களோ கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். ஆகவே, அதிகாரத்தை வலிமையாக்கினால் இந்தியாவை எளிதாக ஆட்சி செய்துவிடலாம் என்ற கருத்தை மெக்காலே முன்மொழிந்தார்.குறிப்பாக, நிர்வாக முறைகளை சீர்செய்வதற்கு நமக்குத் திறமையான அடிமைகள் வேண்டும். அவர்கள் நாம் சொல்வதை அப்படியே செயல்​படுத்தும் விசுவாசிகளாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களை நாமே உருவாக்க வேண்டும். நாம் கைக்கொள்ள வேண்டியது கல்வி முறையில் மாற்றம். ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்துவைத்து அந்தக் கல்வி கற்றவர்களை நாமே வேலைக்கும் எடுத்துக்கொண்டால், அவர்கள் நமது விசுவாசியாக இருப்பார்கள்.வெள்ளைக்காரர்களிடம் வேலை பார்ப்பது என்பது கௌரவத்துக்குரிய ஒன்றாக நினைக்கக்கூடியவர்கள் இந்தியர்கள். அந்த பலவீனத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மெக்கா​லேயின் திட்டம்.இன்னொரு பக்கம், மெக்காலேயின் அப்பா மேற்கொண்ட வணிக முயற்சிகள் தோல்வியடைந்து, குடும்பம் கடனில் முழ்கியது. ஆகவே, இந்தியாவுக்குப் போய்ப் பணியாற்றுவதன் மூலம், தனது சொந்தக் கடனை அடைத்துவிட்டு குடும்ப வசதியை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று முடிவு செய்தார் மெக்காலே. இந்தியர்களை இருட்டுக்குள் தள்ளிவிட்டு, அதன்வழிகிடைத்த ஆதாயத்தால் தனது சொந்தக் கடனைத் தீர்த்துக்​கொண்டார் மெக்காலே. 12,000 பவுண்ட் ஊதியத்துக்​காகத்தான் இந்தியக் கல்வி விலைபோனது.''இந்தியக் கலைகளும், அறிவியலும், இலக்கியமும் அர்த்தமற்றவை. அவற்றை மொத்தமாக ஒரு பக்கமும், ஆங்கில இலக்கியத்தில் பிரதானமான 100 புத்தகங்களை ஒரு பக்கமும் வைத்தால், இந்திய இலக்கியங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியாவில் உள்ள எந்த மொழியும் கல்வி கற்றுத்தருவதற்கு தகுதியானவை இல்லை. ஆங்கிலம் ஒன்றுக்குத்தான் கல்வி கற்றுத்தரும் முழுமையான தகுதி இருக்கிறது. இலக்கியப் பாரம்பரியம் இருக்கிறது. ஆகவே, இந்தியா முழுமைக்கும் ஆங்கிலக் கல்வியை உடனடியாக அளிக்க வேண்டியது அவசியம்'' என்று ஒரு குறிப்பு அனுப்பினார் மெக்காலே.

''நான் கிறிஸ்தவனாகப் பிறந்தபோதும் நடு​நிலையான ஒருவராக செயல்படுகிறேன்'' என்று அறிவித்துக்கொண்ட மெக்காலே, தனது நடுநிலை​மையின் சாட்சியாகச் செய்த காரியம் என்ன தெரியுமா? அதுவரை இயங்கி வந்த அரபு மற்றும் சமஸ்கிருதப் பள்ளிகளை மூடிவிடும்படி உத்தரவிட்டதுதான். கல்கத்தாவில் இயங்கி வந்த மதரஸாவுக்கும், சமஸ்கிருதக் கல்வி நிலையத்துக்கும் அளிக்கப்பட்ட மானியம் உடனே நிறுத்தப்பட்டது. அதுதான் அவரது பாஷையில் நடுநிலைமை!இந்திய மக்களின் மூடத்தனத்துக்கு, அவர்களின் மதமே முக்கியக் காரணம். ஆகவே, அதில் இருந்து விடுபடுவதற்கு கிறிஸ்தவ மதப் பிரசாரம் இன்றியமையாதது என்று வெளிப்படையாகச் சொன்னவர்தான் மெக்காலே. அவரது கருத்தை பிரிட்டிஷ் அரசும் ஆதரித்தது!''இந்திய மக்களில் மிகுந்த அறிவுத் திறமை​கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். வானவியல், அடிப்படை அறிவியல், கணிதம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு தனித்திறன் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அவர்களை நமது கல்விமுறைக்குள் கொண்டுவர வேண்டும். ஆங்கிலக் கல்வி இல்லாத இந்தியர்களின் அறிவு பலவீனமானதே. அதைத் திருத்தி அவர்களை ஆங்கிலம் கற்ற இந்தியர்களாக உருவாக்குவதே தனது வேலை'' என்று மெக்காலே தனது கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார்.1834ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள், அவர் பேசிய சொற்பொழிவு முக்கியமானது. ''அரசு அதி​காரத்தில் இந்தியர்களுக்குப் பங்கு வேண்டும் என்றால், அவர்கள் ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் படித்தே ஆக வேண்டும். இந்தியா தன்னைத்தானே ஆண்டுகொள்ளும் திறமை அற்றது. அதை நிர்வாகம் செய்ய பிரிட்டிஷ் அரசு மட்டுமே தகுதியானது. நிர்வாகவியல், ராணுவம், அரசுத் துறை போன்றவற்றில் பணியாற்ற விரும்பும் இந்தியர்களை நாம் தயார்படுத்த வேண்டும்'' என்றார். இந்த ஆணவக் குரலுக்கான எதிர்ப்பு இந்தியப் பத்திரிக்கைகளில் உடனே வெளிப்பட்டது. மறு நிமிடமே, இந்தியப் பத்திரிகைகளை மெக்காலே வசைபாடினார்.உலக வரலாற்றிலேயே இந்தியாவில்தான் அதன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் எனப்படும் IPC-யையும், இந்தியக் கல்வி முறையையும் ஒரே நபர் உருவாக்கி இருக்கிறார். ஆம் நண்பர்களே... மெக்காலேதான் இந்தியாவில் தண்டனை முறை​யையும், கல்வி முறையும் உருவாக்கியவர். ஒருவேளை இரண்டும் ஒன்றுதான் என்று அன்றே முடிவு செய்து விட்டாரோ என்னவோ?எனவே, இந்தியக் கல்விக்கூடங்களை தண்டனைக் கூடமாக்கிய பெருமை மெக்காலேயைத்தான் சாரும். 1835 பிப்ரவரி 2-ம் தேதி அவர் தனது கல்விக் கொள்கையை சமர்ப்பித்தார். 'இனி, இந்தியர்களின் தாய்மொழியாக ஆங்கிலம் உருமாறிவிடும்’ என்று மெக்காலே அன்று பேசிய பேச்சு இன்று நடைமுறை யாகி விட்டது.  இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவதற்காக இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இந்திய ஆங்கிலம் என்ற தனி வகையே அப்படித்தான் உருவானது.

ஆங்கிலத்தை உச்சரிப்பதில் இந்தியர்களுக்கு உள்ள பிரச்னையை வெள்ளைக்காரர்கள் கேலி செய்து சந்தோஷப்பட்டார்கள். ஆங்கிலப்புலமை கொண்ட உயர்தட்டு இந்தியர்கள், தாங்களும் இங்கிலாந்துவாசிகளுக்கு சமம் என்று லண்டனுக்கு படிக்கப் போனார்கள். ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார்கள். அதிகாரிகளாகப் பதவியேற்று, சொந்த மக்களையே துன்புறுத்தத் தொடங்கினார்கள். அவர்களின் ஒரே சொத்து ஆங்கிலம்தான். இந்தியச் சமூகம், தனது சொந்த மொழியைப் புறக்கணித்த வரலாறு அப்படித்தான் தொடங்கியது.மெக்காலே சொன்னது போல பண்டைய இந்தியாவில் கல்வி மோசமாக  இருந்ததா? அறிவியலும் இலக்கியமும் முறையாகக் கற்பிக்கப்படவில்லையா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நன்றி ஜூனியர் விகடன் 

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வருகை

துளசி கோபால் said...

கல்வி....!~!!!சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா போன இடத்தில் இதைப்பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன். நேரம் கிடைக்கும்போது இந்தச் சுட்டியில் இருக்கும் கடைசிப் படத்தைப் பாருங்கள்.

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-8.html

இராஜராஜேஸ்வரி said...

நிலத்தை இழந்தால் மீட்டுவிடலாம், மொழியை இழந்து விட்டால்... மீட்கவே முடியாது என்பதை இந்திய வரலாறு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

திருத்தப்பட வேண்டிய வரலாறு..
தண்டிக்கப்பட்ட நியாயங்கள்..

RMY பாட்சா said...

நன்றாக கூறிநிர்கள் நண்பரே...
“அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை.”
அன்று தூக்கிய பல்லக்கு இன்னும் நாம் சுமக்குகிரோம்.
அன்று தூக்கிய பல்லக்கு சுகத்தை இன்னுமா!!!!!!!!!!!
வேண்டாம் என்இனமே.