Oct 28, 2011

பூமிக்கு ஆபத்து இல்லை சூரியனை நெருங்கி வரும் வியாழன்



சூரியனுக்கு அருகே வியாழன் கிரகம் நெருங்கி வரும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது:
சூரியக் குடும்பங்களில் உள்ள கிரகங்களில் வியாழன் கிரகம் மிகப் பெரிது. சூரியனைச் சுற்றும் போது 398.9 நாள்களுக்கு ஒரு முறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு இன்று (29-ந் தேதி) நடக்கவுள்ளது. இதனை நாம் பூமியில் இருந்தே எளிதாகக் காணலாம்.
பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கு இடையே உள்ள தூரம் 92 கோடி கிலோ மீட்டர். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்து விடும். இந்த தூரம் 92 கோடி கிலோ மீட்டரிலிருந்து இருந்து 59.3 கோடி கிலோ மீட்டராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவை நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அது நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாகக் காணப்படும். இந்த நிகழ்வு ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் என்றாலும் நம்மால் மூன்று நாள்களும் தெளிவாக வியாழன் கிரகத்தை பார்க்கலாம். இதனை நேரடியாகவும், டெலஸ்கோப் வழியாகவும் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் 29 முதல் 31-ந் தேதி வரை இரவு 7 மணியில் வியாழன் கிரகத்தைப் பார்க்கலாம். பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்லா கோளரங்க நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதே போன்றொரு நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதியும் மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும் என்றார்..
Posted By: கோவீந்தராஜ்

கிரிக்கெட் வீரர் காம்பீர் நடாஷா ஜெயின் திருமணம்




இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் நடாஷா ஜெயின் திருமணம் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பண்ணை வீட்டில்
கோலாகலமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


 Posted By: கோவீந்தராஜ்

அத்வானி ஆவேசம் ஊழல் விஷயத்தில் மென்மை போக்கு என்ற பேச்சிற்கே இடமில்லை


ஊழலுக்கு எதிரான தனது யாத்திரையின் இரண்டாவது கட்டப் பயணத்தை, அத்வானி, மதுரையில் இருந்து நேற்று துவக்கினார். இதற்காக, மதுரை வடக்கு மாசி வீதி சந்திப்பில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: வெள்ளையர்கள் இந்த நாட்டை 1757 முதல் 1947 வரை ஆண்டனர். அப்போது, இந்தியாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தியா, வளர்ச்சி பெற அனுமதிக்கப்படவில்லை. அந்த 200 ஆண்டுகளில் அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களின் மதிப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கும். சுதந்திரம் பெற்றதும், நம் தலைவர் எல்லாம், இந்தியா வல்லரசு நாடாகிவிடும். இனி இங்கு குடிநீர் பிரச்னை, மின் தட்டுப்பாடு, வறுமை இருக்காது என எதிர்பார்த்தனர். ஆனால், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும், நாம் இன்னும் வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியவில்லை.

அதே சமயம், இந்திய நாட்டு கறுப்புப் பணமும், ஊழல் சொத்துக்களும், சுவிஸ் வங்கியில் கோடி கோடியாக முதலீடு செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பீடு 25 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் 200 ஆண்டுகள் நம்மை ஆண்டு, ஒரு லட்சம் கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டனர். ஆனால், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், 60 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். "யார், எவ்வளவு முதலீடு செய்தாலும் அதற்கான கணக்கு கேட்க மாட்டோம். உரிமையாளர் தவிர வேறு யார் கேட்டாலும், விவரம் சொல்லவும் மாட்டோம்' என, சுவிஸ் அரசு சட்டமே இயற்றியிருந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு, ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. அதில், "தவறாக சம்பாதித்து முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை, சம்பந்தப்பட்ட நாடுகளிடம், சுவிஸ் வங்கிகள் அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, சுவிஸ் அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, தவறான வழிமுறையில் சம்பாதித்து முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பட்டியலை தருவதற்கான முடிவை எடுத்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி, "கறுப்புப் பணத்தை மீட்க இதுவே நல்ல தருணம். அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. அதனால் தான், ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான எனது இந்த ரத யாத்திரையை துவக்க நேர்ந்தது. தங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க வேண்டும் என்ற கோபம், மக்களிடமும் இருப்பதால் தான், செல்லும் இடங்களில் எல்லாம் என் யாத்திரைக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது.

வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இந்தியா கொண்டு வரப்பட்டால், இந்தியாவில் கிராமங்களே இருக்காது. இருந்தாலும், ஆறு லட்சம் கிராமங்களிலும், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு, வறுமை இருக்காது. நல்ல பள்ளி, மருத்துவமனை, குடியிருப்புகள் இருக்கும். எந்த விவசாயியும், தன் நிலத்துக்குப் பாய்ச்ச நீரின்றி நிற்க மாட்டான். நேரு முதல் மன்மோகன் சிங் வரை ஏராளமான ஆட்சியாளர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால், தற்போதைய மத்திய அரசைப் போல, ஊழலில் புரையோடிப்போன ஓர் அரசை, எந்த முடிவும் எடுக்க முடியாமல், முடங்கிக் கிடக்கும் ஓர் அரசை நான் பார்த்ததில்லை. இந்த அரசு முடங்கிக் கிடக்கிறது என்பதற்கு, தமிழகம் தொடர்பான திட்டங்களே சாட்சி.

ஒட்டுமொத்த தமிழகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி எந்தத் திடமான முடிவும் எடுக்கவில்லை. ஜப்பான் விபத்துக்குப் பிறகு, அணுமின் நிலையம் வைத்திருக்கும் அனைத்து நாடுகளும், அவற்றின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்தன. குறிப்பாக, கடல் அருகே இருக்கும் நிலையங்களில் கூடுதல் கவனம் தேவை. இப்பிரச்னையில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுப்பதாகக் காணோம். வளர்ச்சிப் பணிகள் தேவை தான். அதற்காக மக்களின் பாதுகாப்பை விலையாகக் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி, தமிழக மீனவர்கள் பிரச்னையை கடுமையானதாகக் கருதுகிறது. இலங்கை போலீசாரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கடற்படையினரால் கொல்லப்படுவதும் தொடர்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.

 Posted By: கோவீந்தராஜ்

துணை மேயர் வேட்பாளர்கள் அதிமுக அறிவிப்பு








 சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளுக்கான துணை மேயர் வேட்பாளர்களை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 சென்னை துணை மேயர் வேட்பாளராக பெஞ்சமினும்,
 மதுரைக்கு கோபால கிருஷ்ணனும்,
 ஈரோடுக்கு கே.சி. பழனிச்சாமியும்,
 சேலத்திற்கு நடேசனும்,
 வேலூருக்கு தர்மலிங்கமும்,
 கோவைக்கு சின்னதுரையும்,
 திருப்பூருக்கு குணசேகரனும்,
 திருநெல்வேலிக்கு கணேசன் (எ) ஜெகந்நாதனும்,
 திருச்சிக்கு ஆசிக் மீராவும்,
 தூத்துக்குடிக்கு சேவியரும் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி ! அன்புடன்:கோவீந்தராஜ் Posted By: கோவீந்தராஜ்

Oct 24, 2011

திகாரில் தீபாவளி கனிமொழி நவ.3க்கு தீர்ப்பு தள்ளிவைப்பு



கனிமொழியின் வக்கீல் அல்தாப் அகம்மது தனது வாதுரையில் , எனது கட்சிக்காரர் மீதான வழக்கில் விசாரணை முடிந்து குற்றச்சாட்டும் பதிவாகி முடிந்து விட்டது. இதனால் சாட்சியக்களை அழிப்பார் என்றோ கலைப்பார் என்றோ என்பதில் கேள்வி எழவில்லை. மேலும் இவருக்கு எந்தவொரு நிபந்தனை வேண்டுமானாலும் கோர்ட் விதிக்கட்டும், எந்நாளில் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்நாளில் தவறாமல் ஆஜராகி விடுவார் என்றும் கூறினார்.

இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கனிமொழியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கனிமொழிஒரு பெண் , பட்டதாரி அவர் ஒரு எம்.பி., இதனால் இவருக்கு ஜாமின் வழங்க வேண்டும், மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது உள்ளிட்ட சரத்துக்களை வலியுறுத்தி இன்று ஜாமின் மனு விவாதத்தை அவரது வக்கீல்கள் எடுத்துரைத்தனர். இருப்பினும் ஜாமின் உத்தரவு வரும் 3 ம் தேதிக்கு தள்ளிப்போனது. .