Feb 27, 2013

புலித்தடம் தேடி...தமிழ் பிரபாகரன் - பாகம் 17

வெளிநாட்டுச் சுரண்டல் நிறுவனங்களுக்குக் காடுகளைத் தாரைவார்த்துவிட்டு பூர்வகுடிகளை வெளியேற்றி வரும் இந்திய அரசு, மற்றொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் எப்படித் தலையிடுவது என்று சொல்லிக்கொண்டே இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களைப் பறிப்பதற்கு உதவியுள்ளதுதான் வேதனை.
அதைப் பற்றிய நிலவரங்களை அறிய, அரசியல் சார்ந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், 2006 காலப் பகுதியில் சம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலங்கள், அனல் மின் நிலையக் கட்டுமானத்துக்காக’ என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், இந்த ஆறு வருட கால ஓட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.

இலங்கையின் மின்சார சபையோடு இணைந்து இந்திய நிறுவனம் ஒன்றும் அனல் மின் நிலையப் பணிகளில் ஈடுபடும் என்று சொல்லப்பட்டது.  அதற்கான செலவுகளை இந்தியாவும் இலங்கையும் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளும் என்று ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

ஆனால், அந்த ஆக்கிரமிப்புப் பகுதிகள் இராணுவத்துக்கு சொந்தமானதாக மாறி விட்டதே தவிர, எந்த அனல் மின்நிலையப் பணிகளும் இப்போது வரை நடப்பதாகத் தெரியவில்லை.

அங்கிருந்து நாங்கள் துரத்தி அடிக்கப்படும்​போது, நிராதரவாகத்தான் ஓடி வந்தோம்.

இந்த ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அனல் மின் நிலையம் கட்டி அதில் கிடைக்கும் லாபத்தைவிட பல மடங்கு லாபத்தை விவசாயத்திலும் மீன்பிடியிலும் எடுக்கலாம். அந்த அளவுக்கு வளமான விவசாய பூமி இது.

இங்கிருந்த எங்கள் வீடுகள், கோயில்கள், பள்ளிகள், பொதுக் கட்டடங்கள் எல்லாமே இடிக்கப்பட்டு விட்டன. இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடையாது. எங்கள் சொந்தக் கிராமங்களை விட்டு அகதி முகாம்களில் இன்று இருக்கிறோம்.

பொட்டல் காணிகளைக் காட்டி அரசும் இராணுவமும் அங்கு குடியேறச் சொல்கிறது. எங்கள் காணிதான் எங்களுக்கு வேண்டும். நாங்கள் ஏன் அடுத்தவர் காணியில் இருக்க வேண்டும்? என்று ஆறு ஆண்டுகளாகப் போராடுகிறோம்.

அதனால், எங்களுக்குக் கொடுத்துவந்த நிவாரணப் பொருட்களையும் நிறுத்தி விட்டனர். நிதிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. எப்படியெல்லாமோ எங்களைத் துரத்த வழி தேடுகிறது அரசு.

இத்தனை காலம்தான் எங்களை வாழவிடவில்லை. இப்போதுமா? நாங்கள் இந்தியாவுக்கு என்ன பாவம் செய்தோம். இந்தியாவை எங்கள் நாடுபோலத்தானே பார்த்தோம்? இப்போதும்கூட எங்கள் வீட்டுச் சுவர்களில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் படங்களைத்தானே மாட்டிவைத்து இருக்கிறோம்?

ஆனால், ஆறுதலுக்குக்கூட எங்களுக்கு இந்தியா நல்லது செய்ய விரும்பவில்லை என்று வெம்பினார் அவர். கூடவே வானமும் தன் பங்குக்குக் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

மழையிலேயே அங்கிருந்து கிளம்பினோம். வழியில் புலிகள் கட்டி இருந்த நீதிமன்றம் ஒன்றைக் கண்டோம். அது சேதம் அடைந்து இருந்தது. அதன் முன்சுவரில் காரல் மார்க்ஸின் தத்துவ வரிகள் எழுதப்பட்டு இருந்தன.

அப்போது நண்பர்,  உலகத் தலைவர்கள் கனவு கண்ட தேசமாக எங்கள் நாடு இருந்தது. ஓர் பெண் தைரியமாக இரவில் போகலாம். அறிவாளர்களைக் கொண்டாடிய நாடாக இது இருந்தது.

நீதிகளைக் காத்த மன்றம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? புலிகள் காலத்தில் சொத்து வழக்கே இரண்டு மாதங்களுக்கு மேல் நடக்காது. அனைத்து வழக்குகளும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும். நான் புலிகள் காலத்தில் வாழ்ந்தது எல்லாம் கனவு போல உள்ளது'' என்றார்.

உப்பாறு பாலத்தைக் கடந்தோம். நண்பர் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். முன்பு இந்தப் பாலத்தின் அந்தப்பக்கம் புலிகளும் இந்தப் பக்கம் இராணுவமும் இருந்தனர். புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும்போது கடுமையான சோதனைகள் நடக்கும்.

உணவு எடுத்து சென்றால்கூட, ஒரு வருக்குத் தேவையான உணவை மட்டும்தான் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அளவுக்குக் கட்டுப்பாடு. இந்தப் பாலத்தின் மையப் பகுதியில் நடந்த சண்டையின் இறுதியில் இராணுவத்தினர் 48 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பித்து தாய்லாந்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பல மாதங்கள் கழித்து வந்த அவர், மீண்டும் இராணுவத்தை அழைத்து வந்து புலிகள் மீது இருந்த கோபத்தைத் தீர்த்துக்கொள்ள மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார் என்ற போது, சிங்கள வன்மம் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது. 

திருகோணமலை நகரத்தை நெருங்கினோம். திருகோணமலை, தமிழீழத்தின் தலைநகரம் என்று புலிகளால் அறிவிக்கப்பட்ட நகரம். இந்தத் தலைநகரின் துறைமுகத்தைத்தான் அமெரிக்கா, புலிகளிடம் கேட்டதாகக் கூறப்படுகின்றது.

உலகின் மிக முக்கிய இயற்கைத் துறைமுகங்களுள் திருகோணமலைத் துறைமுகமும் ஒன்று. இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்கு ஆசியத் தலைமையகமாகச் செயல்பட்டது.

இங்கிலாந்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகும், இங்கு இங்கிலாந்தின் கடற்படைத் தளம் இருந்தது. 1957-க்குப் பிறகுதான் அது அகற்றப்பட்டது.

அதேவேளையில், 1951-ல் இலங்கையுடனான ஒப்பந்தப்படி, 'வாய்ஸ் ஒப் அமெரிக்கா நிகழ்ச்சிகள்’ சிலோன் ரேடியோ மூலம் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

இதன் மூலம் ஆசியக் கண்டத்துடனான தன் தொடர்பை அமெரிக்கா தக்கவைத்து இருந்தது.

இந்தத் துறைமுகத்தைப் புலிகள் அன்று அமெரிக்காவிடம் கொடுத்திருந்தால், இந்தியாவின் பாதுகாப்புப் பிடி அமெரிக்காவின் கையில் 25 ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்கும். 1987-ல் ஜெயவர்த்தன-ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் திருகோணமலை துறைமுகம் பற்றிய குறிப்புகள் முக்கியமானவை.

இந்திய நலனுக்குக் குந்தகம் விளையும் என்பதால், திருகோணமலையோ அல்லது வேறு எந்த இலங்கைத் துறைமுகமோ, எந்த அயல்நாட்டின் ராணுவ உபயோகத்துக்கும் தரப்படக் கூடாது என்கிறது அந்தக் குறிப்பு.

இலங்கையின் துறைமுகங்கள் மற்ற நாட்டுக்கு சென்றால், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று அன்றே எண்ணப்பட்டது. ஆனால் இன்று, இலங்கையின் பல துறைமுகங்கள் சீனாவின் வசம்.

இப்படி ஒப்பந்தத்தை மீறி இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தாக சீனாவுக்கு இடம் அளித்துள்ள இலங் கைதான் இந்தியாவுக்கு நட்பு நாடா?

ஊடறுத்துப் பாயும்...

ஜூனியர் விகடன்


புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 16


துரோகத்தால் பறிக்கப்பட்ட உயிர்தான் பாலச்சந்திரனதும். பாலகனைப் பாதகர்கள் கொன்று தீர்த்த படங்களைப் பார்த்து உலகம் இன்று வெம்பித் துடிக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும் போலவே தன் பிள்ளையையும் தேசத்துக்காகக் கொடுத்துவிட்டார் பிரபாகரன்.

நான் ஈழத்தில் இருந்தபோது பாலச்சந்திரன் பற்றிக் கேள்விப்பட்டதை இன்று படங்களாகப் பார்க்கும்போது இதயம் ரணமாகிறது!

வவுனியாவை விடுத்து திருகோண​மலையை அடையும்போது, மாலை 6.30. அடுத்த நாள் பிரபாகரன் பிறந்த நாள். திருகோணமலையின் உட்புற வீதிகள் இராணுவப் பரபரப்போடு இருந்தது.

இரவு ஓய்வு நண்பரின் வீட்டில் என்பதால், ஒரு வாடகை உந்தியில் கிளம்பினோம். வீட்டை அடை​வதற்கு சிறிது தூரத்துக்கு முன், இராணுவ சோதனைச் சாவடியில் சோதனை நடந்தது.

நவம்பரின் இறுதி வாரம் என்பதால், தமிழரின் வீரம் எங்காவது பதுங்கி​யுள்ளதா என்று நோட்டமிட சைக்கிளில் வந்த இராணு​வத்தினர் வீட்டுக்குள் டார்ச் அடித்துப் பார்த்தபடியே சென்றனர். நாங்கள் வீட்டை அடைந்தோம்.

கருணாவுக்கு இணக்கமான ஓர் ஆளை நான் சந்தித்த வேளையில் அவர், ''பிரபாகரன் உடலைக் கண்டறிய கருணாவைத்தான் அரசு அழைத்து வந்தது. அப்போது அவரது மகன் பாலச்சந்திரனைக் கண்டதாக கருணா எங்கள் சிலரிடம் கூறினார்.

'யாரோடு வந்தாய்?’ என்று பாலச்சந்திரனிடம் கருணா அப்போது கேட்டிருக்கிறார். 'அப்பாவோடுதான் வந்தேன்’ என்றானாம் அந்தச் சிறுவன். 'அப்பா எங்கே?’ என்று கருணா கேட்டிருக்கிறார். 'அப்பா எங்கேனு தெரியல’ என்று பாலச்சந்திரன் கூறியதாகக் கருணா சொன்னார்.

தன்னுடைய தந்தைக்கு என்ன ஆனது என்று தெரியாத, அறியாத, புரியாதவனாகத்தான் பாலச்சந்திரன் இருந்துள்ளான்’ என்று அவர் சொன்​னார்.

சனல் 4 இப்போது வெளியிட்ட புகைப்படத்தைப் பார்க்கும்போது, பாலச்சந்திரன் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு வந்து கருணா பார்த்திருக்கலாம். அதன்பிறகுதான், அந்தப் பாலகனை சிங்கள கயவர்கள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றே முடிவுக்கு வர​வேண்டி உள்ளது.

தமிழன்... அதுவும் பிரபாகரனின் இரத்தம் என்றால், பத்து வயதுச் சிறுவன்கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று இனவாதம் முடிவெடுத்ததை இப்போதுதான் உலகம் உணர ஆரம்பித்துள்ளது. ஆனால், கருணாக்களுக்கு என்ன தண்டனை?

புலிகள் இயக்கத்தில் இருந்த வேளையில் கருணா பேசியது... ''போர் என்பதும் பேச்சுவார்த்தை என்பதும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். பல தடவை நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சிங்கள அரசு எங்களை ஏமாற்ற முற்படும்போது, நாங்கள் ஒவ்வொரு படி வளர்ந்து இருக்கிறோம்.

'இலங்கை என்ற தீவுக்குள் தமிழர்களின் சுயநிர்ணயம், தேசியம், எங்களது தாயக பூமி என்ற அடிப்படையில் தீர்வினைக் கேட்டுள்ளோம். அந்தத் தீர்வு தர வேண்டும். அல்லாவிட்டால், நாங்கள் பிரிந்து செல்வோம்’ என்ற விடயத்தை தலைவர் கூறியுள்ளார்.

ஆகவே அதைத் தருவதா, இல்லையா என்பது சிங்கள அரசாங்கத்தைப் பொறுத்தது. அவர்கள் தரா​விட்டால், நாங்கள் எடுப்போம். அதில் மாற்றம் இல்லை.'' அதே கருணா 2009 போருக்குப் பின்னர் பேசிய வார்த்தைகள் இவை...

''அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் ஈராக்கிற்குள் நுழைந்தபோது மனிதாபிமான நடவடிக்கை என்றனர். அந்த மக்களை மீட்கப் போகிறோம் என்றனர். இதேபோல்தான் ஆப்கானிஸ்தானுக்குள் போகும்​போதும் கூறினர். ஆனால், அதைவிட பெரிய மனிதாபிமான நடவடிக்கைதான் எமது பிரதேசத்​தில் நடக்கிறது.

வன்னியிலே பிரபாகரனின் கொடிய பிடிக்குள் சிக்கி இருந்த தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமானப் பணியைத்தான் இராணுவம் (சிங்கள இராணுவம்) செய்து வருகிறது. இன்று வட கிழக்கில் வாழ்கிற மக்கள், எமது ஜனாதிபதி (மகிந்த ராஜபக்ச) கரங்களைப் பலப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்.''

கருணா போன்றவர்களின் துரோகச் சுவடுகள்​தான் லட்சக்கணக்கான தமிழர்களைக் காவு வாங்கியது என்பதை நான் சந்தித்த பலரும் சொன்னார்கள். 'இந்தத் துரோகங்கள் இன்று வேண்டு​மானால் மறைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், காலமும் வரலாறும் மறைக்காது; மன்னிக்​காது’ என்று, ஈழத் தமிழர்கள் பலர் கூறிய 'துரோகம்’ என்ற வார்த்தைதான் என் செவி ஓட்டங்களில் சத்தமாய் ஒலித்துக் கொண்டுள்ளது.

மறுநாள்... பிரபாகரன் பிறந்த நாளின் பகல் பொழுது. பகல் வேளை என்பதால் இராணு​வத்​தின் நடமாட்டம் சற்று தாழ்ந்திருந்தது. கன்னியா வெந்நீர் ஊற்றை நோக்கிச் சென்றோம். இது, இந்துக்களின் பிரசித்திபெற்ற ஸ்தலமாக இராவணன் வரலாறு கொண்டதாக இருந்தது.

இங்கு இயற்கையாகவே ஏழு வெப்ப நிலைகளில் ஏழு வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. ஆனால், அதுவும் இப்போது புத்த வரலாறுகள் கொண்டதாகி விட்டது. அங்கு செல்லும் வழியில், பெயர்ப் பலகையில் தமிழில் இருந்த தெருப் பெயர்களை அழித்திருப்பதைக் கண்டேன்.

கன்னியா வெந்நீர் ஊற்றை அடைந்தேன். அது, பௌத்த ஸ்தலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வரலாற்றுபடி, 'பத்துத் தலை படைத்த ராவணன் தன் தாயாருக்கு இறுதிக் காரியங்கள் செய்வதற்காக தன் உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்திய​தாகவும், அந்த இடங்களில் இருந்து வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும்’ கூறப்படுகிறது.

அந்த வெந்நீர் ஊற்றுகள் தமிழர்களின் மனங்களைப்போல ஒவ்வொரு கொதிநிலையில் கொதித்துக்கொண்டு இருந்தன. இறந்தோரின் 31-ம் நாள் காரியங்களை இந்துக்கள் இங்கு செய்யும் வழக்கம் உள்ளது என்று அருகில் இருந்த நண்பர் கூறினார்.

சிவன் கோயில் அருகே கழிவறை இருந்தது. சதுரமாக இருந்த விநாயகர் கோயிலின் அடித்​தளம் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட இடம் வட்ட வடிவில் புத்தவிகாரை வடிவம் போல மாற்றப்பட்டு இருந்தது. புத்த ஆக்கிரமிப்புக்கு மேலாக, தமிழர்கள் சார்ந்ததை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே தூக்கலாக உள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்றுத் தலத்தை எப்படி எல்லாம் சிங்களர்கள் ஆக்கிர​மித்தனர் என்பதை, அதைத் தமிழர் வசம் மீட்பதற்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் கூறினார். 'சமாதானக் காலத்தில்தான் சிங்களவர்கள் கன்னியா ஊற்றுக்கு வரத் தொடங்கினர். அவ்விடத்தை புத்த வரலாறு கொண்டதாக அவர்கள் எண்ணு​கின்றனர்.

 அப்படி வந்த ஒரு புத்த பிக்கு, அங்கு கோயில் கட்டுமான வேலைகள் நடந்ததைக் கண்டுவிட்டு, 'புத்த புனித ஸ்தலத்தில் ஆக்கிரமிப்பு வேலைகளும், அதை இடிக்கும் வேலைகளும் நடக்கின்றன’ என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அங்கிருந்த பூசாரி அம்மாதான் இந்த வேலைகளுக்கு எல்லாம் காரணம் என்று பொலிஸ் எண்ணியது. அந்த அம்மாவின் முன்னோர்கள் இதே கோயிலுக்கு சொந்தமானவர்கள்தான் என்பது இங்கு சொல்ல வேண்டிய ஒன்று. ஆனால், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துபோது சரியான வாதத்தை சிங்களத் தரப்பால் வைக்க முடியாத காரணத்தால், வழக்கு தள்ளுபடியானது. ஆனால், இவ்வளவு காலம் கடந்து சிங்கள அரசின் பிடியில் அதிகாரம் சென்றதால், எப்படியோ அதுவும் இன்று புத்த ஸ்தலமாக மாறிவிட்டது’ என்றார்.

அதேபோல் கன்னியா ஊற்று அருகே 'வில்கம் விகாரை' என்ற புத்த ஸ்தலம். இது சோழர் காலத்தில் தமிழ் பௌத்தர்களுக்காகக் கட்டப்பட்டது என்றும், இங்கு சிவன் கோயில் இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதுவும் சிங்களவர்களுக்கு உரியதாகி விட்டது.

அடுத்து சம்பூர் அனல் மின் நிலையத்துக்காக நிலம் அபகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களின் முகாம்களுக்குச் சென்றோம். வெளியாட்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடை​யாது. இடம்பெயர்ந்தோர் முகாம்களே இலங்கையில் கிடையாது என்று கூறிவரும் இலங்கை அரசு, இந்த முகாம்களுக்கு என்ன பெயர் சொல்லப்போகிறது?

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களையும் சிங்கள முகாம்​களைப் போலே வைத்துள்ள இந்திய அரசு, இலங்கையில் நேரில் ஆய்வுசெய்துவிட்டு முகாம்களே இல்லை என்று சொல்லிய பொய்க்கு என்ன பதில் சொல்லப் போகிறது? எவ்வளவு அப்பட்டமாக இன்னொரு நாட்டின் மக்களை தங்களின் தேவைக்கு காந்தீய தேசம் அடிமைப்​படுத்தி வைத்திருக்கிறது!

இலங்கையின் திரிகோணமலை மாவட்​டத்தைச் சேர்ந்த கடற்கரைச் சேனை, சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித் தீவு ஆகிய கிராமங்களில் இருந்து உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 'மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம்’ சில கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கு 12.06.2008-ல் அனுப்பியது. அதில்,

'1. அனல் மின் நிலையத்துக்கான இலங்கை - இந்தியக் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எமது கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ள ஒதுக்கீட்டை, மீள்பரிசீலனைசெய்து ரத்து செய்யுங்கள்.

2. அதற்குப் பதிலாக கிராமங்கள், குடியிருப்புகளைப் பாதிக்காத வகையில் நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்.

3. மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசங்களில் எம்மைக் குடியேற்றும் முயற்சியைத் தடுத்து, சொந்தக் கிராமங்களிலேயே மீள் குடியேற்றம் செய்யுங்கள்.

காந்தி தேசத்தின் கருணையை தங்கள் மூலமாக எதிர்பார்க்கிறோம், என்று அந்தக் கோரிக்கைக் கடிதம் முடிவுறு​கிறது.

அதேசங்கம் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், 'இப்படியான நில ஆக்கிரமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 8,000 மக்களின் வாழ்விடங்கள் பறி போகும்.

தனித்தமிழ்ப் பிரதேசமான மூதூர் கிழக்கு படிப்படியாக அபகரிக்கப்பட்டு, இங்கு வாழும் 18 ஆயிரம் மக்களும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவர்.

எம் தமிழ் மன்னன் இராவணனின் நினைவுகளோடு நிலைத்திருக்கும் திருகோணமலையின் இதய பூமி, சோழ மன்னர்களின் காலடிபட்ட சொர்க்க பூமி, அவர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க இந்தப் பிரதேசம் பேரினவாதப் பிடியில் சிக்கி காணாமல் போய்விடும்.

இதைத் தடுத்து நிறுத்தி இந்தப் பேராபத்தில் இருந்து இந்தப் பிரதேசத்தைக் காப்பதற்கும், நாம் மீண்டும் குடியேறி இயல்பு வாழ்வை மீட்டுக்கொள்வதற்கும் தங்களின் தயவை எதிர்பார்க்கின்றோம்.

இந்திய அரசுடன் தாங்கள் கொண்டுள்ள உறவையும், காங்கிரஸ் கட்சிக்குள் தங்களுக்குள்ள தனித்துவமான செல்வாக்கையும் பயன்படுத்தி, இந்த இக்கட்டான நிலையில் இருந்து எம்மை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நம்பிக்கை​யுடன் காத்திருக்கின்றோம்’ என்று அந்தக் கடிதம் நிறைவடைகிறது.

அந்தச் சங்கம் திருகோணமலையில் இப்படியான சிங்கள ஆக்கிரமிப்புகள் நடந்து விடும் என்று எச்சரித்த ஆக்கிரமிப்புகள் இன்று நடந்தே விட்டன. தமிழர்களின் இதய பூமி நாசகதி ஆக்கப்பட்டுள்ளது.

அனல் மின்நிலைய நில ஆக்கிரமிப்புக்காகத்தான் 2006-ல் புலிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் சம்பூர் மக்கள் மீது செல்குண்டு தாக்குதல் நடத்தப்​பட்டு உயர் பாதுகாப்பு வளையமாக தமிழர் கிராமங்கள் மாற்றப்பட்டது. அந்த இடத்தில் நிற்கிறேன்!

ஊடறுத்துப் பாயும்...

ஜூனியர் விகடன்


Feb 25, 2013

சத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு!


துரையில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவருபவர் வரதராஜன்.  சத்தமே இல்லாமல் இவர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு பலரையும் சலாம்போட வைக்கிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கும். இவரது பள்ளியில் பெரியார் படத்தின் கீழ் சிந்தனை என்றும், காமராசர் படத்தின் கீழ் செயல் எனவும் எழுதிப் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார்.  
வரதராசனிடம் பேசியதில், 'தமிழகத்தின் கல்விப் புரட்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடனில் பெரியார்  நூற்றாண்டு விழாவின்போது இடம் பிடித்த வாசகத்தைத்தான் இப்படி மாற்றி எழுதியுள்ளேன்'' என்று சிரிக்கிறார்.
ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் ஆக்சிஜனைப் பரிமாறும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. ஹீமோகுளோபின்  குறைபாடு உடலில் ஏற்பட்டால் 'அனிமியா’ எனப்படும் இரத்தசோகை, மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுற்ற காலம்முதல் பிரசவம்வரை தாய்க்கும், சேய்க்கும் இரத்தப் பரிமாற்றம் உண்டு. கருவுற்ற பெண்ணுக்கு ரத்தச்சோகை ஏற்படும்போது, குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு  விழிப்பு உணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக ஹீமோகுளோபின் மாத்திரைகளை வழங்குதல், மேலும் மதுரையைச் சேர்ந்த 10 தலைசிறந்த மருத்துவக்குழுவைக்கொண்டு இலவசமாக மருத்துவச் சேவையையும் ஆற்றிவருகிறார் இவர்.
புத்தகங்களைப் படிப்பதும், அவற்றைச் சேகரிப்பதும் மக்களிடையே இன்று  குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் இவர் 4,000 புத்தகங்களுக்கு மேல் சேமித்து வைத்துள்ளார். விபத்து, பிரசவம் முதலானவற்றில் ரத்த இழப்பு அதிக அளவில் ஏற்படுவதுண்டு. குறிப்பிட்ட வகையான இரத்தம் வேண்டும் என உறவினர்கள், நண்பர்கள்  என அனைவரும் அலைபாயும் நிலை இன்றும் நிலவுகிறது. அதற்காகவே இவர் தந்தை பெரியார் குருதி கழகம் என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.
'மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி போன்ற இடங்களில் எங்கள் பெரியார் குருதி கொடை கழகத்தை நிறுவியுள்ளோம் இதன் மூலம் வருடம் 600 பேருக்கு மேலாக ரத்த தானம் செய்யவைக்கிறோம். நான் இதுவரை 77 முறை இரத்ததானம் செய்துள்ளேன். இதற்காக  தமிழக அரசிடம் இருந்து பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்!' என்றார்.  
சத்தமே இல்லாமல் சேவைபுரிந்து வரும் இவர், மதுரையில் சிறந்த ரத்த தான தொண்டருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்!

க.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்.
நன்றி: என்விகடன்