Aug 2, 2014

நலம் 360' 7

நலம் 360’ – 7

‘காசு, பணம், துட்டு, மணி, மணி…’ – என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். ‘இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்… எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் ‘துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.

ரத்தக் கொதிப்பு நோய் வர, மரபும் ஒரு முக்கியமான காரணம். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த இந்த ரத்தக் கொதிப்பு, சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதில் 25 வயதில் எல்லாம் இப்போது தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த நம் மூத்தக்குடியின் அனுபவ முதுமொழியான ‘உப்பில்லாப் பண்டம் (சீக்கிரம்) குப்பையிலே’ என்பதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, மானம் ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதிலும், ‘நாங்கள் கூடுதலாக எந்தச் செயற்கை கெமிக்கலும் சேர்க்கவில்லை’ என்று கூவிக் கூவி விற்கப்படும் குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் முட்ட முட்டக் குடிப்பதிலும் உப்பு தப்பாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது.
உப்பு, ஊறுகாயில் மட்டும்தான் இருக்கும் என்பது தப்புக் கணக்கு. இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. ‘கொஞ்சம்தானே… எப்போவாவதுதானே!’ என வயிற்றுக்குள் கொட்டப்படும் சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு, ‘ரெடி டு ஈட்’ எனும் அத்தனை துரித வகையறா உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். சுவையூட்டுவதாகச் சொல்லிவரும் மோனோ சோடியம் குளூட்டமேட், ‘உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்குமாக்கும்’ எனச் சொல்லிச் சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட், சோடியம் பை கார்பனேட் வகையறாக்கள் எல்லாம் உப்புச் சத்தான ‘சோடியம்’ நிரம்பியவையே. கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பன்னீர் பட்டர் மசாலா… என, துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய நாய் குணம், நாலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளிலேயே வாலாட்டி வளர்கிறது.
சாது பொமரேனியனாக இளமையில் இருக்கும் இந்தக் குணம் ஆவேச அல்சேஷனாக ஆர்ப்பரிக்கும்போது, ‘சார்… நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும்… அதுவும் காலம் பூரா!’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, ‘சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், ‘வீட்ல பொண்டாட்டி இம்சை… ஆபீஸ்ல சீனியர் தொல்லை… இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது?’ என அலுத்துக்கொள்வோர், ‘நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்!’ என மருந்து சாப்பிட மறுப்போர் என விதவிதமான காரணங்களைச் சொல்லி, ரத்தக் கொதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பரந்த மனசுக்காரர்கள் இங்கே அதிகம்.
சரி, ‘அந்தக் கொதிப்பைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா?’ என்று கேட்டால், ‘ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். ‘136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, ‘அடடா… இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு?’ என நாம் குழம்பித் தவிப்போம்!
ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்கிறார்கள். சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக் கீரை, தக்காளி, கேரட் வரை பல உணவுக் காய்கறிகளில் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் மருந்துக்கு துணை நின்று பயனாகும் உணவே (functional food ingredient) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது.
நம் சித்த மருத்துவ மரபு வெகுகாலம் பயன்படுத்தி வந்த வெண்தாமரை சூரணத்துக்கு, இதயத்தில் இருந்து வெளியாகும் ‘கரோடிட் நாடி’யின் திடத்தன்மையைச் சீராக்கி ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதை முதல்கட்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இன்னும் பலகட்ட ஆய்வுகளைக் கடந்து உண்மை ஊர்ஜிதமாகும்பட்சத்தில், வெண்தாமரை உலகெங்கும் உற்றுப் பார்க்கப்படும். இந்த உள்ளூர் பூக்களை சரஸ்வதிக்கு மட்டும் சமர்ப்பித்துவிட்டுப் போகாமல், அதைக் கொஞ்சம் தேநீராக்கிக் குடித்தோ, சித்த மருத்துவர்களிடம் அதன் மூலிகை சூரணத்தைப் பெற்றோ ஆரம்பக்கட்ட லேசான ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பார்த்த முதல் நாளே பற்றிக்கொள்ளும் காதல்போல, முதல் அளவீட்டின்போதே எக்குத்தப்பாக எகிறி இருக்கும் கொதிப்புக்கு, முலிகை மருந்துகள் மட்டும் நிச்சயம் போதாது. நவீன மருத்துவமும் மிக மிக அவசியம்.
சீனாவில் ரத்தக் கொதிப்பு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் போனால், அங்கே அவரை பரிசோதிக்கும் மருத்துவர், அவர் அறையிலேயே அதை உடனே குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம்கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக ‘தாய்சீ’ நடனமும் கூட்டாகப் பரிந்துரைக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ, நவீன மருத்துவ மாலிக்யூலும், பாரம்பரிய மூலிகையும் ஒரே சமயத்தில் பரிந்துரைக்கப்படும்போது, ஒரு மருந்தின் உயிர்செயல்தன்மையை (bio availability) மற்றது மாற்றுமா என்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இரு துறைகளிலும் பன்னெடுங்காலமாக ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் நம் ஊரிலோ, ‘எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியாது. அது உங்க இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட பாருங்க’ எனப் பாரம்பரியமும் மேற்கத்தியமும் எந்தப் புள்ளியிலும் ஒருங்கிணைய மறுப்பதில், இந்திய இதயங்கள் மெள்ள மெள்ள துடிப்பைத் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றன!
உறக்கத்தைத் தொலைக்கும் பழக்கம் உள்ள நகரவாசிகளுக்கு 40 சதவிகிதமும், கிராமங்களில் எதிர்பாராத அளவாக 17 சதவிகிதமுமாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் இருக்கிறார்கள் என்கிறது பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் கணக்கு. இரு தரப்பிலும் எக்குத்தப்பாக எகிறும் இதன் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், மது. ‘கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லை, வொயின் நல்லதாமே, இது பொம்பளைங்க குடிப்பதாமே..!’ என முழுவீச்சில் நடைபெறும் பொய்ப் பிரசாரமும், ‘இந்த வருஷம் இன்னும் அதிகமா வித்துக் காட்டணும்’ என அரசாங்கமே அட்டகாசமாக நடத்தும் மது வணிகமும் இந்தப் புள்ளிவிவரம் பொங்கி எழ ஊர்ஜிதமான காரணங்கள்.
தனியே நடக்க முடியாமல், கையில் உருட்டி ஒரு வாய் சாப்பிட முடியாமல் முடங்கி இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கு, ஜேசுதாஸ் பாடல் பின்னணியுடன் தூக்கிச்செல்ல ‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளைகள் கிடையாது. வாரம் மூன்று நாள் டயாலிசிஸ் செய்ய வசதி இல்லாத மகனின் மீது கரிசனம் கொண்டு, ‘அவனுக்கு எதுக்குச் செலவு?’ என முக வீக்கத்துடன், ‘இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்!’ எனச் சொல்லும் பெற்றோர்கள்தான் இங்கு ஏராளம். ‘நாளைக்கு கண்டிப்பா தீம் பார்க் போலாம்டா செல்லம். இப்போ சமத்தா தூங்கு’ என மகளை உறங்க வைத்துவிட்டு, மகள் விழித்துப் பார்க்கையில், மருத்துவமனைப் படுக்கையில் குழாய்களுக்கு நடுவில் மாரடைப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் இத்தனையும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியதே!
ரத்தக் கொதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து களைத்து வீட்டுக்குச் சென்றதும் எதிர்கொள்ளும் மனைவியை, ‘அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய, கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?…’ எனச் சிலாகிக்க வேண்டாம். ‘என்னடா செல்லம்… கண்ணு மின்னுது. என்ன விசேஷம்?’ என்ற சின்ன விசாரிப்புகூட அவளுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, ‘வெண்ணிறப் புரவியில் வந்தவனே! வேல்விழி மொழிகள் கேளாய்…’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, ‘உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல… அதனாலயா இருக்கும்!’ என்று சிரித்துக் கைபற்றினால், ரத்தக் கொதிப்பு வருகை நிறையவே தள்ளிப்போகும். அப்படியான தருணங்களே ரத்தத்தில் கொதிப்பு தித்திப்பாக மாறும் ரசவாதம் நிகழும்!
நன்றி -விகடன்

உணவு யுத்தம்!-26

பால் பவுடரின் கதை
மார்க்கோ போலோ தனது பயணக் குறிப்பில் சீனாவில் உள்ள போர் வீரர்கள் சூரிய வெப்பத்தில் பாலைச் சுண்டவைத்துப் பசை போலாக்கித் தங்களுடன் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். 1802-ம் ஆண்டு ரஷ்யாவின் ஒசிப் கிர்க்கோவ்ஸ்கி என்பவர் முதன்முதலாகப் பாலை காய்ச்சி பவுடர் செய்வதை அறிமுகப்படுத்தினார். 1832-ல் பால்பவுடர் விற்பனை தொடங்கியது.

1865, ஜஸ்டிஸ் வான் லிபெக் என்பவர் குழந்தைகளுக்கான சிறப்புப் பால் பவுடரை அறிமுகம் செய்தார். அது லிபெக் ஃபார்முலா என அழைக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் பால் பவுடர் விற்பனை தனித் தொழிலாக வளரத் தொடங்கியது.
பால் டின்களில் தொடங்கி ஃபார்முலா வரை வளர்ந்துள்ள குழந்தைகள் உணவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் முன், தாய்ப்பால் தருவது எப்படி உலகெங்கும் மரபாகப் பின்பற்றி வந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் தொன்மையான பழக்கம். இதன் பின்னால் அறியப்படாத வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.
கி.மு 950-களில் கிரேக்கத்தில் உயர் வகுப்புப் பெண்கள் தாய்ப்பால் தர மறுத்து தாதிகளைப் பணிக்கு அமர்த்திக்கொள்வார்களாம். தாதிகள்தான் மூன்று வயது வரை குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும்.
தாதிகள் ஆண்குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். 25 வயது முதல் 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற விதியிருந்தது. அதே நேரம் தாதி தனது குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் பால் கொடுத்த பிறகே, அவள் வேறு குழந்தைக்குப் பால் தர அனுமதிக்கப்படுவாள். அடிமைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
பைபிளில்கூடப் பாரோ மன்னரின் மகள் மோசஸை வளர்ப்பதற்காக ஒரு தாதியை நியமித்திருந்தாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. கி.மு 300-களில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டது. இப்படிக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெண்கள், அதைப் பராமரிக்க வழியின்றித் தூக்கி எறிந்துவிடுவார்களாம்.
அநாதைகளாக வீசி எறியப்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக் காப்பாற்றுவதற்கு எனத் தனித் தாதிகள் இருந்தார்கள். அவர்கள் அடிமையாக இருந்த பெண்கள், இவர்கள் அநாதை குழந்தைகளுக்குப் பால் கொடுத்து வளர்த்து எடுப்பதற்கு அவர்களுக்கு அரசே ஊதியம் அளித்தது.
தாதிகள் பால் கொடுப்பதற்கு ஏற்றவர்களா எனப் பரிசோதனைசெய்ய, அவர்கள் மார்பில் விரல் நகத்தால் கீறி பாலின் தன்மை எப்படியிருக்கிறது, பால் எவ்வளவு வேகமாகச் சுரக்கிறது எனப் பரிசோதனைசெய்து பார்ப்பார்களாம். அதில் தேர்வு செய்யப்படும் பெண்ணே குழந்தைக்குப் பால் தர அனுமதிக்கப்படுவாள்.
ரோமில் மருத்துவராக இருந்த ஒரிபசியஸ், தாதிகளுக்கான உடற்பயிற்சிகளை உருவாக்கி இருக்கிறார். குழந்தைகளுக்குப் பால் தருவதற்காகத் தகுந்த உடல் ஆரோக்கியம் வேண்டும். அதற்காகச் சில அவசியமான உடற்பயிற்சிகளைத் தாதிகள் மேற்கொள்ள வேண்டும் என, சில பயிற்சிகளை வரையறை செய்திருக்கிறார்.
உலகின் பலநாடுகளிலும் தாதிகளைவைத்து பிள்ளையை வளர்ப்பது பண்பாடாகவே கருதப்பட்டது. மத்திய காலத்தில் இதற்கு எதிர்ப்புக்குரல் உருவானது. ‘பெற்ற தாயே தனது குழந்தைக்குப் பால் தர வேண்டும். தாதிகளால் பால் தரப்படும் பிள்ளைகள் அவர்களின் இயல்பைப் பெற்றுவிடுகிறார்கள். ஆகவே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற எதிர்ப்புக்குரல் உருவானது. ஆனால், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட இயலவில்லை.
17-ம் நூற்றாண்டில் பதிவு பெற்ற தாதிகள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் ஃபிரான்ஸில் உருவானது. இதன்படி தாதிகள் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். தான் வளர்க்கும் குழந்தை இறந்துபோய்விட்டால் தாதி கடுமையாகத் தண்டிக்கப்படுவாள் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.
விக்டோரியா யுகத்தில் இங்கிலாந்தில் தாதிகளாக வேலைசெய்த பலரும், இளவயதில் முறையற்ற உறவின் காரணமாகக் குழந்தை பெற்றவர்கள். தங்களின் வாழ்க்கைப் பாட்டுக்காகக் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டார்கள்.
தாதிகளை வைத்துக்கொள்வது பணக்கார குடும்பங்களின் நடைமுறையாக இருந்ததைத் தொழில்புரட்சி மாற்றியமைத்தது. தொழில்புரட்சியின் காரணமாக நகரங்களை நோக்கி ஏழை எளிய மக்கள் குடியேறத் தொடங்கியதும், வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைத் துணைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு மிகக் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது.
பால் பவுடர் அறிமுகமானதும், பால் பாட்டில்கள் விற்பனைக்கு வந்ததும், ரப்பர் காம்புகள் அறிமுகமானதும் தாதிகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 17-ம் நூற்றாண்டு வரை தோல் அல்லது மரத்தால் செய்யப்பட்ட புட்டிகளே பால் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. 18-ம் நூற்றாண்டில் பீங்கானில் பால் கோப்பைகள் செய்யப்பட்டன.
கண்ணாடி தொழிற்சாலைகளின் வரவுக்குப் பிறகே குழந்தைகளுக்கான பால் புகட்டுவதற்கான பாட்டில்கள் செய்யப்பட்டன. 1851-ல் ஃபிரான்ஸில் பால் புகட்டும் கண்ணாடி பாட்டில் விற்பனைக்கு வந்தது. அப்போது அதன் முனையில் கார்க் பொருத்தப்பட்டிருந்தது.
இங்கிலாந்தில் குழந்தைகள் குடிப்பதற்கு ஏற்றார்போல வாழைப்பழ வடிவ பாட்டில் அறிமுகமானது. அது சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. 1845-ல்தான் ரப்பரில் செய்யப்பட்ட உறிஞ்சு காம்பு பாட்டிலில் பொருத்தப்பட்டது.
1894-ல் இரண்டு பக்கமும் முனை கொண்ட பாட்டில் தயாரிக்கப்பட்டது. இதன் ஒரு முனையில் ரப்பர் காம்பு மாட்டப்பட்டது. கழுவி பயன்படுத்த எளிதாக இருந்த காரணத்தால் இது உடனடியாகப் பரவியது.
18-ம் நூற்றாண்டில்தான் முதன்முறையாகத் தாய்ப்பாலில் என்ன சத்துகள் இருக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது. அதன் விளைவாகவே அதற்கு இணையாக எந்தப் பால் உள்ளது என சோதிக்க பசு, எருது, ஆடு கழுதை போன்றவற்றின் பால் பரிசோதனை செய்யப்பட்டன. தாய்ப்பாலுக்கு நிகரான ஒன்றை செயற்கையாக உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இன்றும் அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
முழுப் பால் சுமார் 87.5 சதவிகித நீர் உள்ளடக்கம் கொண்டது. பாலில் உள்ள நீர்த் தன்மையை அகற்றி, அதைப் பொடியாக மாற்றும் தொழில்நுட்பம் அறிமுகமானதால் பால் உற்பத்தியில் பெரிய மாற்றம் உருவானது.
100 லிட்டர் பாலை இப்படி நீர்தன்மை அகற்றிப் பொடியாக்கினால் 13 கிலோ பால் பவுடர் கிடைக்கும் என்கிறார்கள். இன்று பால் பவுடர் உற்பத்தியில் நியூசிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. பாலை பவுடர் ஆக்குவதால் அதில் உள்ள கொழுப்பு சத்து ஆக்டைஸ்டு கொலஸ்ட்ராலாக மாறிவிடுகிறது. இது உடல் நலத்துக்கு ஏற்றது இல்லை எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த காலங்களில் குழந்தை இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் குடித்திருக்கின்றன. இன்று அதிகபட்சம் ஆறுமாத காலம் தாய்ப்பால் புகட்டுகிறார்கள். சில குழந்தைகள் வாரக்கணக்கில் மட்டும் தாய்ப்பால் குடிக்கிறார்கள். பிறகு, புட்டிப்பால்தான்.
‘ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தோல்சீவி வேகவைத்த ஆப்பிள் தரலாம். சத்து மாவு, கோதுமை, ஜவ்வரிசி கூழ் போன்றவையும் கொடுக்கலாம். ஏழு அல்லது எட்டு மாதங்களில் மசிக்கப்பட்ட காரட், உருளைக் கிழங்கு, ரொட்டி பால் சேர்த்துக் குழைய வேக வைத்த பருப்புச் சாதம், பால் சாதம் போன்றவற்றைத் தரலாம்.
ஒன்பது அல்லது பத்து மாதங்களில் திட உணவுகளாக இட்லி, தோசை, முட்டை போன்றவற்றைத் தரலாம். அதன் பிறகு வழக்கமான வீட்டு உணவுகள் அறிமுகம் செய்யலாம். குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என எல்லா உணவையும் மிக்ஸியில் அடித்துத் தந்தால் அதுவே பழக்கமாகிவிடும். பின்பு, அது மசிக்காத உணவைச் சாப்பிடாது.
பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகள் நல்ல மொழுமொழு எனக் குண்டாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி இருந்தால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என எண்ணுவது தவறு.
குழந்தைகளுக்கு என்ன உணவு எத்தனை மணிக்கு தரப்பட்டது… அது குழந்தைக்குப் பிடித்துள்ளதா, ஒவ்வாமை ஏற்பட்டதா என்பது குறித்து ஒரு உணவு டயரி ஒன்று பின்பற்றப்பட வேண்டும். அப்படி ஒவ்வொரு வயதுக்கும் ஒரு உணவு டயரி பின்பற்றப்பட்டால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடிவதுடன், நோய் உருவாவதற்கான காரணத்தையும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்’ என்கிறார் குழந்தைகள் மருத்துவர் மைக்கேல் டிராக்.
ஊரையும் உறவுகளையும் இழந்துவரும் இன்றைய பெருநகர வாழ்க்கையில் மூத்தோர் வழியாக அறிந்துகொள்ள வேண்டிய உணவுப் பழக்கம், குழந்தை வளர்ப்பு, உயிரினங்களிடம் காட்ட வேண்டிய அக்கறை, பரஸ்பர நேசம் போன்ற எதையும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இன்றைய உணவுக் கோளாறுகளும் மருத்துவப் பிரச்னைகளும்.
ஆகவே, சரியான உணவைத் தேர்வுசெய்வது என்பது மட்டும் இதற்குத் தீர்வாகிவிடாது. ஆரோக்கியமான உணவை நமக்கு அறிமுகம் செய்த உறவுகளும் சொந்த மனிதர்களும் நமது குழந்தைகளுக்கும் வேண்டும் என்ற எண்ணமும் அன்பும் உருவாக வேண்டும் என்பதே இதற்கான மாற்று.

Jul 31, 2014

உணவு யுத்தம்!-25

ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது வாசலில் உள்ள கூடையில் பால் பாக்கெட் கிடக்கிறது. பால் கொண்டுவந்து தருபவரின் முகத்தைக்கூடப் பார்த்தது கிடையாது. தனியார் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பால் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கறக்கப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. நகரவாழ்வில் பால்மாடுகள், ஆடுகள் போன்றவை கண்ணில் பார்ப்பதே அரிது.
குழந்தைகள், பெரியவர்கள் என வேறுபாடின்றி அருந்தும் பால்தான் இன்றைய உணவுச் சந்தையில் அன்றாடம் அதிகம் விற்பனையாகும் திரவப் பொருள். தனியார் நிறுவனங்கள் கைக்குப் போய்க்கொண்டிருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் பாலே.

ஒரு காலத்தில் கூட்டுறவு சங்கங்கள்தான் பால் உற்பத்தியில் முன்னணியில் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மெள்ளப் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனியார் பால் பண்ணைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன.
பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி வழியாக ஆண்டுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் ஈட்டப்படுகிறது. பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது என்றபோதும், பால் விற்பனையில் உருவாகிவரும் பலத்த போட்டியும் வணிகத் தந்திரங்களும் நுகர்வோர்களை முட்டாள் ஆக்கவே செய்கின்றன.

உலகின் எல்லா உணவுப் பண்பாடுகளிலும் பாலும் பால் சார்ந்த வெண்ணெய், நெய், தயிர், பன்னீர் போன்ற உணவுப் பொருட்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உணவுக்காக மனிதர்கள் மற்ற விலங்குகளிடம் இருந்து பாலைப் பெறும் வழக்கம் கற்காலத்திலேயே தொடங்கியது என்கிறார்கள். 3,000 ஆண்டுகளுக்கு முன் ஆடுகள், மாடுகளின் பால் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பின் பால் தருவதற்காகவே விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன.
ஒரு லிட்டர் பாலில் 30 முதல் 35 கிராம் புரதம் உள்ளது. அத்துடன் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி, கே ஆகியவையும் தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின் ஆகிய அமிலங்களும் கலந்துள்ளன. அத்துடன் பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. லாக்டோஸ் பாலுக்கு இனிப்புச் சுவையைத் தருகிறது.
உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதை அடிப்படையாகக்கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் வர்கிஸ் குரியன் முக்கியமானவர். கேரளாவில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர். பின்னர், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்; அமெரிக்காவின் மிட்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு வந்ததும், அவர் கொஞ்ச காலம் டாட்டா நிறுவனத்தில் வேலை செய்தார்.
குஜராத்தில் கைரா மாவட்டத்தில் ஆனந்த் என்ற இடத்தில், மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கத்தை 1940-ல் திரிபுவன் படேல் தொடங்கிய நாளில் இருந்து அமுல் வரலாறு தொடங்குகிறது. ஆனந்த் பால் கூட்டுறவு இணையம் என்பதே அமுல் என அழைக்கப்படுகிறது.
பொறியாளராகப் பணியாற்றி வந்த வர்கீஸ் குரியன் தனது பதவியைத் துறந்து, அமுல் நிறுவனத்தில் இணைந்து மிகப் பெரிய வெண்மைப் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தார். இந்தப் பணிக்கு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் அமிர்தா படேலும் காட்டிய ஊக்கமே முக்கிய உறுதுணையாக அமைந்தன.
சுமார் 30 ஆண்டுகள் வர்கீஸ் குரியனும் அமிர்தா படேலும் ஆற்றிய சேவையால் கூட்டுறவு இயக்கம் கொடிகட்டிப் பறந்து பால் பஞ்சம் தீர்ந்தது.
உலகெங்கும் பசுவின் பாலில் இருந்தே பால் பவுடர் தயாரிக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரித்தது வர்கீஸ் குரியன்தான். இந்தியா முழுமைக்கும் பால் உற்பத்தியில் முன்னோடியாக விளங்கிய வர்கீஸ் குரியன், பால் குடிக்கப் பிடிக்காதவர் என்பது தனி விஷயம்.
குரியனின் முயற்சியால் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் உலகமயமாதலைக் காரணம் காட்டி பால் உற்பத்தியில் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கூட்டுறவு பால் உற்பத்தி பாதிக்கப்படத் தொடங்கியது.
சமீபத்தில் சீனாவில் கலப்படப் பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டதால், 53 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். விற்பனைக்கு அனுப்பப்பட்ட பால் பவுடர்களில் மெலமைன் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பால் பவுடரை உட்கொண்ட சீனக் குழந்தைகளுக்குத் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். வணிகச் சந்தையின் போட்டியே இதற்கான முக்கியக் காரணம் என்கிறார்கள்.
இந்தியாவில் காலாவதியான பால் பவுடர் டின்களை விற்பதும், அதைக் கண்டுகொள்ளாமல் வாடிக்கையாளர்கள் வாங்கிப்போவதும் நடைமுறையாக உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் காலாவதியான பால் பவுடர்கள் நூற்றுக்கணக்கில் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றபடும் செய்தி நாளிதழ்களில் வெளியாகின்றன. ஆனாலும் இதுகுறித்து இன்னமும் மக்களிடம் விழிப்பு உணர்வு உருவாகவில்லை. மற்றொரு புறம் பிரபலமான பால் பவுடர் நிறுவனங்களின் போலிகள் விற்பனையாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சந்தையில் இன்று 10-க்கும் மேற்பட்டவிதங்களில் பால் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் அல்ட்ரா ஹை டெம்பரேச்சர் பிராசஸிங் எனப்படும் முறையில் மிகை வெப்பத்தால் சூடாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஹிபிஜி பால், ஆறு மாதங்களுக்குக் கெட்டுப்போகாது என்கிறார்கள்.
உணவுப் பண்பாடு என்றாலே பெரியவர்களுக்கான உணவு முறைகளைப்பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், நாம் கவனம் கொள்ளாத, அதிகம் அக்கறைகொள்ள வேண்டிய உணவு முறை குழந்தைகளுக்கான உணவு.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 முதல் 25 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகளுக்கான உணவுச் சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 19,400 கோடி ரூபாய். அதிகப் போட்டியின்றி இந்தச் சந்தையைத் தனது கட்டுபாட்டுக்குள் ஒன்றிரண்டு பெரிய நிறுவனங்கள் வைத்துள்ளன.
மற்ற உணவுப் பொருட்களைப்போல உள்ளூர் தயாரிப்புகள் குழந்தை உணவில் அதிகம் விற்பனையாவதும் இல்லை. பிரசவித்த பெண் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும் குழந்தைகளின் ஆரம்ப உணவுப் பழக்கம் குறித்தும் இன்னும் போதுமான விழிப்பு உணர்வு ஏற்படவில்லை.
குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதைக்கூட விளம்பரப்படுத்தித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடிவது இல்லை. ஆண்களுக்குக் குழந்தைகள் என்பது கொஞ்சுவதற்கான விஷயம் மட்டுமே. அதன் அடிப்படை உணவுகள், உடல்நலம், உறக்கம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஆணைக் காண்பது அபூர்வம்.
மாறிவரும் குடும்பச் சூழலில் கைக்குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தூங்கவைத்து வளர்த்தெடுப்பது பெரும் சவாலாக உருமாறியிருக்கிறது. அதிலும், காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் பலர் தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மா தன்னோடு இல்லையே என ஆதங்கப்படுவதும், இதற்காகத் தெரிந்தவர் யாராவது வந்து உடன் வாழ மாட்டார்களா என ஏங்குவதும் வெளிப்படையான பிரச்னை.
பள்ளிக்குச் செல்லும் வயது வரை குழந்தைகளுக்குத் தரப்படும் உணவு வகைகள் பற்றிய அடிப்படை அறிதல்கூட பலரிடமும் இல்லை. ஊடக விளம்பரங்களையும் இதழ்களில் வெளியாகிற தகவல்களையும் மட்டுமே நம்புகிறார்கள்,
தாய்ப்பால் போதவில்லை. ஆகவே, பால் பவுடர்களை வாங்கிப் புகட்டுகிறோம் என்று கூறுபவர்கள் எந்த அடிப்படையில் குழந்தைக்கான பால் பவுடர் டின்னை தேர்வுசெய்கிறார்கள் என்றால், வெறும் விளம்பரங்களின் துணையைக் கொண்டு மட்டுமே. அதில் எவ்வளவு புரதச்சத்து, கால்சியம், கொழுப்பு உள்ளது… குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதா என்பதைப் பற்றி, துளிகூட சிந்திப்பது இல்லை.
முந்தைய காலங்களில் கிராமப்புறங்களில் அரிதாக யாரோ ஒருவருக்குத் தாய்ப்பால் போதவில்லை எனப் பால்பவுடர் டின் வாங்குவார்கள். அப்படியும் பால் டின் கிடைக்காது; தட்டுப்பாடாக இருக்கும். அதற்காக மருந்துக்கடையில் சொல்லி வைத்து வாங்குவார். இன்று அப்படி இல்லை.
பல்பொருள் அங்காடியில் பால் பவுடர் விதவிதமான டின்களிலும் பாக்கெட்டுகளிலும் பல்வேறு எடைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, நிறைய இலவசப் பொருட்களும் தருகிறார்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தால் பால் பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
முன்பெல்லாம் தாய்ப்பால் குறைவாக உள்ள பெண்கள் பசும்பாலைக் காய்ச்சி குழந்தைகளுக்குத் தருவார்கள். இன்றுள்ளதுபோல பேபி ஃபார்முலாக்கள் அன்று கிடையாது. புட்டிப்பால் குடித்த வளர்ச்சியும், தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தையின் வளர்ச்சியும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுகிறது என்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு நிகராக எதுவும் இல்லை. புதிய புதிய ஃபார்முலா உணவுகளைத் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று வணிக விளம்பரங்கள் உரத்துக் கூவுகின்றன. ஆனால், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரே உணவு. குழந்தைகளுக்குப் பால் தருவதற்காகப் பிரசவித்த பெண்கள் சிறப்பு உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காகப் பாலில் பூண்டுகளை மெல்லியதாக நறுக்கிப் போட்டு வேகவைத்து, அதில் கொஞ்சம் சர்க்கரை கலந்து பால்கோவா போலத் தயாரித்துச் சாப்பிடுவார்கள். அசைவ உணவுக்காரர்களுக்கு ‘பிள்ளை சுறா’ மீன் மிகவும் சிறந்தது. இது பால் சுரப்பினை அதிகமாக்கும் என்பார்கள். இப்படியான சிறப்பு உணவுகளை வீட்டில் செய்வதற்கு மாற்றாக, டின்களில் அடைக்கப்பட்ட தாய்மார்களுக்கான உணவு வகைகளைக் கடைகளில் வாங்கி உண்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு மாற்றாகப் பசும்பால் இருந்த நிலை மாறி, பால் பவுடர்கள் இந்தியாவுக்குள் அறிமுகமாகி நூறு ஆண்டுகளே கடந்துள்ளன. பால் பவுடர் எப்படி உருவானது, எப்படி இவ்வளவு பெரிய சந்தையை அது கைப்பற்றியது என்பது சுவாரஸ்யமான சரித்திரம்.