Dec 20, 2012

திறந்தநிலைப் பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு;தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளர்

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்துவிட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகப் இளநிலைப் பட்டம் முடித்தவர்களை அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்காக வழக்கமான முறையில் இளநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு இணையாகக் கருதலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட அரசாணை விவரம்: பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோவுக்குப் பிறகு பி.இ. படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் முடித்த மாணவர்கள், பிளஸ் 2 முடித்து பி.இ. படித்த மாணவர்களுடன் சமமாகக் கருதப்பட்டு உதவிப் பொறியாளர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படிப்புக்குப் பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு பெற்று, பல அரசுப் பணிகளில் ஏற்கெனவே வேலையில் உள்ளவர்கள், தங்களது பணிவரன்முறை தொடர்பாக அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.
இவர்களையும், வழக்கமான முறையில் பட்டம் பெற்றவர்களையும் வேலைவாய்ப்பிற்கு இணையாகக் கருதலாமா என்பது குறித்து கல்வி நிர்ணயத் தகுதி குழுவில் பரிசீலித்து, அதன் பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், இணைக் கல்வி தகுதி நிர்ணயக் குழுவின் தீர்மானம் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையைப் பரிசீலித்த பிறகு அரசு கீழ்க்கண்ட உத்தரவைப் பிறப்பிக்கிறது.
1. பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு டிப்ளமோ, அதன்பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரக் கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் பெறப்பட்ட பட்டப்படிப்பு (10-3-3).
2. பதினோராம் வகுப்புக்குப் பின் (பழைய எஸ்.எஸ்.எல்.சி.) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட ஆசிரியப் பட்டயப் படிப்பு, பிறகு தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் இளங்கலைப் பட்டப்படிப்பு (11-2-3).
3. பத்தாம் வகுப்பு, இரண்டாண்டு ஐ.டி.ஐ., பின்னர் தொலைதூரக் கல்வி நிறுவனம் இளங்கலைப் பட்டப்படிப்பு (10-2-3)
4. பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு பட்டயப் படிப்பு, பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பு (லேட்டரல் என்ட்ரி) (10-3-2) ஆகியவற்றைப் படித்தவர்களை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-க்குப் பிறகு 3 ஆண்டு இளங்கலைப் பட்டம் படித்தவர்களுக்கு இணையாகக் கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு பெற அங்கீகரித்து ஆணையிடப்படுவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

குஜராத் தேர்தல்; ஹாட்ரிக் வெற்றி!:நரேந்திர மோடி

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 13 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 71.32 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
 
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து சென்று கேசுபாய் படேல் தொடங்கிய புதிய கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு ஓட்டுக்கள் பதிவானதால், அது எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 44 ஆயிரம் மின்னணு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வாக்குகள், 33 மையங்களில் வைத்து எண்ணப்பட்டது. சுமார் 8 ஆயிரம் பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பிறகும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை உறுதிபடுத்துவது போல 8.30 மணிக்கு குஜராத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
 
அடுத்த ஒருமணி நேரத்துக்குள் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்க தேவையான 92 இடங்களில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
 
10.30 மணிக்கு 182 தொகுதிகளில் முன்னிலை உறுதியானது. அப்போது பாரதீய ஜனதா 116 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 61 தொகுதிகளிலும், கேசுபாய் படேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தனர்.
 
குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்- மந்திரி பதவி ஏற்க உள்ளார். 2002 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் முதல்-மந்திரி பதவி வகித்த மோடி 3-வது தடவை முதல்-மந்திரி ஆவதன் மூலம் குஜராத் அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
 
மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலர வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்றாலும் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறவில்லையே என்ற கவலை பா.ஜ.க.வினரிடம் நிலவுகிறது.
 
நரேந்திர மோடி ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்க உள்ளார். இதற்காக அந்த விளையாட்டு மைதானம் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
 
அந்த மைதானத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் முன்னிலையில் நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். குஜராத்தில் 2002-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 127 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பாரதீய ஜனதா 117 இடங்களும், காங்கிரஸ் 59 இடங்களும் பெற்றன.
 
இந்த தடவை (2012) நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. சில கருத்துக்கணிப்புகள் மோடிக்கு 141 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறின.
 
ஆனால் இந்த தடவை நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைத்துள்ள போதிலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த 2002, 2007-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கிடைத்த வெற்றி போலத்தான் இந்த தடவையும் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பெரிய அளவில் குஜராத் தேர்தலில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 18, 2012

சூரியஒளி மின்சார திட்டமும் மக்கள் இயக்கமாக மாறும்:முதல்வர் ஜெயலலிதா

சென்னை : மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழக அரசு வெளிப்படையான, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வருவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதற்காக தொலைநோக்கு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இந்த தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறப்பான நிர்வாகத்தின் மூலமே இது சாத்தியமாகும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் தமிழகத்தில் எங்கும் இல்லை. மத அடிப்படைவாதம் தலைதூக்க அனுமதி இல்லை. சாதி கலவரங்கள் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நில அபகரிப்பு தொடர்பாக 1627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸீ835.94 கோடி மதிப்பிலான சொத்துகள் உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது இன்னமும் தொடர்கிறது. என்றாலும் தமிழக அரசு கொடுத்த வலுவான எதிர்ப்பு காரணமாக தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது. தமிழகத்தில், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட ஸீ4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிரானைட் தொழில் செய்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் ஸீ9,783 கோடி சொத்துக்களை முடக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழகம். இதற்காக ஆண்டுதோறும் ஸீ3,300 கோடியை மாநில அரசு செலவழித்து வருகிறது. பொது விநியோக திட்டத்துக்கான அரிசியை மாநில எல்லைகள் வழியாக கடத்துவதை தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து போலி மதுபானங்கள் தமிழகத்துக்கு வருவதும் தடுக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும். விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 பொது விநியோக திட்டத்தின் வாயிலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை கடுமையாக கண்காணிக்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் களையப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழை என்பதற்காக மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு 2023 என்ற தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு தொழில் துறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முதலீட்டாளர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு திட்டத்தில் வேளாண், மீன் துறை, கால்நடை பராமரிப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2023 தொலைநோக்கு திட்டம் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியை 11 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவியது. டெங்குவை கட்டுப்படுத்த ஏற்கனவே அரசு பல வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது. இத்தகைய நோய் பரவுவதை தடுப்பது முற்றிலும் மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உடனுக்குடன் மருத்துவ உதவிகள் கொடுத்து டெங்கு நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க ரொக்க பரிசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பாடப் புத்தகம், நோட்டு, பை, சீருடை, ஜியாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், லேப்டாப், காலனி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர் மேம்பாட்டுக்காக கடந்த 2011,12 மற்றும் 2012,13ம் ஆண்டுகளில் 1,000 கோடியும், மற்ற மாநகராட்சிகளுக்கு 1,500 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர், கழிவுநீர், சானிடேஷன் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட மேம்பாட்டுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை 2015க்குள் முற்றிலும் தடுக்க 92.43 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர்கள் கவனம் செலுத்தி, திட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

2015ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி வாயிலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும். தொழில்முனைவோரை ஊக்குவிக்க நீட்ஸ் என்ற புது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கப்பட்டு, முதல் தவணையாக ஏற்கனவே 1.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், இதை பயன்படுத்தி அனைத்து திட்டங்களை யும் திறம்பட செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Dec 17, 2012

ஜூன்2013குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: நாஞ்சில் சம்பத்!

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார். நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் சந்திரன், அவைத்தலைவர் சதாசிவம், இணைச்செயலாளர் லிசம்மா, துணைச் செயலாளர் சிவகாமி, பொருளாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

தனி மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்ற நிலை இன்று உள்ளது. நாம் எல்லாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள் அடுத்த பிரதமர் அவர் தான் என்ற நல்ல வார்த்தைகள்தான். மின் பற்றாக்குறையை காரணம் காட்டி தி.மு.க. செயற்குழுவை கூட்டி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினால் மின்சாரம் வந்து விடுமா? மின்வெட்டுக்கு காரணமே தி.மு.க.தான்.

2001-2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உபரியாக இருந்தது. இதனால் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தற்பொழுது ஆட்சிக் காலத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உடன்குடியில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், உப்பூரில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், வட சென்னையில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். கேரள மீனவர்கள் இருவரை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மத்திய அமைச்சர் அந்தோணி கேரளாவிற்கு ஆதரவாக செயல்பட்டார். இங்கு தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை ராணுவத்தால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதுவரை வாயை திறக்கவில்லை.தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இலங்கை அதிபர் ராஜ பக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று துணிச்சலோடு தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அன்னிய முதலீட்டுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு பல கட்சி கள் விலை போய் விட்டன. ஆனால் விலை போகாத ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான்.