Jun 21, 2019

பிரின்ஸ் ஆப் பெர்சியா Prince of Persia: The Sands of Time

                                            2010 ஆண்டு வெளியான திரைப்படம் இது.. கதையோட ஹீரோ டஸ்டன் ஒரு அனாதை.. அவரோட திறமையைப் பார்த்து வியந்த பெர்சியா நாட்டோட அரசர்.. சின்ன வயசான டஸ்டனை தத்து எடுத்து வளர்க்கிறார்.. அரசருக்கு டஸ், கர்சிவ்ன்னு ரெண்டு பசங்களும் இருக்காங்க.. டஸ், கர்சிவ்வோட சித்தப்பா நிஜாம்.. டஸ்டனைத் தவிர இவங்க எல்லாம் அரச குடும்பத்தாருங்க..பெர்சியாவோட எதிரிகளுக்கு புனித நகரமான "அலமட்" ஆயுதங்கள்

வாட்டர் டிவைனர் (Water Diviner)

            அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் 1920 ஆம் வருடம். ஆஸ்திரேலியாவின் பாலை போன்ற பெரும் பரப்பில் நீர் மட்டத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு நிபுணர் இரண்டு குச்சிகளை வைத்துக் கொண்டு அலைகிறார். ஒரு இடம் சிக்குகிறது. அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்குகிறார். ஒற்றை மனிதனாக சுமார் இருபதடி ஆழத்துக்கு குழியை வெட்டி மண்ணைச் சுமந்து வெளியில் வீசுகிறார். அவர் நீர்மட்டம் பார்த்த எல்லா இடங்களிலும் நீர் கிடைத்தது என்று சொல்ல முடியாது. இதுவும் கூட தவறான கணிப்பாக இருக்கலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்த்துவிடலாம் என்று கடப்பாரையை ஓங்கி நிலத்தில் இறக்க நீர் பொத்துக் கொண்டு வருகிறது. அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அதே உற்சாகத்தோடு வீட்டுக்கு வருகிறார்.
மனைவி தனியாக அமர்ந்திருக்கிறாள். ‘நீங்கள் கதை சொல்வதற்காக பசங்க தூங்காம காத்திருக்காங்க’ என்கிறாள். அறைக்குள் சென்று ஒரு புத்தகத்திலிருந்து கதையை வாசிக்கிறார். கேமிரா மெதுவாக கட்டில்களைக் காட்டுகிறது. அது வெறும் கட்டில்கள். நமக்கு சில்லிட்டு போய்விடுகிறது. வெறும் கட்டில்களுக்கு எதற்காக கதை படித்துக் காட்டுகிறார்? அவர் வெளியே வருகிறார். மனைவி அழுது கொண்டிருக்கிறாள். பேச்சை மாற்றும் விதமாக ‘இன்னைக்கு தண்ணீரைக் கண்டுபிடிச்சேன்’ என்கிறார். ‘நிலத்துக்குள் இருக்கும் தண்ணீரைக் கண்டுபிடிக்கும் உங்களால் சொந்தப் பசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அழுகிறாள். அடுத்த நாள் காலையில் மனைவி வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நீர் நிலையில் இறந்து கிடக்கிறாள். தற்கொலை.
முதல் உலகப் போரின் ஒரு சொட்டு வரலாற்றைத் தெரிந்து கொண்டால் மகன்கள் என்ன ஆனார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும்.
நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட துருக்கியப் பேரரசான ஒட்டாமன் பேரரசு முதல் உலகப் போரில் தள்ளாடத் தொடங்குகிறது. அப்பொழுது கேலிப்போலி என்னும் முக்கியத்துவம் வாய்ந்த போர் நடக்கிறது. இந்தப் போரில் துருக்கியை எதிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து இணைந்த கூட்டுப்படை போரிடுகிறது. கடுமையான போர் என்ற போதும் இந்தப் போரில் துருக்கிதான் வெற்றி பெறுகிறது. இருபக்கமும் ஏகப்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு கூட்டுப்படைகளை துருக்கியப்படையினர் துரத்தியடித்தார்கள். இந்த கேலிப்போலி சண்டையில் ஆஸ்திரேலியப் படையில் இணைந்து போரிடுவதற்காகத்தான் நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவரின் மூன்று மகன்களும் வருகிறார்கள்.
இப்பொழுது தற்கொலை செய்து கொண்ட அம்மாவையும் மகன்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் நாம் இணைத்துக் கொள்ளலாம்.
எல்லோரும் இறந்துவிட்டார்கள். நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவர் தனித்து நிற்கிறார். யாருமற்ற அநாதை. அவருடைய மகன்கள் இறந்து போன விஷயம் அவருக்குத் தெரியும். அதற்கான சில ஆதாரங்கள் அவரிடமிருக்கின்றன. அதைச் சுமந்து கொண்டு துருக்கியை அடைகிறார். அங்கு ஒரு இளம்பெண்ணும் அவளுடைய இளவயது மகனும் தங்கும் விடுதியை நடத்துகிறார்கள். அந்தச் சிறுவன் வலுக்கட்டாயமாக இவருடைய பையைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான். அவனைத் திருடன் என்று நினைத்தபடி துரத்துகிறார் ஆனால் அவன் விடுதிக்கு ஆள் பிடிக்கும் விதமாகத்தான் அப்படிச் செய்கிறான் என்று புரிந்து கொள்கிறார். அந்த விடுதியிலேயே தங்குகிறார். சிறுவனுக்கும் இவருக்குமான நட்பு தொடங்குகிறது.
விடுதி நடத்தும் பெண்மணியின் குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு. அந்தப் பெண்மணியின் கணவனும் போரில் காணாமல் போயிருக்கிறான். அவன் இறந்துவிட்டதாகச் சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்வதில்லை. அவள் ஒத்துக் கொள்ளும் அடுத்த வினாடி அவளைத் திருமணம் செய்து கொள்ள அவளது கணவனின் சகோதரன் தயாராக இருக்கிறான். ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. என்றபோதிலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். இது ஒரு கிளைக்கதை.
துருக்கி வந்தாகிவிட்டது. இனி எப்படி மகன்களைத் தேடுவது? அடையாளம் தெரியாமல் இறந்து போன போர் வீரர்களை ‘பெயரற்றவர்கள் அல்லது காணாமல் போனவர்கள்’ என்ற பெயரில் குவியல் குவியலாக புதைத்துவிடுகிறார்கள். மகன்களின் உடலை தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பது தன்னுடைய நோக்கம் என்று சொல்லி அதிகாரிகளிடம் மண்டாடுகிறார். ‘அதெல்லாம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லி ஆரம்பத்தில் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. திருட்டுத்தனமாக போர் நடந்த வளைகுடா பகுதிக்கு படகில் செல்கிறார்கள். இவர் வந்து சேர்ந்த பிறகு அவருடைய மகன்களின் பிணத்தைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். மகன்கள் இறந்து போன இடங்களை நோக்கி பயணம் விரிகிறது.
உலகப்போர் சம்பந்தமான திரைப்படங்களில் பெரும்பாலானவை இந்த மாதிரியான கதையம்சத்துடன்தான் இருக்கின்றன. போர் என்பது பெரும் வரலாறு. அதில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுகிறது. அப்படி மக்கிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை எடுத்து போரின் எதிர்விளைவுகள் அவை தனிப்பட்ட குடும்பங்களில் உருவாக்கக் கூடிய சலனங்கள் என்பனவற்றையெல்லாம் கதையாக்கி நம்மை நெகிழ்ந்து போகச் செய்வார்கள். அப்படியான படம்தான் The Water Diviner.
அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் உருவாக்கக் கூடிய த்ரில், எதிர்ப்படும் இடர்பாடுகள். விடுதி பெண்மனிக்கும் நாயகனுக்குமிடையிலான வெளியில் சொல்லப்படாத மென்மையான காதல் என்பவையெல்லாம் படத்தின் கண்ணிகள் என்றால் நாயகனின் நடிப்பும் விடுதிப் பெண்ணின் விறைத்த உடல் மொழியும் அவளது மகனாக நடித்த சிறுவனின் அப்பாவித்தனமான நடிப்பு போன்றவற்றையும் தூண்கள் எனலாம்.
படத்தில் நம்ப முடியாத காட்சி ஒன்று உண்டு. ஆயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம் போன்றதொரு போர்க்களத்தில் நீர்மட்டத்தைக் கண்டுபிடிப்பது போலவே தனது மகன்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டுபிடிக்கிறார். அது மட்டும்தான் நெருடலாக இருந்தது. கண்களை மூடி போரின் இறுதிக் காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி ‘இங்குதான் எனது மகன்கள் புதைக்கப்பட்டார்கள்’ என்கிறார். அவர்கள் தோண்டுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல் சிதலங்களைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல்கள் சிக்குகின்றன. அப்படியென்றால் இன்னொருவன்? அதுதான் க்ளைமேக்ஸ்.
2014 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.
படத்தின் நாயகன்தான் இயக்குநரும் கூட. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆரம்பத்தில் சில காட்சிகள் குழப்பமாக இருந்தது போலத் தோன்றியது. படம் நகரத் தொடங்கும் போது ஒன்றி விடுகிறோம். சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் காட்சியமைப்புகளுக்காகவும் இந்தப் படத்தை சிலாகிக்க வேண்டும். மிக எளிமையான கதை. நேர்த்தியான படமாக்கம். நல்ல நடிகர்கள் என்று பாராட்டப்பட வேண்டிய படம்.