Mar 22, 2013

புலித்தடம் தேடிதமிழ் பிரபாகரன் - பாகம் 19,20,21,22(முற்றும்)


புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 19
ஆண் சிங்கம், பெண் மனுசி... இந்தக் கலப்பில் தோன்றியதே சிங்கள இனம். அதாவது, மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான பிறப்புதான் சிங்களப் பிறப்பு!  இந்த மகாவம்ச வரலாற்றை பயண இடை​வெளி​களில் சொல்லிக்கொண்டே வந்தார் நண்பர். மகாவம்சம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் இருந்த அரசன், கலிங்க நாட்டு அரசனின் மகளை மணக்​கிறான். அவர்களுக்குப் பிறந்த பெண் பருவம் அடையும்போது, சோதிடம் கணிக்கப்படுகிறது.
சோதிடர்கள் அரச​னுக்குக் கூறிய செய்தியால் அவன் அதிர்ச்சி​யடைகிறான். 'இந்தப் பெண் காமத்தின் மிகுதியால் மிருகத்துடன் உறவு கொள்வாள்’ என்று சோதிடர்கள் கணித்ததுதான் அரச​னின் அதிர்ச்சிக்குக் காரணம். அதன்பிறகு, மகளை அரசன் கண்டுகொள்வதே இல்லை.
பிறகு, அவள் ஒரு நாடோடி கும்பலோடு சேர்ந்து ஒரு காட்டைக் கடக்கிறாள். அப்போது அந்தக் கூட்டத்தை மறித்த சிங்கம், எல்லோரையும் விரட்டி​யடிக்கிறது. ஆனால், அவள் மட்டும் செல்லாமல் அங்கேயே இருக்கிறாள். சிங்கத்தைப் பின்​தொடர்ந்து, சோதிடர்கள் கணித்ததுபோல், சிங்கத்தோடு உறவுகொள்கிறாள். சிங்கபாகுவும் சிங்கவல்லியும் அவளுக்குக் குழந்தைகளாகப் பிறக்​கின்றனர்.
அவர்களை சிங்கம் குகையிலேயே வைத்திருக்​கிறது. சிங்க பாகுவின் கைகள் மற்றும் கால்கள் சிங்கத்துடையது போலவே உள்ளது. சிங்க​பாகுவுக்கு 16 வயதாகும்போது தன் தாயிடம், 'ஏன் அம்மா நீயும் அப்பாவும் மிகுந்த வித்தியாசத்தோடு இருக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவள் நடந்தவற்றை விவரிக்கிறாள்.
அதன்பின் சிங்கத்தின் குகையில் இருந்து அவள், சிங்கபாகு, சிங்கவல்லி மூவரும் தப்பிச் செல்கின்றனர். இலைதழைகளை ஆடைகளாக உடுத்திக்கொண்டு, அவர்கள் காட்டில் செல்கின்றனர். தன் அப்பாவின் படையில் படைத்தலைவனாக இருந்த தன் மாமன் மகனைக்கண்டு அவனோடு செல்கிறாள் சிங்க​பாகுவின் தாய். சிங்கத்தை மறந்து மாமன் மகனைத் திருமணம் செய்கிறாள்.
குகைக்குத் திரும்பிய சிங்கம், தன் மனைவியையும் பிள்ளைகளையும் காணாமல் கோபமுற்று கிராம மக்களைத் தாக்குகிறது. இதை அரசனிடம் மக்கள் கூற, சிங்கத்தை வீழ்த்தினால் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது.
பயத்தால் யாரும் சிங்கத்தைக் கொல்ல வரவில்லை. இறுதியில் மக்கள், சிங்கபாகுவைத் தேர்வு செய்கின்றனர். சிங்கத்தைக் கொன்​றால் என் ராஜ்யத்தையே தருகிறேன் என்று அரசன் சொல்ல, தன் தந்தையென்றும் பாராது சிங்கத்தைக் கொல்​கிறான் சிங்கபாகு.
ராஜ்யத்தை வென்ற சிங்கபாகு, தன் தாயிடமும் அவளது புதிய கணவனிடமும் ராஜ்யத்தை ஒப்படைக்கிறான். மீண்டும் காட்டுக்கே சிங்கபாகுவும் அவன் தங்கை சிங்கவல்லியும் செல்கின்றனர்.
காட்டுக்குள்ளே நகரத்தை அமைத்து, அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு 16 முறை இரட்டைக் குழந்தைகளைப் பெறுகின்றனர். அதில் மூத்தவன்தான் விஜயன். விஜயனால் தொல்லையுற்ற மக்கள் சிங்கபாகுவிடம் விஜயனின் அடாவடிச் செயல்களைக் குறிப்பிட்டு, 'அவனைக் கொன்றுவிடுங்கள்,
இல்லையெனில் நாடுகடத்துங்கள்’ என்று கேட்டுக்கொள்ள... விஜயனையும் அவனுடன் இருந்தவர்களையும் திசைக்காட்டியற்ற கப்பலில் நாட்டைவிட்டு அனுப்பி விடுகிறான் சிங்கபாகு. விஜயனும் அவனுடன் வந்தவர்களும் இலங்கையை அடைகிறார்கள். அவன்தான் பின்னர் தமிழர் வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிக்கிறான். விஜயன் வழியேதான் சிங்கள இனம் விருத்தியடைகிறது.’ -இந்தக் கதை கொண்ட மகாவம்சம்தான் சிங்களர்களின் புனித நூல்.
சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இனத்துவேஷிகளுக்கும் மிருக குணம் எங்கே இருந்து வந்தது என்று இப்போது புரியும். அந்த மிருக சிங்களவர்களின் செயல்தான் முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலை உலக அரசுகளின் இப்போதைய விவாதப் பொருளாக இருந்தாலும், இலங்கை ராணுவத்​தின் அன்றைய மனித உரிமை மீறல்கள் பற்றிய சம்பவங்களும் இப்போது பேசப்படுகிறது.
அன்றைய இராணுவ மீறல்களில் முக்கியமானது, திருகோணமலையில் நடந்த ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை, மூதூரில் நடந்த 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை. இதைப்பற்றி இப்போது நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22-வது கூட்டத்தொடரில் பேசிய மகிந்த சமரசிங்க, ''திருகோணமலை மாணவர்கள் கொலை மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்​டுள்ளது.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்'' என்றார். ராணுவத்தினர்தான் குற்றவாளிகள் என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால், யார் மீது விசாரணை நடக்கிறது என்று தெரியவில்லை. அதற்கேற்ப உலகமும் ஐ.நா-வும் இன்னமும் இலங்கை அரசு சொல்லும் கதைக்கெல்லாம் தலையாட்டுகிறது.
மட்டக்களப்பில் இருந்து புறப்படும் முன், திரிகோணமலையைச் சொந்த ஊராகக் கொண்ட மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''2006 ஜனவரி 2, மாலை கடற்கரைக்குச் சென்ற 20 வயதுக்கும் உட்பட்ட தமிழ் மாணவர்களை இராணுவம் கொன்றது. அது என் வாழ்க்கையில் அறிந்த கொடுமையான சம்பவங்களுள் ஒன்று. மாணவர்கள் மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அந்த வேளையில் இராணுவம் அவர்களை சந்தேகித்து, சுட்டுக்கொன்றுள்ளது.
அதில் லோகிதாசன் ரோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முக​நாதன், சிவானந்தா தங்கவடிவேல் என ஐந்து மாணவர்கள் இறந்து​போனார்கள். 'யோகராஜா பூங்குழ​லோன், பரராஜசிங்கம் கோகுலராஜ் என இரண்டு மாணவர்கள் உயிர் தப்பினர்.
ஆனால், அந்தச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட ராணுவம், 'கை எறி குண்டு தவறுதலாக வெடித்ததால் நேர்ந்த விபத்து இது’ என்றது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் கமினி குணதுங்க, 'மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் அடைந்த காயத்தில்தான் இறந்துள்ளனர்’ என்றார்.
தப்பித்த மாணவர்களின் வாக்குமூலத்தில், மூன்று சக்கர வாகனத்தில் வந்த முகம் அறியா நபர் கை எறிகுண்டை வீசியதாகவும், அந்த வாகனத்தின் பின்னே வந்த ராணுவம் தங்களைச் சுட்ட​தாகவும் குறிப்பிட்டுள்ளனர். அப்படியென்றால் ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுள்ளது. கை எறிகுண்டு தவறுதலாக வெடித்தது என்று வைத்துக்கொண்டால்கூட, மாணவர்களின் உடலில் எப்படித் தோட்டாக்கள் பாய்ந்தன?'' என்றார்.
இறந்த மாணவர் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரன், அண்மையில் மாணவர்களின் நினைவு தினத் தின்போது ஒரு கருத்தை வெளியிட்டார். 'என் குடும்பத்துக்கும் எனக்கும் ஒரே ஆறுதல், இந்தக் கொலைச் சம்பவத்தின் மீதான விசாரணைக்கு நண்பர்களும் சில அமைப்புகளும் ஆர்வத்தோடு இருப்பதுதான். என் மகனைக் கொன்ற கொலை காரர்கள் இலங்கையில் சுதந்திரமாக திரிகிறார்கள்’ என்று வேதனையைக் கொட்டினார்.
இரவு 9 மணி வாக்கில் கொழும்புக்குக் கிளம்பினேன். அடுத்த நாள் இலங்கை நாடாளுமன்றம் சென்றேன். அன்று, 'வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டுடனான உறவுகள்’ பற்றிய விவாதம். அதில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரமேதாசா, ஜெனிவாவில் இலங்கை பாதிக்கப்படுவதைப் பற்றி அரசாங்கத்துக்கு கேள்வி எழுப்பினார்.
இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றீர்களே... வாக்களித்ததா? இதுதான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையா?’ என்று சர்வதேச அளவில் இலங்கை பாதிக்கப்படுவதைப் பற்றியே பேசினார். ஆனால், பாதிக்காமல் இருக்க என்ன மாதிரி கட்டுமானங்களை தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு செய்ய வேண்டும் என்பதை ஆறுதலுக்குக்கூட பேசவில்லை.
நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ் மக்கள் விவகாரங்களை பேசத் தொடங்கினாலே, சிங்கள உறுப்பினர்களின் கூச்சல் ஒலிக்கும். தண்ணீர், நிலம், வணிகம், வாழ் வாதாரம் என எந்த நிலையிலான பிரச்சினையைப் பேசினாலும் முதலில் சிங்கள உறுப்பினர்கள் கூச்சலிடும் வார்த்தை... எல்.டி.டி.ஈ. ஆம்... இதைத் தவிர தமிழர் தரப்பின் வாதத்தை முடக்க சிங்கள உறுப்பினர்கள் எதையும் பயன்படுத்த மாட்டார்கள். நாமல் ராஜபக்ஷே உள்ளே நுழையும்போது, தமிழ் உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.
அதைக் கிண்டலடிப்பதாக நாமலிடம் சிவப்புத் தொப்பி போட்ட முஸ்லிம் உறுப்பினர் கத்தி சிரித்துக்கொண்டே இருந்தார். இன்னொரு உறுப்பினர் இடைமறித்து, எல்.டி.டி.ஈ. பற்றி சகட்டுமேனிக்குத் திட்டி ஏதோ வீரஉரை நிகழ்த்தியதுபோல் நாமலி​டம் திரும்பி 'எப்படி’ என்று கேட்க... நாமலோ, 'யெஸ்’ எனக் கைகாட்டுகிறார்.
நாமலின் விஷத்தன்மை ராஜபக்சவை விடக் கொடியது. அவுஸ்திரேலியாவில் தமிழர்களைப் படிக்க வைக்க, வேலைக்கு அனுப்ப, தஞ்சம் புக இடைத்தரகர்களை வைத்து ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவன். அவர்களை கடல் வழியே படகில் அனுப்பி விட்டு, அவுஸ்திரேலியக் கப்பல் படைக்குத் தகவல் கொடுத்துக் கைதுசெய்ய வைக்கும் அதிகாரத்தின் சூத்திரதாரி.
தமிழர்களும் நாமலின் இடைத்​தரகர்களை நம்பி, இருக்கும் நிலத்தை விற்றோ சொத்தை அடமானம் வைத்தோ, பணத்தை அவர்களிடம் கொடுப்பார்கள். தரகர்களோ, மொத்தமாக ஏமாளித் தமிழர்களை ஏமாற்றி விட்டு இன்னும் தமிழர்களை ஏமாற்ற, ஆள் தேடிக்கொண்டு இருப்பார்கள்.
ஆங்கிலேயர்களின் தேவைக்கு, கங்காணிகளால் ஏமாற்றி அழைத்து​வரப்பட்ட தமிழகத் தமிழர்கள் வாழும் நிலத்தை நோக்கி நானும் போகிறேன்.
ஜூனியர் விகடன்

புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன் !- பாகம் 20
உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது, பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது’ என்ற மகாத்மா காந்தியின் சொற்களே ஹட்டனின் ஒரு வீதியில் பொறிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அழைத்து வரப்பட்ட கூலிகளான மலையகத் தமிழர்கள், ஆங்கிலேயன் சென்ற பிறகும் உழைக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி இலங்கையின் மலையகத்துக்கு வந்தனர்? இலங்கையின் விடுதலைக்கு முந்தைய காலத்தில், தமிழகத் தமிழர்கள் மட்டும் அங்கு இருக்கவில்லை, மலையாளிகளும் அங்கு இருந்தனர்.
இவர்களின் பெரும்பாலானோர் அன்று வைத்திருந்தது தேநீர் கடைகள்தான். இலங்கையின் விடுதலைப் போராட்டக் காலத்தில் மலையாளிகளும் தாக்கப்​பட்டனர்; கொல்லப்பட்டனர். இலங்கையின் விடுதலைப் போராட்டம் என்பதே உரிமைகள் பெறும் போராட்டமாக இல்லை, உரிமையின் பெயரால் 'புத்த மதத்தைப் பரப்பும்’ போராட்டமாகத்தான் இருந்தது.
1815 முதல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள், ராமேஸ்வரம் வழியாக மன்னாரை அடைந்து, பின் ஹட்டன் போன்ற மலையகத்தின் பிற பகுதிகளை அடைவார்கள். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, மலையகத் தமிழர்​களை அடிமைப்படுத்தும் விதம் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களர்களிடமும் தோட்ட முதலாளிகளிடமும் மாறியது.
நுவரெலியா நோக்கிச் செல்லும்போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''நான் பிறந்து வளந்தது எல்லாம் இங்கதான். எங்களுக்கு நடந்துவரும் கொடுமைய, நான் பிறந்ததில் இருந்து பார்த்து வர்றன். அந்தக் கொடுமைகள் இன்றும் நிற்கல. எங்கள ஏமாற்றிக்கிட்டே இருக்காங்கள். எங்களுக்கு கிடைக்கும் தலைவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்காங்கள்.
எங்கள் ஊரு அரசியல்வாதி ஒருவரைப் பார்த்து, 'என்ன சார் ஊர் பக்கமே வரதில்ல?’னு கேட்டேன். அதுக்கு அவர், 'இங்க வேல அதிகமா இருக்கு’னு சொன்னார். அவர், தேர்தல் நேரத்துல எங்கள் ஊரே கதின்னு கிடந்தவர்.
மத்த அரசியல்வாதி மாதிரி இல்லாம, நிலமைய மாத்திக்காட்டறன்னு வாக்குறுதி கொடுத்தாரு. அத நம்பி ஓட்டுப்போட்ட எங்கள இப்ப பாக்கக்கூட நேரமில்லன்னு சொல்றாரு. கொடுத்த போன் நம்பர மாத்திட்டாரு'' என்று வேதனையில் வெம்பினார்.
இவரைப்போல் மலையகம் அன்றும் இன்றும் சந்தித்த பிரச்னைகளின் நிலையை, கண்டுகொள்ளப்படாத மலையக மக்​களின் வாழ்வைப் பற்றி, மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், பல விஷயங்களைக் குறிப்பிட்டார். அவர், ''1948-ம் ஆண்டுக்குப் பிறகு (இலங்கை சுதந்திரம் பெற்ற பின்) திட்டமிட்ட ரீதியாக மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சிங்கள அரசின் கொடுங்கோல் அடக்குமுறைகள், முதன் முதலில் மலையகத் தமிழர்களை நோக்கித்தான் பாய்ந்தது, அவர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்துதான் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதலை நடத்தியது சிங்கள அரசு.
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை இந்தியாவோ உலகமோ தட்டிக் கேட்கவில்லை. 1948 முதல் 1983 வரை நடந்த இன வன்முறைகளில் இவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் தனி நாடு எதுவும் கேட்காதவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்ற ரீதியில் இவர்களும் தாக்கப்பட்டனர். அந்த இன வன்முறைகளில் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கை நோக்கி நகர்ந்தனர்.
1977-ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த​போது, மிக மோசமான வன்முறைகள் நடந்தன. அதில் பெரும் அளவிலான மலையக மக்கள் இடம்பெயர்ந்தனர். அப்போது ஜனாதி​பதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 'மலைய​கத்தில் உள்ள தமிழர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்புவது... அல்லது இலங்கை​யின் வடகிழக்குக்கு நகர்த்துவது நல்லது’ என்று சொன்னார்.
இலங்கை மலையகங்களில் உள்ள தமிழர்கள் பெரும்​பான்மையாகப் பெருகிவிடக் கூடாது என்ற குரூரத்துடன் ஆட்சி புரிந்துள்ளனர்.
அப்படி வடகிழக்குக்குச் சென்றவர்கள் சிரமப்பட்டாலும், உழைப்பை உறிஞ்சும் மலையகத் தோட்டப்புறச் சூழலில் இருந்து அவர்கள் விடுதலை பெற்றிருந்தனர். தேயிலைத் தோட்டத்திலும் ரப்பர் தோட்டத்திலும் கூலித் தொழிலாளர்களாக வேலைசெய்தவர்கள், வடகிழக்குக்குச் சென்று விவசாய நிலத்தில் வேலைசெய்தனர்.
அப்படி இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுள் பலர், வடகிழக்கில் செயல்பட்டு வந்த விடுதலை இயக்கங்​களிலும் இணைந்திருந்தனர். இந்த வேளையில் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தப்படி, மொத்தம் இருந்த 9,75,000 பேரில் 6 லட்சம் பேரை இந்தியாவுக்குத் திரும்ப அழைப்பது என்றும், மீதம் இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அப்போது குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன்பிறகு, வடகிழக்கில் போர் நடக்கையில் கொல்லப்படும் சிங்கள ராணுவத்தினரின் உடல் தென்னிலங்கைக்கு போகும்போது எல்லாம், தென்னிலங்கையில் வாழும் குறைந்தளவிலான தமிழர்கள் தாக்கப்படுவார்கள்.
இராணுவத்துக்கு எதிரான போராட்டமோ, தாக்குதலோ வடகிழக்கில் நடந்தால், இன்றும் மலையகத்தின் தோட்டப்புறத் தொழில்களில் சிக்கியுள்ள தமிழர்கள் தாக்கப்​படுவார்கள்; விசாரணைக்கு இழுத்துச் செல்லப்​படுவார்கள்; சந்தேக வழக்கில் பிடித்துச் செல்லப்​பட்டு கொல்லப்படுவார்கள்.
போர் சமயத்தில் தமிழர்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. போரில் மலையகத்தில் இருந்து இடம்​பெயர்ந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதையே யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.
போரின்போது மட்டுமல்ல... வதை முகாம்களில் தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்திலும், ஈழத் தமிழர்களுக்கு இணையாக மலையகத் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்.
மலையகத் தமிழர்களுக்கு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களோடு உள்ள தொடர்பு மிகவும் சொற்பமே. போருக்கு முன்னர் இரணைமடு போன்ற பகுதிகளில் அவர்கள் மீன் பிடியிலும், வடகிழக்கில் இன்னும் பிற தொழில்களையும் செய்துவந்தனர்.
முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மலையகத் தமிழர்கள், முன்பு இடம்பெயர்ந்து வாழ்ந்த பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்களை ராணுவம் திரும்பவும் மலையகத்தின் தோட்டங்களுக்கே போகச் சொல்கிறது.
வடகிழக்குக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் முகாம்களில் இருந்தபோது, தென்னிலங்கையில் இருந்த அவர்களின் உறவினர்களே வந்து பார்க்க மாட்டார்கள். 'வந்தால், ராணுவத்திடம் சிக்கிக்கொள்வோமோ’ என்ற பயத்தால் அவர்கள் முகாம்களில் இருந்த உறவினர்களோடு தொடர்பையே துண்டித்துக்கொண்டனர்.
இந்தியா முன்வைத்த 13-வது பிரிவிலும் தோட்டத் தொழிலாளர்களை எந்த வகையிலும் உள்ளடக்கவில்லை. இந்தியாவைச் சேர்ந்த இவர்களையே கைவிட்டுவிட்டு, வடகிழக்கில் உள்ள மக்களை இந்தியா காப்பாற்றப்போகிறதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இவரின் குறிப்புகளைப் போலவே போரின் முடிவுக்கு பிறகு, இன்று நடந்துகொண்டு இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் விதம் மிகவும் மோசமானது. இப்போது தமிழர்களை, பொதுவாக தமிழர்கள் என்று பதிவது இல்லை. 'கொழும்புச் செட்டி, வணிகத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர்’ என்று பிரித்துப் பிரித்துப் பதிவு செய்கின்றனர்.
இதன் வழியே தமிழர்களுக்கு இடையே பெரும் முரண்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. இலங்கை எங்கும் தமிழர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரிப்பதன் மூலமாகவும் சிங்களர்களைப் பரவலாக்குவதன் மூலமாகவும் தமிழர்களை சிறுபான்மை இனமாக்கி, அந்த சிறுபான்மைப் பிரிவுக்குள்ளே மேலும் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் வேலை நடக்கிறது.
இதன் மூலம் உண்மையில் பல கலப்புகளையும் நிலைகளையும்கொண்ட சிங்கள இனம், பெரும்பான்மை இனம்போல காட்டப்படும் என்பது இப்போதே துல்லியமாகத் தெரிந்தது.
மாவீரர் தினத்தை அனுசரித்த யாழ்ப்பாண மாணவர்களை ராணுவமும் போலீஸும் தாக்கியதற்காக ஓர் அமைதிப் போராட்டம். 'பேச்சுரிமையையும் வாழ்வுரிமையையும் கொடு’ என்ற அந்தப் போராட்டத்தின் நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் நோக்கி நகர்கிறேன்.
ஊடறுத்துப்பாயும்..
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 21

'இளைஞர்களே இப்போது இராணுவக் கண்களின் இலக்கு’ என்பதை உறுதிப்படுத்துவதாக நடந்ததுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்.
பிரபாகரன் பிறந்த நாளன்று நான் திருகோணமலையில் இருந்தபோதும், மாவீரர் தினத்தின்போது நான் மட்டகளப்பில் இருந்த​போதும், அங்கு இருந்த அதே இராணுவப் பதற்றமும் கண்காணிப்பும் யாழ்ப்பாணத்திலும் இருந்தது.
மாவீரர் நாளில் விளக்கேற்றும் நேரமான மாலை 6.05 நெருங்க நெருங்க, இராணுவம் யாழ்ப்​பாணப் பல்கலைக்கழகத்தை நெருங்கியது. மாலை 5 மணிக்கெல்லாம் ஆண்கள் விடுதிக்குள் ஆயுதங்களோடு புகுந்துவிட்டது. துப்பாக்கியைக் காட்டி மாணவர்கள் மிரட்டப்பட்டனர்.
மாலை 6.05 ஆனதும் பெண்கள் விடுதியில் விளக்கேற்றப்பட்டு விட்டது. ஆவேசத்துடன், பெண்கள் விடுதியின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த இராணுவம், பெண்கள் மீதான வெறியை அங்கிருந்த பொருட்​களின் மீது காட்டி அடித்து நொறுக்கியது. சில பெண்களையும் தாக்கியது.
அதே நேரம்... ஆயுதத்தோடு இருந்த இராணுவத்தையும் மீறி ஆண்கள் விடுதி​யில் விளக்குகள் ஏற்றப்பட... அங்கும் தாக்குதல்கள் நடந்தன. மாவீரர் நாள் முடிந்தும் பதற்றம் தீரவில்லை. பல்கலைக்​கழகத்துக்குள் நுழைந்த இராணுவத்தைக் கண்டித்து வாயில் கறுப்புத் துணிக் கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
'மாணவர்களைப் பாதுகாக்காத துணை​வேந்தர் இங்கு எதற்கு? உள்ளே நுழைந்த இராணுவத்தினரை, நிர்வாகம் ஏன் தடுக்கவில்லை? துணைவேந்தரால் இராணு​வத்தைத் தடுக்க முடியாவிட்டால், வீதியில் இருக்கும் படைச் சிப்பாயை துணைவேந்தர் பதவியில் அமர்த்திவிடுவதுதானே?’ என்று மாணவர்களின் போராட்டக் குரல்கள் ஓங்குகிறது.
இராணு​வத்துக்கு எதிரான குரல்களோடு பல்கலைக்​கழகத்தின் ஒரு நுழைவாயிலில் இருந்து மற்றொரு நுழைவாயிலுக்கு மாணவர்கள் நகர்கின்றனர். அந்த இடைவெளிக்குள் மாணவர்களைத் தடுத்து நிற்கிறது காவல்துறை. 'நீங்கள் வெளியே வர அனுமதி இல்லை’ என்று வாதங்கள் நடக்கும்போதே... திடீரென காவல்துறை தாக்க, இராணுவமும் இணைந்துகொண்டு தாக்கி​யது.
இதில் யாழ்ப்பாணத்தின் 'உதயன்’ பத்திரிகை ஆசிரியரும் தாக்கப்பட்டார். காவல்துறையும் இராணுவமும் மாணவர்களைத் தேடித் தேடிப் பிடித்துச் சென்றது. ஓர் அமைதிப் போராட்டத்தை இரத்தப் போராட்டமாக இராணுவத்தின் தூண்டல் மாற்றிவிட... அடுத்தடுத்த நாட்களில் மாணவப் பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
2009 போரின் இறுதிக் கட்டத்தில் சிக்கிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்தது போல, மாணவர்களுக்கும் புனர்​வாழ்வு நடவடிக்கைகள் என்று இராணுவம் பிரச்சினையைத் திசைமாற்றியது. இதைக் கண்டித்துதான் தமிழ்க் கட்சிகளும் தமிழர்களுக்கு ஆதரவான சிங்களக் கட்சியும் டிசம்பர் 4-ம் தேதி ஓர் அமைதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. அதற்காகத்தான் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் சென்றேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி அங்கு படிக்கும் சிங்கள மாணவி ஒருவர் இணையத்தில் பதிவுசெய்திருந்தது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது. 'நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களைப் புலிக​ளாக்கி இருக்கிறோம்.
நவம்பர் 26-ம் தேதி மாலையில் இருந்து சக தமிழ் மாணவி​களின் கண்களில் ஒருவிதமான தாக்கம் இருந்தது. மாணவர்களை இராணுவத்தினர் தாக்க, மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினர். தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள், அன்று திடீரெனப் புலிகளாக மாறியிருந்தனர்... அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை... உணர்வால் புலிகளாகவே இருந்தனர்’ என்பதே அந்தப் பதிவு.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்... தமிழ் இளைஞர்கள் மனதில் எப்படியான தீ கனன்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு சிங்கள மாணவியின் பதிவே சான்று. இன்றாகட்டும் அன்றாகட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்... தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீ.
சிங்கள இராணுவத்தைக் கண்டித்து தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. கிட்டத்தட்ட 100 பேர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற, மக்கள் என்னவோ எதுவுமே அங்கு நடக்காததுபோல் பொம்மை​களைப்போல அந்த ஆர்ப்பாட்ட நிகழ்வை கடந்து சென்றனர்.
இராணுவம், ஆயுதத்தோடு குறுக்கும் நெடுக்கும் கடந்துகொண்டு இருந்தது. ஓர் இராணுவ அதிகாரி யுனிசெப் மகிழுந்தில் வந்து ஆர்ப்பாட்டத்தைப் பார்வையிட்டுச் சென்றார். வழக்கத்தைவிட புகைப்படம் எடுப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
நான் அருகில் இருந்த நண்பரிடம், 'யாழ்ப்பாணத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்கள் இருக்காங்களா?’ என்று கேட்க... அவர், 'படம் எடுக்கிறவர்களில் பெரும்​பாலானோர் ராணுவத்துக்கும் அரசுக்கும் பணத்துக்காக வேலை செய்பவர்கள்’ என்றார். இதுவரை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவரங்களை விவரிப்பதோடு ஆர்ப்பாட்டமும் முடிவுற்றது.
யாழ்ப்பாணப் பயணத்தின் இறுதியில், மீனவப் பிரதிநிதி ஒருவரிடம் நான் பெற்ற தகவல்கள்,
இலங்கைத் தமிழ் மீனவர்கள் நிலைமையும் தமிழக மீனவர்கள் நிலைமையும் அப்பட்டமாகப் பிரதி​பலித்தன. அவர் பேச்சு, கடல்கூட எவ்வளவு சிங்கள​மயம் ஆக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது.
''வடகிழக்கில் 30 வருடங்களுக்கும் மேலான இனப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட தொழில்களில் மீன்பிடியும் ஒன்று. அந்தக் காலகட்டங்களில் பெருமளவில் நாங்கள் மீன்பிடியில் ஈடுபடவே இல்லை. இன்று, சிங்களக் கடற்படை எவ்வளவோ கட்டுப்​பாடுகளோடும் பாஸ் நடைமுறையோடும்தான் மீன் பிடிக்க அனுமதிக்கிறது.
இன்று, இங்குள்ள மீனவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அதன் மூலம் வாங்கிய வலைகளை கடலில் விரிக்கின்றனர். ஆனால், அந்த வலைகளை எங்கள் சொந்தங்களான தமிழக மீனவர்களே அறுத்துவிட்டுச் செல்வது வேதனையிலும் வேதனை.
அதையும் மீறி தமிழகக் கடலோரங்களில் இன்று நடைமுறையில் உள்ள இழுவைப் படகுகளும் அதன் மடிமுறையும் தங்கூசி வலைகளும் மொத்தக் கடல்வளத்தையும் சுரண்டுகின்றன. இந்த இழுவைப் படகுகளின் மடிகள், டிராக்டரைப் போல் மொத்தமாக கடலின் கீழ் பாகத்தில் இருக்கும் மொத்தத்தையும் அள்ளிச் செல்லும்.
இந்த வலைகள் மொத்தமாக தமிழகக் கடலோரத்தின் வளத்தை அழித்துவிட்டது. அதனால், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டியுள்ளது. சிங்களக் கடற்படையினர், அதைக் காரணமாக வைத்துக்கொண்டு அவர்களைத் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். எங்களுக்கு உதவுவதுபோல் கடற்படை நடித்து, தமிழக மீனவர்​களுக்கும் எங்களுக்கும் பிரச்சினையைத் தூண்டத் திட்டமிடுகின்றனர்.
எங்கள் அப்பன் காலத்திலும் என் பாலிய காலத்​திலும் தமிழக மீனவர்களும் நாங்களும் கடலில் பார்த்துப் பேசியபடி மீன்பிடித்துள்ளோம். அன்று, அங்கும் இங்கும் கடல் வளத்தை அழிக்காத வலை​களைப் பயன்படுத்தினோம். ஆனால், இன்று தமிழக மீனவர்கள் பயன்படுத்தகிற இழுவைப் படகுகள் கடல் வளத்தை அழிக்கிறது. தங்கூசி வலைகள் நாங்கள் விரித்திருக்கும் வலையை அறுத்துச் செல்கிறது.
எங்களின் நிலைமையைப் புரிந்து​ கொள்ளுங்கள் என்று சிங்கள அரசிடமா நாங்கள் கேட்க முடியும்? எங்கள் சொந்தங்களான தமிழக மீனவர்களிடம்தானே கேட்க முடியும். இழுவைப் படகுகள் நம் எதிர்காலக் கடல் வளத்தை அழிக்கும். எதிர்காலத்தில் இங்கு மீன் பிடிக்கப் போவது நம் சந்ததிதானே?'' என்றவரின் பேச்சை இடைமறித்து, ''இதற்குத் தீர்வுதான் என்ன?'' என்று கேட்டேன்.
அவர், ''இழுவைப் படகுகள் தடைசெய்யப்பட வேண்டும். தமிழகக் கடல் வளம் தொடர்பாக ஆய்வு​கள் செய்யப்பட வேண்டும். தங்கள் கடல் எவ்வளவு அழிந்துள்ளது என்பதை தமிழக மீனவர்கள் புரிந்துகொள்ளும் திறனை இந்தக் கடல் வள ஆய்வுகள் உணர்த்தும். கடல் வளம் அழிந்தால் நம் நிலமும் அழியும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்?'' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி​னார்.
தமிழகக் கடலோரங்களில் மீன் இல்லை என்ற நிலையால், எல்லையற்ற கடலை மீனவர்கள் கடக்​கின்றனர். பிழைப்புக்காக எல்லையைக் கடந்துவரும் மீனவன், சிங்களக் கண்களுக்கு தமிழனாகத்தான் தெரிகிறான். இலங்கை எல்லையில் மட்டும் கடற்படை தாக்கவில்லை.
இந்திய எல்லைக்குள் நுழைந்தும் சிங்களக் கடற்படை தாக்குகிறது. இன அழிப்புப் போரின் நீட்சியாய், மீனவர்களைக் கொல்வதை ஒரு வேலையாகவே வைத்துள்ளது இலங்கைக் கடற்படை. கடல் வளத்தைக் காப்பதோ இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு வாழ்வா​தாரத்தை ஏற்படுத்துவதோ கடற்படையின் நோக்கம் அல்ல.
தமிழன் கண்ணில் பட்டாலே, தாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்​படையிடம் சிக்கினால் முதலில் திட்டுவது, 'இந்திய வேசி மகனே’ என்றுதான்.
உயிர்க் கொலைகள் சாதாரண நிகழ்வாக, அன்றாட செய்தியாக மாறிவிட்டது. மீன் தேடும் கடலில், தமிழனின் உயிரைத் தேடுகிறது சிங்களக் கடற்படை.
பயணத்தை முடித்துக்கொண்டு, விமான நிலையம் நோக்கி விரைகிறேன்.
அடுத்த இதழில் முடியும்...
புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 22
மகா. தமிழ் பிரபாகரன்

   போர் நடத்துவதே குற்றம். அதில், நெறிமுறைகளை மீறுவது அதைவிடப் பெரிய குற்றம். உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.அங்கே வாழும் மக்களின் மனநிலையை அறிவதற்காகவே எனது பயணம் திட்டமிடப்பட்டது.இந்த 25 நாட்கள் பயணத்தில் நான் கண்டதும் அறிந்ததும் ஈழத்தின் கொடுமைகளில் கடுகளவே. இலங்கை இனவாதத்தின் சிறுஅளவே.போரில் மனித வேட்டை நிலமாக இருந்த முள்ளிவாய்க்கால், இன்றும் அந்த சோகத்தை அப்பிக்கொண்டுள்ளது.
வடகிழக்கு நிலம் கண்காணிப்புப் படைகளில் அத்துமீறல்களால் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறது.மலையகத் தோட்டங்களை நம்பியுள்ள இலங்கையின் சர்வதேசப் பொருளாதாரம், தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது.
அனாதையான இந்த நிலத்துக்கும் அந்த மக்களுக்கும் இனியும் ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வு என்றால், உலகமும் ஐ.நா-வும் எஞ்சிய தமிழர்களையும் கொன்று புதைத்துவிட்டு, ராஜபக்சவை சுடுகாட்டின் ராஜாவாக்கி விடலாம். இலங்கையை உலகின் வியாபார நிலமாக்கிக் கொள்ளலாம்.
கொடூரங்கள் நடந்தது, இராணுவம் இரத்தத்தில் குளித்தது, பிணங்கள்கூட பாலியல் பண்டங்களாக மாற்றப்பட்டன என வரிசையாக போர்க் குற்றங்களின் காணொளிகள் வெளியாகின்றன.
ஆனால், அந்தப் போர்க் குற்றக் களத்தில் பத்திரிகையாளர்களின் மனிதாபிமானச் செய்திப் பரிமாற்றங்கள் இன்னும் நமக்குத் தெரியாத இருட்டுக்குள்ளேதான் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
அப்படிப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர், உடைந்த மனதோடும் கண்ணீரோடும் பகிர்ந்து கொண்டது...
''வன்னியின் போர்ச் சூழலில் பணியாற்றிய ஊடகங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று, 'புலிகளின் குரல்’, மற்றொன்று, 'ஈழநாதம்’ நாளிதழ்.
'புலிகளின் குரல்’ வானொலி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்காகப் பணியாற்றிய பல அறிவிப்பாளர்கள், பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அப்படியிருந்தும் அந்த வானொலி தன் பணியை மே 16 வரை கடுமையான போர்ச் சூழலிலும் செய்தது. வானொலி ஒலிபரப்பு நிலையம் என்பது ஒரு சிறிய ரக வான் மட்டும்தான்.
மக்கள் இடம்பெயரும்போது மக்களோடு மக்களாக அந்த வேனும் இடம்​பெயரும். வழிகளில் இருக்கும் மரங்களின் கிளைகளில் அன்டெனா பொருத்தப்பட்டு, மரத்தின் கீழே வாகனம் நிறுத்தப்பட்டு, செய்தியும் மற்ற தகவல்களும் ஒலிபரப்பப்படும்.அந்த நேரத்தில் வாகனத்தின் அருகிலேயே செல்களும் குண்டுகளும் விழும். அந்தச் சத்தம் வானொலி கேட்கிறவர்களுக்கு கேட்கும். அந்த வானொலியில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் சாதாரண மக்கள்தான்.'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ பரந்தனின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் செயலிழந்தப் பிறகு, 'புலிகளின் குரல்’தான் வன்னியில் செயல்பட்டது.அதேபோல்தான் 'ஈழநாதம்’ பத்திரிகையும். வன்னி மக்களுக்கு தொலைத் தொடர்பு முற்றும் துண்டிக்கப்பட்ட பிறகு, மக்களிடையேயான தொடர்புகளை 'ஈழநாதம்’தான் செய்தது.அதாவது, 'புலிகளின் குரல்’, 'ஈழநாதம்’ வழியாகத்தான் ஒருவர் இறந்து போனார், காணாமல் போனார் என்ற செய்தியைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்கான செய்தி சேகரிப்பின்போது, தாக்குதலில் பல செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.'ஈழநாத’மும் மக்களோடு மக்களாகத்தான் இடம்பெயர்ந்தது. ஒரு கனரக வாகனத்தில் அச்சு இயந்திரம், கணினி, ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருக்கும்.மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து செய்தியை அச்சிட்டு வெளியிடும். அந்த போர்ச் சூழலிலும் யார் கொல்லப்பட்டார், அவர் வசித்த பகுதி, பெயர் எனக் கிடைக்கும் விவரங்களை எல்லாம் சரிபார்த்து வெளியிட்டது.மிகுந்த இக்கட்டான நிலைமை நெருங்க நெருங்க... 'காகிதத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதனால், செய்திகளைக் கிடைத்த காகிதங்களில் (ஒரு பக்கம் பயன்படுத்தப்பட்ட காகிதம்) எல்லாம் அச்சிட்டனர். அந்த அளவுக்கு தனது ஊடகப் பணியை 'ஈழநாதம்’ செய்தது.இந்தப் போரில் மேரி கெல்வின் போன்ற பல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள்கூட அக்கறையோடு செயல்பட்டனர்.அது மட்டுமின்றி 'தமிழ்நெட்’ போன்ற இணையப் பத்திரிகைகளும் கடமைகளை செவ்வனே செய்தன.இப்போது யுத்த காலக் காணொளிகள் பல வெளியாகின்றன. ஆனால், அந்தக் காணொளிகளை வெளியில் கொண்டு செல்லப் பணியாற்றிய பத்திரிகையாளர்களின் நிலைமைகளை இன்றும் யாரும் அறிய மாட்டோம்.
வன்னியின் கொடூரப் போரில் பத்திரிகையாளர்கள், உயிரைக் கொடுத்துச் செய்த செய்தி சேகரிப்புகள்தான், தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கான சாட்சிகள்.
2009-ல் நடந்தது இரத்தப் படுகொலைகள். ஆனால், இன்று நடப்பது திட்டமிடப்பட்ட இன அழிப்பு. அந்த இன அழிப்புச் செயல்கள் மொழி, கல்வி, கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் பாகுபாடு இல்லாமல் படர்கிறது.
கிளிநொச்சி-முல்லைத் தீவு மாவட்டங்களில் உள்ள 250 சிறுவர் பள்ளிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, இந்தப் பள்ளிகளுக்கு தலைமை, அரசு பள்ளிக் கல்வித் துறை அல்ல. இராணுவத்தை வழிநடத்தும் பாதுகாப்புச் செயலகம்தான்.பாதுகாப்புச் செயலகத்தின் குடிமக்கள் பாதுகாப்புப் படையே, இந்த ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் தலைமை வகிக்கும்.இதுவரை 3,500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் 19,500 ரூபாய்.மாதத்தின் முதலாவது, மூன்றாவது திங்கட்கிழமைகளில் படைப்பிரிவின் பணியகத்தில் கையெழுத்திட வேண்டும்.ஒருமுறை அதில் கையெழுத்திடத் தவறினால், மாதச் சம்பளத்தில் 4,500 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.இந்த ஆசிரியர்கள் வகிக்கும் பதவி நிலை... குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதுதான். ஆசிரியர்கள் என்பது அல்ல.மதியம் 12 மணி வரை பள்ளியில் பணியாற்றிவிட்டு, அதன்பின் குடிமக்கள் பாதுகாப்புப் படை கொடுக்கும் பணியைச் செய்ய வேண்டும்.விசுவமடுவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்புப் படையின் 430-வது படையணியின் தலைமையகம், இதற்கான கட்டுப்பாடு தலைமையாக உள்ளது.இந்தப் படையணியின் கட்டளை அதிகாரியான கேணல் ரத்னபிரிய, துணைக் கட்டளை அதிகாரி மேஜர் ரஞ்சித் மல்லவராச்சிதான் இந்தப் பள்ளிப் பணிகளுக்கான தலைமைகள்.
இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் பகுதிகள் முழுமையாக சிங்களமயம் ஆகிவிடும். 'தமிழர்’ என்பதே தமிழருக்கு நினைவில்லாமல் போய்விடும்.
இலங்கை தன்னை நிலைநிறுத்த எந்த நாட்டோடும் நட்பு பாராட்டும். ஆனால், ஒருபோதும் இந்தியாவின் கைக்குள் அடங்காது.சீனா-பாகிஸ்தானை வைத்து இந்தியாவை அடக்குவதுதான் இலங்கையின் திட்டம். அதற்கான முழுக் கட்டுமானத்தை கொழும்பில் இருந்து கச்சதீவு வரை கட்டியெழுப்பிவிட்டது இலங்கை அரசு.தமிழர்களை மையம்கொண்ட சிங்கள அரசின் படுகொலைகள், இப்போது முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது.அன்பைப் போதிக்கும் பிக்குகளே, முஸ்லிம்களின் கடைக்குள் புகுந்து இராணுவத்தைப் போல் எல்லாவற்றையும் சூறையாடு​கின்றனர்.'இது புத்த தேசம், சிங்களர்களுக்கே சொந்தம்’ என்று கோஷமிடுகின்றனர்.'குரான் ஓதும்போது, ஆயுதங்களையும் தாருங்கள் என முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ய மாட்டார்களா?’ என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி பேசுகிறார் என்றால், முஸ்லிம்களும் இலங்கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?'' என்றார் அந்தப் பத்திரிகையாளர்.
'பொதுபல சேனா’ என்ற புத்த அமைப்பிடம்தான் இலங்கை அரசை ஆட்டி வைக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிதான் மகிந்த ராஜபக்ச.
இலங்கையின் புத்த மயத்துக்கு ஓர் உண்மை எடுத்துக்காட்டு... மாவத்தையில் உள்ள முஸ்லிம் சிறுவன் ஒருவன் புத்த பிக்குவாக மாற்றப்பட்டுள்ளான்.
முகமத் சப்ராஸ் என்ற அந்தச் சிறுவன் பெயர் 'தலங்காம நாபித’ என்றும் மாற்றப்பட்டுள்ளது.இனி, இலங்கை அரசின் அடுத்த போர் என்பது முஸ்லிம்களுடன்தான். பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்ட பிறகும் ஹலால் உரிமை பறிக்கப்பட்ட பின்னரும், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளே இலங்கையின் பக்கம் நிற்கிறது என்றால், இனி முஸ்லிம்களின் நிலை இலங்கையில் என்னவென்று எண்ணிப் பாருங்கள்.தமிழர்கள் மட்டுமல்ல... எந்தவொரு இனமும் சிங்கள இனவாதத்தோடு ஒன்றி இனி வாழ முடியாது என்பதே யதார்த்தம்.சிங்கள தேசத்தோடு வெட்டுண்டு போவதே, இலங்கையில் அடிமைப்பட்டு கிடக்கும் இனங்களுக்கான விதியோ? அந்த மண்ணைவிட்டு வெளியேறும் போது, 12 நாட்கள் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்துவந்து போனது...''எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒருநாள் எம் மக்கள் விடுதலையடைவார்கள். அப்போது என் தேசத்துக்காக என் தேசிய பொறுப்பு நிறைவேறும்!''
புலித்தடம் தேடி....முற்றும்
ஜூனியர் விகடன்






மகா. தமிழ் பிரபாகரன்

Mar 21, 2013

புலித்தடம் தேடி…மகா. தமிழ் பிரபாகரன்-பாகம் 18

திருகோணமலையை அடையும்போது மழை சற்று ஓய்ந்திருந்தது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தால் (டெலோ)  நிறுவப்பட்ட ‘வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கம்’ இருந்தது. அந்த எழுத்துக்கள் இலங்கையின் 65-வது சுதந்திரத் தினத்தின்போது அழிக்கப்பட்டுவிட்டன.
திருகோணமலையில் உள்ள ‘திருக் கோணஸ்வரம் ஆலயம்’ இலங்கையில் உள்ள மிக முக்கிய கோயில்களுள் ஒன்று. ஆலயத்தின் கீழ் பகுதியில் எல்லாம் இராணுவ மையங்கள்தான் இருந்தன. ‘கடவுள் இல்லாத இடமே இல்லை’ என்று ஆத்திகர் கூறுவர். ‘தமிழர் பகுதிகளில் இராணுவம் இல்லாத இடமே இல்லை’ என்பதுதான் இப்போதைய நிலை.
அன்று மாலையே மட்டக்களப்புக்குப் புறப்பட்டேன். வழிகளில் காடுகளை நோக்கி இராணுவம் துப்பாக்கி ஏந்தி நின்றது. ‘மாவீரர் நாளை’ எங்காவது கொண் டாடி விடுவார்களா என்ற எச்சரிக்கை உணர்வு. இராணுவ ஆதிக்கத் தால் தமிழ் மக்களே மாவீரர் நாளை மறக்க நேரிட்டாலும், இராணுவம் மறக்கவிடாது போலும்.
மாவீரர் நாளும் கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், ‘விளக்குகள்’ ஏற்றப்படும் என்ற பதற்றம் இராணுவத்திடம் இருந்தது. மட்டக்களப்பை வந்தடைந்தேன்.
விடுதிகளில் அன்று தங்குவது சிரமம். ‘உங்கள் பெயர் தமிழ்ப் பிரபாகரன் என்று இருக்கிறது. இந்தப் பெயருக்கு அறை கேட்டால், சந்தேகத் தோடு பார்ப்பார்கள். ஒருவேளை அவர்கள் இராணுவத்துக்குக்கூட தகவல் தர நேரிடும்’ என்று என்னை இரவு தங்க வைப்பதற்கு உடனிருந்த நண்பர் மிகவும் சிரமப்பட்டார். நண்பர் இந்த அளவுக்கு அஞ்சியதற்குக் காரணம், கருணாவின் ஆட்கள் மட்டக்களப்பு எங்கும் திரிவார்கள் என்பதுதான்.
மாவீரர் நாள் வந்தது. முந்தைய இரவின் நெடுநேரம் வரையில் புலிகள் காலத்தில் மாவீரர் நாள் எப்படியிருக்கும், எவ்வளவு பலத்துடன் புலிகள் நிலைகொண்டு இருந்தார்கள் என்பதைக் கண்கள் கலங்க விவரித்தார்.
அத்தோடு, எங்களின் சுதந்திரத்தை வைத்து தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எப்படி எல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று வேதனையை வெளிப்படுத்தினார். சுதந்திரமற்று வாழ்வது என்பது எவ்வளவு கொடியது என்று தமிழர் நிலங்களில் வாழ்ந்து பார்த்தால் தெரியும்.
உண்மையில் இப்போதைய நிலைமையில் அரசியல் தளத்தில் தமிழ் மக்கள் எந்தக் கட்சியையும் நம்பவில்லை. அவர்கள் எல்லாம் தங்களை வைத்துப் பிழைத்துக்கொண்டு உள்ளார்கள் என்பதை இந்த நண்பரைப்போல் பலர் புரிந்துவைத்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்குத் தேவை வரும்போது மட்டும் தமிழ் மக்களுக்கு உரிமை என்ற முழக்கம் ஓங்கும். ஆனால், அந்தத் தமிழ் மக்களுக்காகப் போராட ஒருபோதும் அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக நின்றது இல்லை. சிங்களவர்களோ ‘சிறு துளி பெரு வெள்ளமாக’ உள்ளார்கள், தமிழர்களோ ‘பெரு துளி சிறு வெள்ளமாக’க்கூட இல்லை” என்ற வேதனையை, நான் பார்த்த தமிழ் மக்கள் அனைவருமே சொன்னார்கள்.
மாவீரர் நாளும் விடிந்தது. ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கச் சென்றோம். அவர், ”போருக்குப் பின்னால சமாதானம் என்று சொல்லப்படுகின்றது. மக்கள் ஒற்றுமையா இருக்காங்கள், நிம்மதியா இருக்காங்கள், சமாதானத்தோடு இருக்காங்கள், போராட்டம் இல்லாம இருக்காங்கள் என்று வெளியில் சொல்கிறார்கள்.
ஆனால், சமாதானம் என்ற பெயரில் மிகத் திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் தமிழர் பகுதிகளில் நடக்கிறது. உண்மையில் தமிழ் ஆட்களுக்கு இன்னும் சரியான தீர்வு கொடுக்கப்படவில்லை. தீர்வைக் கொடுக்காது எந்தளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ… எந்தளவுக்கு மூடி மறைக்க இயலுமோ… அந்தளவுக்கு தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லை. அதிகாரத்தைத் தர வேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும், இப்பவும் தீர்வுக்கு அரசு எண்ண வில்லை.
இப்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள், சிங்கள நிர்வாகம் என சிங்களத் தரப்பு ஆக்கிரமிப்புகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகமாக இருந்தது, இன்று சிங்களமயமாக்கப்பட்டு இருக்கிறது. வர்த்தகங்கள், மருத்துவம் பார்க்கக்கூடிய ஆட்கள், மற்ற வேலைக்கு அமர்த்தக்கூடிய ஆட்கள் என மட்டக்களப்பில் எல்லாமும் சிங்கள மயம்.
இன்னைக்கு வடகிழக்கு முழுக்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. ஒரு ஸ்டேஷன்லகூட தமிழ்ல கதைச்சுப் புகார் கொடுக்க முடியாது. இவர்களின் நோக்கம் எல்லாம் தமிழர்களைத் தனித்து வாழவிடக் கூடாது. தனித்து வாழவிட்டால், மீண்டும் போராட்டம் வரும். மீண்டும் உரிமை கேட்பார்கள் என்பதை எண்ணித்தான், இந்த வேலை நடக்கிறது.
ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டு, எப்படியெல்லாம் எங்களை அழிக்கணுமோ, அப்படியெல்லாம் அழிக்க வேலைகள் நடக்கிறது. தமிழனைத் தலையெடுக்க விடாமல், விழுந்தவனை அப்படியே புதைக்கும் வேலையைத்தான் இன்று சிங்கள தேசம் செய்கிறது. தமிழர்களாகிய நாங்கள் இன்று அனாதைகளாக உள்ளோம்.
மட்டக்களப்பில் இப்போது உள்ள சுற்றுலா பகுதிகள் மிரட்டப்பட்டு, மகிந்த ராஜபக்ச குடும்பத்தால் பறிக்கப்படுது. பாக்கு குடா என்ற இடம், மிகவும் அழகான கடற்கரைப் பகுதி. கடலில் குளித்துக்கொண்டே இருக்கலாம். அலையே அடிக்காது. இது மாதிரியான இடங்கள் ராஜபக்ஷே குடும்பத்தால் மிரட்டி வாங்கப்பட்டு, பெரிய பெரிய சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. பணம் பெருகும் எல்லா இடத்திலும் ராஜபக்ச குடும்பம் இருக்கும். அல்லது கருணா, பிள்ளையான் கும்பல் இருக்கும்.
இந்த நிலத்தில் நாங்கள் 24 மணி நேரக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறோம். இன்றைய அளவில் மட்டக்களப்பில் மட்டும் 26 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். வடகிழக்கை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 89 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். இவர்களில் இப்பவும் பல பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கியது சிங்கள அரசப் பயங்கரவாதம்தான். இன்னும் 100 ஆண்டுகளானால், ராஜபக்சவுக்குப் பின்னால்கூட சிங்கள அரச துவேஷத்திடம் இருந்து எங்களுக்கு விடிவோ, உரிமையோ கிடைக்காது.
என்னோட சிறிய வயசில் நடந்த சில கொடூரமான சம்பவங்கள் என் மனதில் நீங்காத் துயராய் இராணுவத்தின் மிருகத்தனத்தை எனக்கு தினமும் உணர்த்திக்கிட்டே இருக்கு. 1990 காலப்பகுதியில் பெரும்பாலான அழிப்பு சம்பவங்கள் நடந்துச்சு. கொக்குவில் என்ற கிராமத்தைச் சுற்றிவளைச்சு மக்களை கொன்று அங்கேயே புதைத்தாங்கள்.
1990 ஜூன் மாதத்தில் தமிழ் மக்கள் 50 ஆயிரம் பேர் அகதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தனர். அந்த மாதத்தில் ஒருநாள் விடியற்காலை இராணுவம் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைச்சு, பெண்களையும் ஆண்களையும் தனிமைப்படுத்தினார்கள். ஆண்களை மட்டும் விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வரிசையாக உட்காரவைத்தார்கள்.
நானும் ஒருவனாய் அங்கு உட்கார்ந்திருந்தேன். மைதான நுழைவாயிலில் ஆறு தலையாட்டிகள் (முகமூடி அணிந்த காட்டிக்கொடுப்பவர்கள்) வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். ஒருவர் ஒருவராக நகர்த்தப்பட்டோம். இந்தச் சோதனையில் ஒரு தலையாட்டி தலையாட்டினாலும், சட்டையைக் கழட்டிக் கைகளும் கண்களும் கட்டப்பட்டு இராணுவப் பேருந்தில் ஏற்றுவார்கள்.
தலையாட்டிகளை நெருங்கினேன். ராணுவ ஆள் ஒருவர் என்னை தலையாட்டிகளின் முன் தள்ளினார். ஐந்து தலையாட்டிகள் என்னை சந்தேகிக்கவில்லை. கடைசித் தலையாட்டியிடம் வரும்போது என் இதயம் நடுங்கியது. என்னை சந்தேகப் பார்வையிலேயே பார்த்தான். ‘நீ சென்ட்ரல் காலேஜ்தானே’ என்றான்.
நான் ‘இல்லை’ என்பதற்குள், என்னைத் தள்ளிவிட்டான். என் உயிர் தப்பியது. ஆனால், இந்த தலையாட்டிகள் சொன்னதால், 153 பேர் ராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டனர். முனாப் என்ற ராணுவ அதிகாரிதான் இந்த ராணுவப் பிரிவுக்கு தலைமைத் தாங்கினார். ஏற்றப்பட்ட யாருமே விடுதலைப் புலிகள் இல்லை.
எல்லாருமே சாதாரணமானவர்கள், அப்பாவிகள். இவர்கள் நாவலடி என்ற பகுதிக்குக் கொண்டுசென்றதாகத் தகவல். அங்கு 153 பேரும் சித்ரவதை செய்யப்பட்டு மயக்கமுற்ற நிலையில், உயிரோடு டயர்கள் அடுக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். இது மட்டக்களப்பின் அதிபயங்கர சம்பவங்களுள் ஒன்று.
இளைஞர்களை அழிப்பதன் மூலம் போராளிகள் உருவாகாமல் தடுக்கலாம் என்று சிங்கள இராணுவம் எண்ணியது. இவர்கள் எல்லோரும் பின்னர் காணாமல்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்துக்கு விசாரணைகள், விசாரணை கமிஷன் என்று எதுவுமே கிடையாது.
மனித உரிமை அமைப்புகள் எதுவும் வாய் திறக்கவில்லை. இதைப் போல் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இந்த மண்ணில் நடந்துவிட்டன. நாடு அமைதியாகிவிட்டது என்கிறார்கள். அமைதியாகவில்லை. மயானமாகிவிட்டதால் அமைதியாய் தெரிகிறது” என்றார்.
அப்படி தங்கள் உரிமையையும் உயிரையும் மண்ணையும் காப்பதற்காக சாவுண்ட மாவீரர்களின் நாள் இது. ‘அதே தினத்தில் கார்த்திகை விளக்கீடும் வந்துள்ளது. மாவீரர்களின் ஆசியால் அந்த முருகன் கொடுத்த வரம்தான்’ என்று நாங்கள் பார்க்கச்சென்ற பூசாரி கூறினார்.
வீடுகளிலும் கோயில்களும் கடைகளிலும் ஏற்றப்பட்டு இருந்த விளக்குகளைப் பார்த்து எனக்குக் கண்கள் பனித்தன.
- ஊடறுத்துப் பாயும்

ஜூனியர் விகடன்