Apr 3, 2017

இதய நோயை வெல்வோம்!

இயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்!

ந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை தடுக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை வைத்தியத்தைக் காண்போம் இங்கே...

* தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். நெல்லிக்காயில் அரிநெல்லி வேண்டாம். நாட்டு நெல்லி, மலை நெல்லி என்று ஊருக்கு ஊர் பல பெயர்களில் சொல்லக்கூடிய, அளவில் பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
* பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும். கல்லீரல், கணையத்தைப் பாதுகாக்கும். அந்த வகையில் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது இந்த நெல்லிக்காய். ஏன்... எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும் என்று ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், நாம் சாப்பிடும் முறையைப் பொறுத்துதான் நோய் குணமாகும்.

* இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். இப்படி செய்தால் உடனடியாக இதய படபடப்பு அடங்குவதோடு காலப்போக்கில் இதயம் பலப்படும்.


* நம் வீடுகளில் இஞ்சி, பூண்டு இல்லாத சமையலே கிடையாது. ஆனாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக இஞ்சியை துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்து வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், ஜீரணக்கோளாறு, சளி பிரச்னை உள்ளிட்ட உடல்கோளாறுகள் சரியாகும். அதிலும் முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.

* அதேபோல் பூண்டும் ரத்த அழுத்தத்தை சரிபண்ணக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்!

Mar 30, 2017

தொப்பை

தொப்பை 

ன்றைய தேதியில் உடல்பருமனும் தொப்பையும்தான் நமது தேசியப் பிரச்னை. தோற்றத்தை மட்டும் அல்ல; மொத்த உடல் நலத்தையுமே பாதிக்கும் தொப்பையைக் குறைத்து ஃபிட்டாவது எப்படி?
தொப்பை என்றால் என்ன

பொதுவாக, நம் உடலில் டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides), தோல்புறக் கொழுப்பு (Subcutaneous fat), உட்புறக் கொழுப்பு (Visceral fat) என மூன்று வகையான கொழுப்புகள் உள்ளன. இதில் டிரைகிளிசரைட்ஸ் ரத்தத்தில் கலந்து இருக்கும். தோல்புறக் கொழுப்பு தோலின் அடியில் உள்ள கொழுப்புப் படலம். உட்புறக் கொழுப்பு என்பவை குடலின் வெளிப்புறம் ஒட்டிக்கொண்டிருப்பவை. இந்தக் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் அதிகமாக இருப்பதைத்தான் தொப்பை என்கிறோம்.
தொப்பையால் என்ன பிரச்னை

உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய்கள், பக்கவாதம், புற்றுநோய்கள் உட்படப் பல பிரச்னைகளுக்கும் தொப்பை நுழைவாயிலாய் மாறிவிடுகிறது.

தொப்பை ஏன் உண்டாகிறது

* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கார்போனேட்டட் பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்.

* நார்ச்சத்து குறைந்த உணவுகளைச் சாப்பிடுதல்.

* உடற்பயிற்சி, உடல் உழைப்பு இன்மை.

 
* மனஅழுத்தம், சோகம், கோபம் காரணமாக அதிகமாகச் சாப்பிடுதல்.

* மதுப்பழக்கம்.

* தூக்கமின்மை.

* பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் மாற்றம்.

தொப்பை குறித்த தவறான நம்பிக்கைகள் 

நம்பிக்கை: அதிகமாக உண்டால் தொப்பை வரும்; தொப்பை குறையவும் குறையாது.

உண்மை நிலை: இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். சிலர் அதிகமாக உண்டாலும் குண்டாக மாட்டார்கள்.  காரணம், அவருடைய ஜீன் மற்றும் உடல்வாகாய் இருக்கக்கூடும். சிலர், குறைவாகச் சாப்பிட்டாலும் தொப்பையுடன் இருப்பார்கள். பரம்பரையாகக் குண்டாக இருப்பவர்கள், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தொப்பையைக் குறைக்க வாய்ப்புகள் உள்ளன.

நம்பிக்கை: தொப்பை இருந்தால் இதயநோய்கள் வரும். உயிரிழப்புகூட நேரலாம்.

உண்மை நிலை: அதிகக் கொழுப்பு எப்போதும் ஆபத்துதான். தொப்பை இருந்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியாது. மேலும், கொழுப்புப் பலதரப்பட்ட நோய்களை உண்டாக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கலாம்.

நம்பிக்கை: உடற்பயிற்சியால் தொப்பை குறையும்.

உண்மை நிலை:  உண்மைதான். ஆனால், வெகுதூரம் நடந்த பின்பு, எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பது, உடற்பயிற்சிகளைத் தவறாகச் செய்வது, ஸ்போர்ட்ஸ் டிரிங்க்கைப் பயிற்சியின் இடையே குடிப்பது போன்றவற்றால் கொழுப்புக் குறைவது தடுக்கப்படுகிறது. இதனால், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது கடினமாகிறது. 
தொப்பையைக் குறைக்கும் வழிகள்! 

உணவு: முட்டை, பாதாம், ஓட்ஸ், யோகர்ட், பால், புரொக்கோலி, பச்சைக்காய்கறிகள், மீன், இறைச்சி, கீரை வகைகள், முளைக்கட்டிய பயறு, கடலை, பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

பயிற்சிகள்: தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாம். அடிவயிற்றில் உள்ள சதையைக் குறைக்க, அடிவயிற்று பயிற்சிகள், யோகாசனங்கள், சிட் அப் பயிற்சிகள் செய்யலாம்.


Mar 18, 2017

நடைபயிற்சி

‘நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல்ரீதியாக எத்தனையோ நன்மைகள் கிடைப்பதை நாம் அறிவோம். அதேபோல், மனதுக்கும் பல நன்மைகள் உண்டு என்பது தெரியுமா?’ என்கிறார் உளவியல் மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதி

நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல... ஒரு தவமாகவே கருதுகின்றன புத்த மத சாஸ்திரங்கள். வாக்கிங் மெடிட்டேஷன்(Walking meditation) என்று புத்த மத நூல்கள் இதனை குறிப்பிடுகின்றன. எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறீர்களா?

இயற்கையோடு இணைந்து இருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான பகுதிகளில் நடை பழகுவது என்பது நமது படைப்பாற்றலையும் தூண்டக்கூடியது.

பூமியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிலத்தின் மீது அழுத்தமாக வைக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் சிதறக்கூடாது. அவசரம் கூடாது. சுற்றி நடக்கும் சம்பவங்கள், அலைபோல் எழும் சிந்தனைகள், நேற்றைய நினைவு எச்சங்கள், இன்றைய எதிர்பார்ப்புகள் இப்படி எதையுமே நினைக்கக் கூடாது.

மண்ணின் மீது படும் நமது பாதங்களை அதன் அழுத்தங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நமது பாதம் அழுந்த அழுந்த மெல்ல எண்ண வேண்டும். ‘நான் தனி ஆள் இல்லை; இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி நான்’ என்பதோடு காலம் சென்ற நமது மகான்கள், முன்னோர்கள் இவர்களின் நல்லெண்ணங்கள் புதைந்துக்கிடக்கும் இந்த மண்ணில் மென்மையாக அடி பதிப்பதன் மூலம் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதை கருத வேண்டும்.

ஆழமாக மூச்சை இழுத்து, அவசரம் இல்லாமல் வெளியே விட்டுக்கொண்டே அமைதியாக நடக்க பழக வேண்டும். நமது முழு கவனமும் உள்ளே/வெளியே இழுக்கும் மூச்சில் மட்டுமே இருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவதற்கும் நம்மை புத்தாக்கம் செய்துகொள்வதற்கும்தான் இந்த நடை தியானம். அதனால், முடிந்தவரைத் யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக, அன்றாடப் பிரச்னைகள் எதையும் நினைக்கக் கூடாது.

இதை ஒரு சக்தி சேகரிப்பு நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களாவது உங்களுக்கான ஏகாந்த தனிமையில், இயற்கை எழில் நிரம்பிய சூழலில் நடந்து பழகுங்கள். கம்பீரமாக நிற்கும் மலைகளைப் பாருங்கள். பூத்துக்குலுங்கும் மலர்களைப் பாருங்கள். ‘கிரீச்... கிரீச்...’ எனும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலிக்கவிதைகளைக் கேளுங்கள்.

எத்தனைத் தலைமுறைகளை கடந்து வந்து என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று சொல்லாமல் சொல்லும் மலைகளின் கம்பீரத்துக்கு முன்பு நாம் எம்மாத்திரம்?.சற்றே அண்ணாந்து அகண்டிருக்கும் நீல வானத்தைப் பாருங்கள். கடந்த ஒரு மாதத்தில் வானத்தை நோக்கி நிதானமாகப் எத்தனை முறை பார்த்திருப்பீர்கள் என்பதையும் யோசியுங்கள்.

நாம் என்னும் அகங்காரம் நம்மை விட்டு அகலும் அற்புதமான தருணங்களை அந்த காலை நேர நடையில் நீங்கள் உணர்வீர்கள். இதை எல்லாம் விடுத்து, கிளம்பும்போதே ஒரு தோழர்கள் படையுடன், அரசியலில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட் வரை உலகின் எல்லா பிரச்னைகளையும் பேசிக்கொண்டு நடப்பது நல்லதில்லை. அந்த நேரத்திலும் சும்மா இருக்காமல் காதில் வயர்போனை சொருகிக்கொண்டு ‘காச்மூச்?’ என்கிற சப்தங்களை கேட்டு மீண்டும் மனதை டென்ஷனிலேயே வைத்திருக்க வேண்டாம்.

மருத்துவரும் தத்துவ அறிஞருமான ஹிப்போக்ரடீஸ்  சொல்கிறார், ‘நடப்பது என்பது சிறந்த மருந்து.’ கம்ப்யூட்டர் ஜாம்பவானும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவருமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு சுவாரஸ்யமான பழக்கம் உண்டு. முக்கிய கூட்டங்களில் பேசும் முன் அல்லது முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தானும் நடப்பார்; தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு நடந்த வண்ணமே விவாதமும் செய்வார்.

பல படைப்பாளிகளை கேட்டால் அவர்களுக்கு சிறந்த ஐடியாக்கள் பிறந்த நேரம் நடைபயிற்சியின்போது என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்
போனால் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்கள் பலரும் நடைபயிற்சி செல்வதை தினசரி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்துக்கொண்டிருந்தார்.

நகரத்துக்கு வெளியே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சொந்தமாக பள்ளி ஒன்றை அங்கே அவர் நடத்தி வந்தார். ஏராளமான புத்தகங்களை அங்கு வைத்திருந்ததுடன், தன்னைச் சுற்றிலும் ஏராளமான சிஷ்யப் பிள்ளைகளையும் அவர் வைத்திருந்தார். அதில் கல்வி
பயிலும் முறை எப்படித் தெரியுமா? நடந்துகொண்டேதான். நடந்துகொண்டே தத்துவம் கற்பிப்பார். நடந்துகொண்டே மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை தீர்ப்பார். இதனை ஆங்கிலத்தில் Peripatetic என்பார்கள்.

எதையும் சிந்திக்காமல் அந்த நேரத்தில், அந்தப் பொழுதில் நம்மை நாம் பரிபூரணமாக ஆட்படுத்திக்கொள்வதைத் தான் ‘Mind fullness’ என்கிறது உளவியல். இப்படி நடைபயிற்சியில் மட்டும் அல்ல... ஒவ்வொரு செயலிலும் மனப்பூர்வமான முழு ஈடுபாட்டை செலுத்தும்போது மனநோய்கள் நம் அருகில் நெருங்க முடியாது. மன அழுத்தம் என்கிற சொல்லுக்கே உங்கள் அகராதியில் இடம் இருக்காது.

நன்றி குங்குமம் டாக்டர் 

Jun 9, 2016

இந்த வாரம் இவர்

“மதுரைனாலே அழகுதான்!”

துரை என்றவுடன் செம்மண் புழுதியும், காய்ந்த பனைமரமும், ‘டாட்டா’ சுமோவில் ஸ்டாண்டிங்கில் நின்றுகொண்டு ‘ஏய்...ஏய்...’ என அரிவாளை சுற்றியபடி கத்திக்கொண்டே போகும் மீசைக்காரர்கள்தான் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு நினைவில் வரும். ஆனால், உண்மையில் சூப்பர் சிங்கர் அனந்த் சார் அணியும் சுடிதார் போல அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கும் மதுரை. அதை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தன் கேமரா மூலம் புகைப்படங்களாக வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கிறார் புகைப்படக் கலைஞர் குணா அமுதன். அவரை போனில் பிடித்துப் பேசினால்...
‘‘நான் குணா அமுதன். வயசு 47. திருமங்கலத்தில் 20 வருடங்களா பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழிற்சாலை வெச்சு நடத்திட்டு இருக்கேன். 2008-ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுச்சு. அப்போ, நான் பார்த்துட்டு இருந்த தொழிலுக்கு மாற்றாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சு, நான் கையில் எடுத்ததுதான் இந்த கேமரா’’ என மதுரைக்காரர்களுக்கே உரிய அசால்டான டோனில் ஆரம்பித்தார் குணா.

‘‘ஏன் போட்டோகிராஃபி தேர்ந்தெடுத்தீங்க?’’
‘‘மற்றவர்களைச் சார்ந்து இருக்காத, அதிக முதலீடு தேவைப்படாத, திறமையையும், திறனையும் வளர்க்கக்கூடிய வேலையா இருக்கணும்னு உறுதியா இருந்தேன். அப்போ மனசுல வந்ததுதான் போட்டோகிராஃபி. சென்னையில் மூன்று மாதங்கள் போட்டோகிராஃபியில் உள்ள அடிப்படை விஷயங்களைப் படிச்சேன். ஆரம்பத்தில், ஒரு ஸ்டுடியோ ஆரம்பிச்சு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து சம்பாதிக்கலாம்ங்கிறது என் ஐடியாவா இருந்துச்சு. ஆனால், அந்தப் பயிற்சியில் வெறும் ஒரு ஆளை நிற்கவெச்சு அவன் முகத்தில் ஃப்ளாஷ் அடிக்கிறது மட்டும் போட்டோகிராஃபி இல்லைனு புரிஞ்சுது. அப்படியே ‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி’யில் இறங்கிட்டேன்.’’

‘‘வீட்ல என்ன சொன்னாங்க?’’
‘‘ஆரம்பத்தில், நடுரோட்டில் குப்பைத்தொட்டி பக்கத்துல நாம படுத்து உருண்டு, புரண்டு போட்டோ எடுப்பதைப் பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணாங்க. இப்போ ஃபேஸ்புக், மீடியா, சினிமானு ஓரளவு ஃபேமஸ் ஆகிட்டதால் வீட்ல சந்தோசப்பட ஆரம்பிச்சுட்டாங்க.’’

‘‘சினிமாவில் வாய்ப்பு கிடைச்சது எப்படி?’’
‘‘இயக்குநர் பொன்ராமின் உதவி இயக்குநர் அருண் கே.சந்திரன் மூலமாகத்தான் ‘ரஜினி முருகன்’ பட வாய்ப்பு கிடைச்சது. மதுரைனாலே வெட்டு, குத்து, அருவா, ரத்தம்னு எல்லாம் சிகப்பு கலர்லேயே படம் எடுத்துட்டு இருக்காங்க. நாம கொஞ்சம் கலர்ஃபுல்லா எடுக்கலாம்னுதான் ‘ரஜினி முருகன்’ படம் எடுக்க ஆரம்பிச்சாங்களாம். இதைத்தான் நாங்க சொல்ல வர்றோம்னு காட்ட படத்தின் டைட்டில் கார்டிலேயே கலர்ஃபுல்லான மூடில் இருக்கும் மதுரையின் புகைப்படங்களை வைக்கலாம்னு யோசிச்சுருக்காங்க. அந்த நேரம் சரியாக என்னுடைய புகைப்படங்களை அருண் கே.சந்திரன் பார்க்க, பின்னர் எல்லோருக்கும் பிடித்துப்போக நான் எடுத்த புகைப்படங்கள்தான் அந்த ‘ரஜினிமுருகன்’ டைட்டில் கார்டை அலங்கரிச்சுச்சு.’’

‘‘ஜல்லிக்கட்டு விளையாட்டை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துருக்கீங்கிற வகையில், ஜல்லிக்கட்டிற்கு தடை என்ற செய்தியைக் கேட்டதும் உங்களுக்கு எப்படி இருந்தது?’’
‘‘உண்மையைச் சொல்லணும்னா, கண்ணீர்விட்டு அழுதுட்டேன். ஜல்லிக்கட்டு விளையாட்டை போட்டோ எடுக்கும்போதே எனக்கும் மாடுகள், மாடு வளர்ப்பவர் இடையிலும் விவரிக்க முடியாத ஒரு நட்பு ஏற்பட்டுச்சு. தடைக்குப் பிறகு நாட்டுமாடுகள் அடிமாடாய்ப் போவதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.’’

‘‘உங்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம்னா எதைச் சொல்வீங்க?’’
‘‘குற்றாலத்தில் ‘குற்றால சாரல் திருவிழா’னு நான் எடுத்த போட்டோக்களை கண்காட்சிக்கு வைத்தேன். அந்தக் கண்காட்சிக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. அப்புறமா, டைம்ஸ் போட்டோ ஜார்னலில் நான் எடுத்த போட்டோ அட்டைப்படமா வந்திருக்கு.’’

‘‘மதுரையில் உங்களுக்குப் பிடித்த இடம்?’’
‘‘திருமலைநாயக்கர் மஹால்தான். மஹாலுக்கு நடுவில் வெளிச்ச விழுந்து அப்படியே தெறிக்கும். அங்கே சும்மா ஒரு போட்டோ எடுத்தாலே அப்படி ஒரு ஃபீல் கிடைக்கும்.’’

‘‘உங்களின் கனவு, ஆசை?’’

‘‘அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது!’’
-ப.சூரியராஜ்,  படம் : ந.ராஜமுருகன்

Feb 9, 2016

50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 450 கோடி கடன்: அம்மா அரசு சாதனை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்

வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் சிறுவணிகர்களுக்கு இதுவரை ரூ.68.29 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.
கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 13,521 டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவினால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் குறிப்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், கூட்டுறவுச் சங்கங்கள் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியப் பொருள்களை காலத்தே வழங்கும் தலையாய பணியை செவ்வனே மேற்கொண்டு வரும் கூட்டுறவுத்துறையினை மேம்படுத்தும் வகையிலும், சிறப்பான சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் செயல்படுத்தப்பட்டு வரும் வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து சிறுவணிகர்களும் பயன்பெறும் வகையில் 13 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளின் இடத்திற்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கி, பரிசீலனை செய்து, கடனுதவிகள் வழங்கப்படும் வகையில் 7076 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 4,47,787 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர். இதுவரை 1,36,586 சிறுவணிகர்களுக்கு தலா ரூ.5000 வீதம் வட்டியில்லா கடனாக ரூ.68.29 கோடி சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடனுதவிகளை வழங்க வேண்டும்.
ரூ.22,450 கோடி விவசாய கடன்
முதலமைச்சரால் வேளாண் உற்பத்தியினை பெருக்கிடும் வகையில் 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வரலாறு காணாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு ரூ.5,500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9,41,145 விவசாயிகளுக்கு ரூ.5,103.63 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. முழு குறியீட்டினையும் உடனடியாக எய்திட வேண்டும்.
முதலமைச்சர் அம்மா, 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.154.62 கோடி நிதியுதவி வழங்கி, நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு புத்துயிரூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளார்கள். 43 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நகர சங்கங்களாக தரம் உயர்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 4,571 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் 5,118 கிளைகளில் உட்சுற்று தொலைக்காட்சி நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. 652 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.34.44 கோடியில் பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 176 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதி பணிகள் நடைபெற்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் கணினிமயத்துடன் நவீனமயமாக்கப்பட்டு, அனைத்து வாடிக்கையாளர்களின் சேவையையே குறிக்கோளாகக்கொண்டு செயலாற்றி வருவதால், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றதின் காரணமாக 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.26,247.43 கோடியிலிருந்து ரூ.49,184.63 கோடியாக உயர்ந்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் நவீயமாக்கப்படுவது மட்டுமன்றி, பணியாற்றும் பணியாளர்களின் நலன் கருதி கூட்டுறவு நியாய விலை கடைகளில் பணியாற்றும் 25,635 பணியாளர்களுக்கு ரூ.51.65 கோடி அளவுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் 38,023 பேர் இணைத்துள்ளனர். 342 பணியாளர்களின் மருத்துவ செலவினமாக ரூ.1.56 கோடி காப்பீடுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களும், வருவாய்த்துறை மற்றும் சமுக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளும் வகையில் 4,415 சங்கங்களில் பொதுச் சேவை மையங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் வாயிலாக இதுவரை 43,95,339 சான்றிதழ்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சங்கங்களுக்கு 17.19 கோடி நிகர வருமானம் கிடைக்கப்பெற்று உள்ளது.
ரூ.40 கோடி காய்கறி விற்பனை
வெளிச்சந்தையில் காய்கறி விலையினை கட்டுப்படுத்தும் வகையிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெறும் வகையிலும், இடைத்தரகரின்றி விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் வகையில் முதலமைச்சர் அம்மாவின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், சென்னை மாநகரில் 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை உட்பட 72 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகள் வாயிலாக இதுவரை 13,521 மெ.டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அம்மாவின் தொலைநோக்குத் திட்டமான, அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையிலான 106 அம்மா மருந்தகங்கள் மற்றும் 193 கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக இதுவரை ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்களில் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதால் மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.