Jan 9, 2013

புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 05

புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 05
சூன்யப் பிரதேசமாகக் காட்சி அளிக்கிறது முல்லைத் தீவு. அகோரங்கள் நடந்து முடிந்து அதற்கான ஆதாரங்களோடு உலகத்​திடம், 'நீதி கொடு’ என்று கெஞ்சிக் கிடக்கும் முள்ளிவாய்க்கால், இன்று வாழ்வாதரத்துக்கான போரில் தவிக்கிறது.
கொடூரப் போர் நடந்ததற்கான சாட்சியங்களை இன்றும் சாலையின் இருமருங்கிலும் தலை இழந்து நிற்கும் பனை மரங்கள் மூலமாகவும் குண்டுகளால் சிதைக்கப்பட்டுக் கிடக்கும் வீடுகள் மூலமாகவும் பார்க்க முடிகிறது.
ஏ 35 நெடுஞ்சாலையின் வழியில் முல்லைத் தீவுக்குப் பயணிக்கிறேன். எத்தனை பிணங்கள் கிடந்த வீதி, எவ்வளவு உயிர்கள் துடிதுடித்த பாதை என இரத்த நினைவுகள் மனத்திரையில் ஓடியது. அந்த இடத்தில் எவர் நடந்தாலும் அவர்கள் தங்களது சுயத்தையே சில நிமிடங்கள் இழக்க வேண்டி இருக்கும்.
வந்தடைந்தது முல்லைத்தீவு பேருந்து நிலையம். அங்குதான் சாலை ஓரத்தில் நான்கு பேருந்துகள் நின்றுகொண்டு இருந்தன.
'சேற்றில் உள்ள அந்தச் சாலை ஓரம்தான் பேருந்து நிலையம்’ என்றார் உடன் வந்திருந்த நண்பர். அவர் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்.
கருநாட்டுக் கேணி என்ற பகுதிக்குச் செல்லத் தீர்மானித்து இருந்தோம். அங்கு செல்வதற்கான பேருந்து இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதான் வரும் என்றனர்.
செம்மலை, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் என அந்த வழியே உள்ள கிராமங்களுக்குச் செல்ல பொதுமக்களும் நிறையவே காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் அந்த வட்டாரத்தில் உள்ள பகுதிகளைச் சுற்றி வந்தோம்.
ஓர் கடையில் பாதுகாப்புப் படை எச்சரிக்கைப் பிரதி ஒன்று இருந்தது.
அதில், 'ஆயுதம் வைத்திருப்பது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. ஒருவேளை உங்களிடம் ஆயுதம் உள்ளது என்று அறியப்பட்டால், பிணையில் வராத தடுப்பில் நீங்கள் வைக்கப்படுவீர்கள். அதனால் உங்கள் குடும்பம், குழந்தைகள் வாழ வழியின்றித் தவிக்கும் நிலை ஏற்படும். ஆயுதம் வைத்திருப்பவர்களைக் காட்டிக் கொடுத்தால் பரிசு தரப்படும்’ என்று எழுதப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஆயுதங்களுக்குமான பரிசுத் தொகையும் வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
அதில், கைக்குண்டுக்கு 2,000 ரூபாய், கைத்துப்பாக்கி, கிளோமோர் ரகக் கண்ணிவெடி, கவச எதிர்ப்புக் கண்ணிவெடிக்கு 5,000.... ரி56 ரகத் துப்பாக்கி, ஆர்.பி.ஜி. உந்துகணை செலுத்திக்கு 10 ஆயிரம்... கனரகத் துப்பாக்கிக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு... என்று பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
புலிகள் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை வைத்​திருந்த இடம் அது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் குறைந்த அளவே இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. மீதி எங்கே போயின என்பதே தெரியவில்லை. எனவே, பொதுமக்கள் மூலமாக அதைக் கண்டுபிடிக்கும் விதமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
அரசு, இராணுவக் கட்டடங்களைத் தவிர, மற்றவை எல்லாம் அழுக்காகவும், பாழடைந்தும் கிடந்தன. கழிவறைகள் எங்கும் இல்லை. மருத்துவ வசதி மோசமான நிலைமையில் இருந்தது. பள்ளிகள் இடிந்து கிடக்கின்றன. அவை இருந்ததற்கான சுவடு மட்டுமே இருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் அறிவிப்புகளில் மட்டுமே அனைத்து இடங்களிலும் உள்ளன.
மிதிவண்டி, பைக், டிராக்டர் என்று எல்லா வாகனங்களிலும் எல்லாவிதமாகவும் இராணு​வம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பேருந்துக்கு நேரமாகவே, கிளம்பினோம்.
நாயாற்றுப் பாலத்தை கடந்தது பேருந்து. அங்கு இருந்து பார்க்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கண்ணுக்குத் தட்டுப்பட்டது. 'அது புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்’ என்றார் நண்பர். ''அந்தக் கடலோரப் பகுதி இப்போது உயர் பாதுகாப்பு வளையமாக உள்ளது. இந்த நாயாற்றுப் பாலம்தான் முன்பு புலிகள் எல்லைப் பகுதியாக விளங்கியது.
இந்த வழியில் தனியார் வேன்களில் செல்வது ஆபத்து. ஏனெனில், நாம் இப்போது செல்வது சுற்றுலாப் பகுதி அல்ல. 27 ஆண்டுகளாக இராணுவத்தின் கையில் உள்ள பகுதி. 'கெமுனு வாட்ச்’, 'சிறப்புப் படைப் பிரிவு’ என ஆறு இராணுவ முகாம்கள் இந்த வழியே உள்ளது'' என்றார் அவர்.
புதர்கள் மண்டிய பகுதிகளின் உள்ளே முள்வேலிக் கம்பிகளோடு முகாம்கள் தெரிந்தன. 'அதுதான் மணலாற்றுக் காடு’ என்றார் நண்பர்.
பிரபாகரன் முதன் முதலில் கால் ஊன்றிய காடு இது. 1986-ம் ஆண்டில் பிரபாகரனுக்கும் இந்தியப் படைக்கும் கடுமையான சண்டை நடந்தது இந்தக் காட்டில்தான்.
கொக்குத்தொடுவாய் தொடங்கி குண்டும்குழியுமான மண் சாலைகள், ஜல்லி கொட்டப்பட்ட சாலைகள் என்று போக்கு​வரத்துக்கே சிரமமான சாலைகளாக இருந்தன. மழைக் காலங்களில் இந்த ஊருக்கும் முல்லைத்தீவுக்குமான சாலை இணைப்பு தண்ணீரால் துண்டிக்கப்பட்டு விடுமாம்.
சுந்தரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பயண வழியில் தற்செயலாகச் சந்தித்தேன். ''துரோகி இல்லாத காலமே கிடையாது. சனத்துல நூத்துக்கு அம்பது சதம் உயிருங்க துரோகத்தால போனதுதான்.
சிங்களவன்கூட ஒரு நாளும் கதைச்சு வெல்ல இயலாதய்யா. அவன் எல்லாமே தெரிஞ்சுதான் கொல்றான். இந்த நாட்டுல காட்டிக்கொடுத்தா நல்லா வாழலாம்'' என்றவர், தன் அருகில் இருந்த பெண்ணைக் காட்டினார்.

''அவக புருசன், மகன் ரெண்டு பேரையுமே யுத்தத்துல பறிகொடுத்துட்டாங்க. இப்ப அவளுக்கு இந்தியா வீடு கிஃப்ட் தந்திருக்கு. இவ புருசனையும் மகனையும் கொன்னதுக்கு கிஃப்ட்டா? எனக்கு இந்திய அமைதிப் படை கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?'' என்று முகத்தில் உள்ள வெட்டையும் உடைந்த காலையும் காட்டினார்.
''இந்தியன் ஆமி ஊர் ஊரா புகுந்து எங்க கிராமங்களை அழிச்​சதய்யா. அவர்களுக்கு என்ன பாவம் செய்தது எங்கட சனம்? இந்தியன் ஆமியில் குர்காஸ் மாறி முக அமைப்புல இருந்தவங்க சுட மாட்டாங்க. துவக்கத் (துப்பாக்கி) திருப்பி முகத்துலே இடிப்பாங்க. அதில் வெட்டுப்பட்டு வலி உயிர் போகும். அப்படித் துவக்குல அடிச்சுதான் என் கால் உடைஞ்சது.
அதுக்கப்பறம் தமிழ்நாட்டு முகாமில் அகதி வாழ்வு வாழ்ந்தேன். எங்கட வாழ்வு இத்தன நாள் ஆயுத யுத்தத்துல இருந்துச்சி. இப்போ அமைதி யுத்தம் நடக்குது. உரிமையைக் கொடுக்காம புலி பேரச் சொல்லியே எங்கள ஒடுக்குது ஆமி.
ஒண்ணு சொல்றனய்யா... நான் புலி இல்ல... ஆனா, பிரபாகரன் இருக்காரோ இல்லையோ... அவர் இல்லைனாலும் எங்கட இனத்துல இருந்து ஒருத்தன் எழுவான். எங்களுக்குத் தேவையான நிம்மதியை அவன் கொடுப்பான்’ என்று கொந்தளித்தார்.
கருநாட்டுக்​கேணி நெருங்கியது. விடைபெறும்போது கையை பிடித்தவர், ''இங்க சுயமரியாதையோட பேசுனாவே அவனுக்கு புலிப் பட்டம்தான் தம்பி. கொடுக்காத நிவாரணப் பொருளக்கூட நாங்க கேட்டு வாங்க முடியல. ஊமப் பொம்மயாதான் இங்க வாழறம். உசுரு மட்டும் இருக்கு. போய் வாருங்கள் தம்பி'' என்று கையை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றார். சொன்னது அனைத்தும் கனத்தது.
காடுபோல கிடந்த இடத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய கொட்டாய்கள். தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்கியதற்கான அறிவிப்புப் பலகைகள். ஆனால், அதில் போடப்பட்டு இருந்த தொகைக்கும் அங்குள்ள வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை.
27 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி அது. அப்படி குடியேற்றப்பட்ட லிங்கம் என்பவரைச் சந்தித்தேன். ''நான் இந்த ஊர விட்டுப் போகையில எனக்கு 15 வயசு. 42 வயசுல மீண்டும் எங்கட மண்ணுக்குத் திரும்பி இருக்கேன். விவசாயம் எல்லாம் அழிஞ்சிருச்சி. வீடுனா அது பனங் கொட்டாய்தான். ராவுல தூங்க முடியாது. அந்த அளவுக்கு பாம்பு மேயுது. பாம்பு கடிச்சாக்கூட மருத்துவம் பாக்க வழியில்ல.
எங்க காணியோட உரிமப் பத்திரம் எதும் இல்ல. அரசாங்கத்திட்ட கேட்டா, பதில் இல்ல. எங்கட நில உரிமப் பத்திரத்த எல்லாம் அரசு அழிச்சிருச்சி. முல்லைத்தீவு மாவட்டத்தோட இருந்த எங்க பகுதியப் பிரிச்சு 'வெலியோயா’னு ஒரு மாவட்டத்தை உருவாக்கினாங்க. நிலப் பத்திரங்களை எல்லாம் எடுத்து அழிச்சிட்டு உருவாக்கின மாவட்டத்தை அப்படியே மறுபடியும் முல்லைத்தீவோட சேத்துட்டாங்க. எங்க காணிக்கான உரிமம் எதும் இப்ப எங்ககிட்ட இல்ல. எங்க வயத்துக்கே தினம் அல்லாடறம்'' என்று வெதும்பினார்.
இவரைப்போலவே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ''முல்லைத்தீவு- திரிகோணமலை சாலையை இணைக்கும் பாலத்தை முகத்துவாரத்தில் இந்தியா கட்டுது. ஆனால் வயிற்றுக்கு இல்லாமல் காயற எங்களை எந்த நாடு கண்டுக்குது?'' என்று நொந்தார் இன்னொருவர்.
அப்போது மணி மதியம் இரண்டு. இங்கு சாப்பாட்டுக் கடை எதுவும் இல்லை. 'ஒரு கி.மீ. நடந்து சென்றால் ஒரு டீ தண்ணிக் கடை இருக்கிறது’ என்று சொன்னார்கள். நடக்க ஆரம்பித்தோம். வெயில் கொளுத்தியது. வெட்டவெளியாய் பார்க்கும் தூரத்தில் கடலும் குளங்களும் இருந்தன. மின்சார வசதி எங்குமே இல்லை. டீக்கடை வர, 'டீத்தூள் தீந்துடுச்சு’ என்று ஒரு சிறுவன் சொன்னான். காய்ந்துபோன பன் மட்டும் இருந்தது. அந்த வட்டாரத்து மக்களுக்கு இருக்கும் ஒரே கடை இதுதான்.
'இனி முல்லைத் தீவுக்கு பேருந்து இல்ல’ என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் ஒரு டிராக்டர் வந்தது. அதில் ஏறிக்கொண்டோம். 'இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக கொடுத்த டிராக்டர் இது’ என்றார்கள். அதில் ஏற்கெனவே ஒருவர் உட்கார்ந்து இருந்தார். தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அவர் பேசினார். தன்னுடைய ஊர் கொக்கிளாய் என்று அவர் சொன்னார்.

''1984ம் வருஷத்துல நாங்க இடம்பெயர்ந்து போனோம். அதன்பிறகு, சிங்களக் குடும்பங்கள் சில வந்து எங்க இடத்துல குடியேறியது. 10 வருஷம் இருந்தா ஒருவருக்கு அந்த இடம் சொந்தம் என்ற விதிப்படி 'இப்ப உங்க நிலம் அவங்களுக்கு சொந்தம்’னு சொல்றாங்க.
எங்க மீன் வளம் தொடங்கி எல்லா வளங்களையும் சிங்களர்கள் எடுத்து அனுபவிக்கிறாங்க. இந்த வளங்களோட ஒட்டுமொத்த லாபமும் சிங்கள முதலாளிகளுக்குத்தான் போய்ச் சேருது.
இன்னைக்கு 300 சிங்களக் குடும்பம் கொக்கிளாய்ல இருக்கு. அங்க ஆய்வுக்கு வந்த அரசு அதிகாரிகளும் எங்க நிலத்தை அவங்களுக்குத் தர்றதா உறுதியளிச்சிட்டுப் போறாங்க.
எங்க நிலத்தை விட்டுப்போட்டு நாங்க கூலி வேலைக்குப் போறம். சிங்களப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் கான்கிரீட் கட்டடம். ஆனா, எங்க பிள்ளைங்க படிக்கக் கூர கொட்டாய். இதுதான் இப்போதைய நிலைமை. இந்தக் கூரையாவது கிடைச்சதேனு நிம்மதிப்பட்டுக் கிடக்கோம்'' என்றார்.கொக்கிளாயில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் நிலைமை இதுதான்!முல்லைத்தீவை வந்தடையும்போது, மாலை 6 மணி ஆகிவிட்டது. இன்னும் கொஞ்சம் தாமதித்தால், அதன் பிறகு பேருந்து சேவை கிடையாது என்றனர். அங்கே தங்கும் வசதியும் கிடையாது. உடனடியாக கிளிநொச்சி கிளம்பினோம்.
ஊடறுத்துப் பாயும்.....
ஜூனியர் விகடன்

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

எங்கள் தமிழர்களின் நிலையை நினைத்து பார்த்தாலே சிறு பிள்ளைகளுக்கு கூட இரக்கம் வரும்......ஏன் உங்களுக்கு மட்டும்.................???

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)