Dec 5, 2011

50 லட்சம் கோடி ரூபாய்: இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு

இந்தியர்களால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் மக்கள் நகைகளாகவும், தங்கக்காசுகளாகவும் சேர்த்துவைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி தெரிவிக்கிறது.இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.


ஒரு அலங்காரப் பொருள் என்ற அளவில் மட்டுமல்லாது , இப்போது பாதுகாப்பான சேமிப்புக் கருவி என்ற அளவிலும் தங்கத்தின் பயன்பாடு வளர்ந்துள்ளது.
ஆனால் இந்தியர்கள் சொந்த நிதி நெருக்கடி வரும்போது கூட தங்கத்தை விற்கத் தயங்குவதால், அவர்களிடம் முடங்கிக்கிடக்கும் இந்த தங்கத்தை “இருப்பது போல கருதப்படும் செல்வம்” என்றே இந்த அறிக்கை வர்ணிக்கிறது.மேலும் இந்தியர்களின் தங்க மோகம் , தங்கத்தின் விலை உயரும்போது கூட குறையாது இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறையவும் அது வழிவகுக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் 2008 முதல் 2011 வரையிலான 130 அடிப்படைப்புள்ளி அதிகரிப்ப்பில், தங்க இறக்குமதியால் மட்டுமே 40 அடிப்படைப்புள்ளிகள் கிடைத்தன என்று மக்குவேரியின் அறிக்கை சொல்கிறது.
நிபுணர் அலசல்
தங்கத்தை ஒரு சேமிப்புக் கருவியாகப் பயன்படுத்துவது என்பது, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பாரம்பரியம் மிக்க நாடுகளில் காலங்காலமாகவே நடந்துவந்திருக்கிறது என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் முனைவர் நீலகண்டன் கூறுகிறார்.


இந்தியா இதுபோல தங்கத்தை சேமிப்பதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது என்று கூறும் இவர், ஆனால் தங்கத்தில் மக்கள் தங்களது உபரி வருமானத்தை முதலீடு செய்வது என்பது , பொருளாதார வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்ற கூற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது என்கிறார்.

தங்கத்தில் மக்களின் பணம் முடங்காமல் போனால், அது பொருளாதாரத்தில் புழங்கி பொருளாதர வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பொருளாதாரத்தில் பணம் புழங்குவதை தங்கச்சேமிப்பு குறைக்கிறது என்கிறார் அவர்.

ஆனால் அரசாங்கம் மக்களின் இந்த தங்க மோகத்தைக் குறைக்க சட்ட ரீதியான தலையீடுகளைச் செய்வது பலனளிக்காது, மக்கள் மத்தியில் அதுபோன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவு இருக்காது என நீலகண்டன் தெரிவித்தார்.

No comments: