Jun 25, 2014

உணவு யுத்தம்! - 10

 பாப்கார்னும் பாதிப்புகளும்!

பாப்கார்னும் பாதிப்புகளும்!
 ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே பெரு நாட்டு மக்கள் சோள ரகத்தைச் சாப்பிட்டு வந்திருக்கின்றனர். மத்திய மெக்ஸிகோவில் உள்ள 'பெத்கேரே’ என்ற இடத்தில் இருந்து 5,600 வருடங்களுக்கு முன் உபயோகிக்கப்பட்ட சோளம் கிடைத்திருக்கிறது. 16 அல்லது 17-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியர் மூலமே இந்தச் சோளம் அமெரிக்காவுக்கு அறிமுகமானது. இன்று அதிகம் மக்காச்சோளம் விளையும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
ஆரம்ப காலங்களில் ஆடு மாடுகளுக்கான பிரதான உணவாகக் கருதப்பட்ட மக்காச்சோளம், இன்று உலகின் முக்கிய தானியங்களில் ஒன்றாக, பெரிய சந்தையை உருவாக்கியிருக்கிறது. கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச்சோளம் இன்றும் அதிகமாகப் பயன்படுத்தபடுகிறது.
பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. காரணம், அதில் நார்ச்சத்துகள் அதிகம். குறைவான கலோரி உள்ள ஆரோக்கிய உணவு. அத்துடன், வைட்டமின்களும் மினரல்களும் இணைந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு பாக்கெட் வெண்ணெய் தடவி பொரித்த சோளப்பொரியில் 1,261 கலோரி உள்ளது. இதில் 79 கிராம் கொழுப்பும் 1,300 மில்லி கிராம் சோடியம் உப்பும் உள்ளன.
ஆனால், அதை உப்பும் வெண்ணெய்யும் மசாலாவும் சேர்த்து மெஷினில் பொரித்து ரசாயன சுவையூட்டிகளைச் சேர்த்து சாப்பிடும்போது, அது கெடுதலான உணவாக மாறிவிடுகிறது. குறிப்பாக, சுவையூட்டுவதற்காக அதில் சேர்க்கப்படும் டை-அசிட்டால் தான் பாப்கார்னின் மணத்துக்கு முக்கிய காரணம். இந்த மணம் நுரையீரல் ஒவ்வாமையை உண்டுபண்ணக் கூடியது. தொடர்ந்து பாப்கார்ன் சாப்பிடுகிறவர்களுக்கு, நுரையீரல் நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள மல்டிப்ளெக்ஸ் ஒன்றில் பாப்கார்ன் விற்பனையகம் வைத்திருக்கும் ராஜ்பன் என்பவர், தனது வருமானம் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவரின் வருமானத்தைவிட இரு மடங்கு அதிகம் என்கிறார்.
'ஒரு நாளைக்குச் சராசரியாக 1,500 பேர் சினிமா பார்க்க வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதில் 1,400 பேர் பாப்கார்ன் மற்றும குளிர்பானங்கள் வாங்குகின்றனர். ஒரு காம்போ பேக்கின் விலை 250 ரூபாய் என்றால், எங்கள் ஒருநாள் வருமானம் 3.5 லட்சம். எல்லா செலவுகளும் போக ஆண்டுக்கு எப்படியும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்’ என்கிறார்.
இந்திய சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் விநியோகத்தில் 90 சதவிகிதம் அமெரிக்க கம்பெனிகளுடையது. இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் இந்திய நிறுவனங்கள் துணையுடன் ஆயிரம் கோடிக்கும் மேல் விற்பனை செய்கின்றன.
பாப்கார்ன் சந்தையின் அபரிமித வளர்ச்சியின் காரணமாக 2015-ல் 2,034 கோடி ரூபாய்க்கு பாப்கார்ன் விற்பனையாகும் எனக் கணக்கிட்டிருக்கின்றனர்.
ரூபாய் 120-க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட் பாப்கார்ன் தயாரிக்க ஆகும் செலவு, ஒரு ரூபாய் 80 காசு. விற்பனையாளர் கமிஷன், போக்குவரத்து, விளம்பரம், இத்யாதி என அத்தனையும் சேர்த்துக்கொண்டாலும் ரூ.10-க்குள்தான் வரும் என்றால், ஒரு பாக்கெட் விற்பனையில் ரூ.110 லாபம். இவ்வளவு கொள்ளை லாபம் வேறு எந்தத் தொழிலிலும் கிடையாது.
அதே நேரம், மக்காச்சோளம் விவசாயம் செய்யும் விவசாயிக்கு ஒரு கிலோவுக்குக் கிடைக்கும் விலை ரூ.20 மட்டுமே. அதுவும், அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி ஆவதால், உள்ளூர் சந்தையில் விலை சரிந்துவிடுகிறது.
நாம் சாப்பிடும் பாப்கார்னால் உண்மையான லாபம் யாருக்கு என்றால், அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான். ஆகவே, அவர்கள் பாப்கார்ன் சந்தையைப் பெரிதுபடுத்த எல்லாவிதமான விளம்பர உத்திகளையும் பயன்படுத்துகின்றனர்.
வீடுகளிலும் சாலையோரங்களிலும் மட்டுமே தயாரிக்கப்பட்டு சாப்பிடப்பட்டு வந்த சோளப்பொரி பரவலானது, பாப்கார்ன் இயந்திரத்தின் வருகையால்தான். 1892-ம் ஆண்டு, சார்லஸ் கிரேடர் என்ற அமெரிக்கர், பாப்கார்னைத் தயாரிக்க நீராவியால் இயங்கும் இயந்திரத்தைக் கொண்ட தள்ளுவண்டியை வடிவமைத்தார். அதன் தொடர்ச்சியாக, பாப்கார்ன் இயந்திரங்களை விற்க ஆரம்பித்தார். இன்று வரை இவரது குடும்பத்தினரே அதிக அளவில் பாப்கார்ன் மெஷினை விற்றுவருகின்றனர்.
சீனாவில், நாம் அரிசியைப் பொரிப்பதுபோல மூடிவைத்த பாத்திரத்துக்குள் சோளத்தைப் போட்டு பொரிக்கும் முறையிருக்கிறது. சீனர்களும் பாப்கார்னை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
ஜப்பானில் 15-க்கும் மேற்பட்ட ருசிகளில் பாப்கார்ன் விற்கப்படுகிறது. ஆனால், வீதியில் நடந்துகொண்டே பாப்கார்ன் சாப்பிடுவதை ஜப்பானியர்கள் விரும்புவது இல்லை. தீம்பார்க் போன்றவற்றினுள் செல்லும்போது கழுத்தில் தொங்குமாறு அமைக்கப்பட்ட பாப்கார்ன் டின்களை வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். பசிக்கும்போதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.
1914-ல்தான் பிராண்டெட் பாப்கார்ன்கள் அறிமுகமாகின. ஜாலி டைம் எனப்படும் பாப்கார்ன்தான் முதன்முறையாக விற்பனைக்கு வந்த பிராண்டெட் பாப்கார்ன். 1945-ல் மைக்ரோவேவ் மூலம் சோளத்தைப் பொரிக்கலாம் என்ற முறை உருவாக்கப்பட்ட பிறகு, இன்று வரை அதுவே பிரதானமாகக் கையாளப்பட்டு வருகிறது.
1940-களில் அமெரிக்காவில் பாப்கார்ன் சந்தை குறைய ஆரம்பித்தது. விற்பனையை அதிகரிக்க பாப்கார்ன் நிறுவனங்கள் குளிர்பான நிறுவனங்களுடன் கைகோத்துக்கொண்டு விளம்பரம் செய்யத் துவங்கின. அப்படித்தான் குளிர்பானமும் பாப்கார்னும் தியேட்டரில் இணைந்து விற்பனையாவது துவங்கியது. அன்று துவங்கிய சந்தை, இன்று விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது.
பாப்கார்ன் பெற்றுள்ள பெரிய வரவேற்பைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 19-ம் தேதியை தேசிய பாப்கார்ன் தினமாக அறிவித்துள்ளது அமெரிக்கப் பாப்கார்ன் போர்டு.
பாப்கார்ன் மட்டுமல்ல... தியேட்டரில் விற்பனையாகும் சமோசா, போண்டா போன்ற பெரும்பான்மை உணவு வகைகள் தரமற்றவையே. அவை எப்போது தயாரிக்கப்பட்டன என்பதற்கு எந்தக் குறிப்பும் கிடையாது. காலையில் செய்து மீதமான உணவுப்பொருட்களை, திரும்பத் திரும்பச் சூடுபடுத்தி விற்றுவருகிறார்கள் என்பதே பெரும்பாலும் நிஜம்.
தியேட்டரை ஒரு உணவு மேஜையாக மாற்றியதில் இருந்து மீள்வதற்கு என்னதான் தீர்வு? இடைவேளை இல்லாமல் சினிமா தொடர்வதே! அமெரிக்காவில் அப்படித்தான் சினிமா திரையிடப்படுகிறது. ஆனால், இடைவேளை இல்லாமல் நம்மால் சினிமா பார்க்க முடியாது. ஆங்கிலப் படங்களுக்குக்கூட நாமாக ஓர் இடத்தில் இடைவேளை விட்டுக்கொள்கிறோம்.
அமீர் கான் தயாரிப்பில் வெளியான ஹிந்தி படமான 'தோபி காட்’ படம் இடைவேளை இல்லாமல் திரையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்து அரங்கில் கூச்சலிட்டனர். சில அரங்குகளில் தாங்களே எழுந்து வெளியே சென்று பாப்கார்ன் வாங்கிச் சாப்பிடத் துவங்கிவிட்டனர். இந்தப் பிரச்னை காரணமாகவே இன்று வரை இரண்டு மணி நேரம் சினிமா எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. சினிமாவை அடுத்தகட்டம் நோக்கி வளரவிடாமல் தடுத்திருப்பதில் பாப்கார்ன் போன்ற இடைவேளை உணவுகளுக்கும் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது.
மக்காச்சோள உற்பத்தியில் உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெள்ளை சோளமும் சிவப்பு சோளமும் பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை சர்க்கரை நோயில் இருந்து உடலைக் காப்பாற்றக் கூடியவை.
அமெரிக்காவில் பாப்கார்ன் கலாசாரம் எப்படி பரவியது என்பது குறித்து ஆண்ட்ரூ ஸ்மித், 'பாப்டு கல்சர்’ என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் பாப்கார்ன் வரலாறும், சமகால உண்மைகளும் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றன.
இன்றுள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் 'கோல்டு க்ளாஸ் ஸீட்டிங்’ என்ற பெயரில் தலையணை, போர்வை, இலவச பாப்கார்ன் மற்றும் ஒயின்கள் வழங்கப்படும் ஆடம்பர திரையரங்குகள் இப்போது அறிமுகமாகி வருகின்றன.
என்ன வகையான படம் என்பதற்கு ஏற்றார்போல உணவு வகைகளை வழங்க இருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சினிமா அரங்குகளில் இதுபோன்ற உணவுடன் கூடிய படுக்கைகள் கொண்ட வசதி உருவாக்கப்பட்டுவிடும்.
முன்பு கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீஸ்களில் இரவு காட்சிக்கு வருபவர்கள் பசியோடு இருப்பார்களே என, அருகிலேயே ஒரு எளிய பரோட்டா கடையை வைத்திருப்பார்கள். தியேட்டரின் ஒரு வாசல் வழியாக ஹோட்டலுக்குள் போய்விடலாம். அதை நகரவாசிகள், 'இது எல்லாம் சினிமா தியேட்டரா?’ என்று கேலிசெய்தார்கள். இன்றைக்கு சிறிய நகரங்களில் படம் முடியும் வரை வாயை மெல்லும் பழக்கம் இன்னமும் வரவில்லை.
சினிமா தியேட்டர்கள், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் விற்கப்படும் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ், தண்ணீர் பாட்டில், உணவு வகைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க நுகர்வோர் அமைப்பு 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி (044-66334346) எண் கொடுத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் புகார்களைப் பதிவு செய்தல் அவசியம்.
ஜெர்மனியில் இப்போது பாப்கார்ன் கலாசாரத்துக்கு எதிராக, 'தியேட்டரில் பாப்கார்ன் விற்க மாட்டோம்’ என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர். குறிப்பாக, கினோ சினிமா என்ற அரங்கில் பாப்கார்ன் விற்கப்படுவது இல்லை என்ற அறிவிப்பு முகப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது.
வியாபார தந்திரங்களில் மயங்கி... சினிமா மயக்கத்தில் கிரங்கி... பாப்கார்ன் போன்ற விஷயங்களுக்கு அடிமை ஆவது உடல் ரீதியாக பெரிய உபாதையை உருவாக்கிவிடும் என்பதே பெரும்பாலானவர்கள் கருத்து!

No comments: