Jun 25, 2014

உணவு யுத்தம்!-12

p30

வாழைப்பழ யுத்தம்!
வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை

p32
அரசுகளையே, வாழைப்பழ குடியரசு என்று அழைக்கின்றனர். இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஓ.ஹென்றி. ஹோண்டுரஸ் நாட்டின் பொம்மை அரசைக் குறிக்க அவர் வாழைப்பழக் குடியரசு என்னும் பதத்தைப் பயன்படுத்தினார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வாழைப்பழம் பயன்படுத்துவதில் முக்கியமான தேசங்களாக இருந்தபோதும், அந்த நாடுகளில் வாழைப்பழம் விளைவது இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் வாழைப்பழத் தேவைக்காகத் தங்களின் காலனி நாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கின. குறிப்பாக பிரிட்டன் அரசானது ஜமைக்கா, டொமினிக்கா போன்ற நாடுகளிலும், ஃபிரான்ஸ் அரசானது ஐவரி கோஸ்ட், கேமரூன் நாடுகளிலும் வாழைப்பழ உற்பத்தியை கைவசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது.
இதற்காக, மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழைத் தோட்டங்களில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். வாழைப்பழத்தை உடனடியாகப் பெட்டிகளில் அடைத்து கப்பலில் ஏற்றுவதற்கு வசதியாக, அவை காயாகவே பறிக்கப்பட்டு ரசாயனம் மூலம் பழமாக்கப்பட்டன.
அப்போதுதான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாழைப்பழங்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அறிமுகமாகத் தொடங்கின. இப்போதுகூட அமெரிக்காவில் ஸ்டிக்கர் ஒட்டாத வாழைப்பழங்கள் விற்கப்படுவது இல்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியக் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் வாழைப்பழம்கூட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதே. இந்த ஸ்டிக்கர் வணிக நிறுவனத்தின் அடையாளச் சின்னம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈகுவடார், கொலம்பியா, குவாதமாலா, மெக்சிகோ, ஹோண்டுரஸ், பெரு, வெனிசுலா. பனாமா, பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழத்தை உபயோகிப்பதில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவும்.
இரண்டும் யார் வாழைப்பழச் சந்தையைக் கைப்பற்றுவது என்பதில் அடித்துக்கொண்டன. அதற்காக நடந்ததுதான் வாழைப்பழ யுத்தம். இதற்கு முக்கியக் காரணம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் விளையும் வாழைப்பழங்களுக்கு ஐரோப்பாவில் சுங்க வரி விதிக்கப்படுவதே.
ஆப்பிரிக்கா, கரீபியன் என தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது, அவற்றுக்குச் சுங்க வரி கிடையாது என விசேஷ சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள்.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் வாழைப்பழங்களின் விலை கூடியது. தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி, இறக்குமதி செய்யும் வாழைப்பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது தவறானது என போர்க்கொடி தூக்கியது அமெரிக்கா.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல அமெரிக்கா குமுறியதற்கு முக்கியக் காரணம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த வாழைத் தோட்டங்களையும் அவர்கள் கைபற்றியிருந்ததே.
இந்தப் பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த வாழைப்பழ யுத்தம், சமீபமாகப் பேசித் தீர்க்கப்பட்டு, எட்டு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் சுங்கவரி படிப்படியாகக் குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
p33
ஐரோப்பாவில் சுங்க வரியில்லாமல் வாழைப்பழம் விற்க முடியும் என்றதும் கரீபிய பகுதிகளில் உள்ள வாழைப்பழத் தோட்டங்களைக் கண்வைத்து பன்னாட்டு வணிகர்கள் குதித்தனர். 45 சதவிகித சந்தையைக் கைப்பற்றியது ஒரு அமெரிக்க நிறுவனம். ஜெர்மனியின் திறந்த சந்தையைப் பயன்படுத்தி நாட்டின் முக்கிய வாழைப்பழ விநியோக நிறுவனமாக அது வளர்ச்சி கண்டது.
ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் வாழைப்பழத்தை உண்கிறார்கள். ஆகவே, அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய கரீபியத் தீவுகளில் விளையும் மொத்த வாழைப்பழமும் ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக மாறியது.
இன்னொரு பக்கம்… அமெரிக்கா தனது வாழைப்பழத் தேவைக்கான லத்தீன் அமெரிக்க நாடுகளான ஈகுவடார், கொலம்பியா, நிகராகுவா போன்ற நாடுகளில் உள்ள வாழைத் தோட்டங்களைத் தனதாக்கிக்கொண்டு நேரடியாக வாழைப்பழங்களை அமெரிக்காவுக்குக் கப்பலில் இறக்குமதி செய்யத் தொடங்கின. இதற்காக யுனைடெட் ஃபுரூட் கம்பெனி என்ற ஒருங்கிணைந்த நிறுவனம் ஒன்றினை வணிகர்கள் உருவாக்கினர். இவர்கள் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் வாழைப்பழத்தை அமெரிக்காவுக்கு சப்ளை செய்கிறார்கள்.
வாழைப்பழச் சந்தையை யார் கையகப்படுத்துவது என்று பலத்த போட்டி உருவானது. ஒரு பக்கம்… பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்; மறுபக்கம்… அமெரிக்கா. இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வாழைப்பழ யுத்தம் தொடங்கியது.
அமெரிக்க  நிறுவனங்கள் கையில் லத்தீன் அமெரிக்க வாழைத் தோட்டங்கள் பெருமளவு வந்து சேர்ந்தன. இந்தத் தோட்டங்களைப் பரம்பரையாக நிர்வகித்துவந்த விவசாயிகள், கூலிகளாக மாற்றப்பட்டனர். அடிமைகளைப்போல நடத்தப்பட்டு, வாழைத் தோட்டத்தில் தினம் 14 மணி நேரம் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். குழந்தைகள் உழைப்பும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
இத்துடன் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அரசின் ஒத்துழைப்புடன் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கையளிப்பு செய்யப்பட்டது. வாழைப்பழங்களை உடனடியான கொண்டுசெல்வதற்கு என்றே புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
வாழைத் தோட்டங்களைப் பாதுகாப்பதற்கு என்று தனி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்தப் பாதுகாப்புப் படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. வாழைத் தோட்டங்களைச் சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டது.
வாழைத்தோட்ட தொழிலாளிகள் அமெரிக்காவின் வல்லாண்மையை எதிர்க்கிறார்கள் என்பதைக் காரணம் காட்டி, அவர்களைப் போராளிகள் எனச் சுட்டுத் தள்ளியது அமெரிக்கப் பாதுகாப்புப் படை.
இப்படி வாழைத் தோட்டத்தில்  நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கொல்லப்பட்ட 3,000 கொலம்பியர்களின் உண்மை சம்பவத்தைத்தான் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், தனது ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலில் விவரிக்கிறார்.
தங்களின் வாழைப்பழச் சந்தைக்கு உதவி செய்வதற்காக நாட்டின் அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகளுக்கு கோடி கோடியாக லஞ்சத்தை வாரி இறைத்தன அமெரிக்க நிறுவனங்கள். அத்துடன் நாட்டின் அதிபரைத் தங்களின் கையாளாக மாற்றிக்கொண்டு, மறைமுக அரசாங்கத்தை நடத்தின. எதிர்ப்பு துவங்கும்போது தாங்களே சிலரைப் போராளிகள் என உருவாக்கி கலவரத்தில் ஈடுபடச் செய்தன. கொலம்பியாவிலும் ஈகுவடாரிலும் குவதமாலாவிலும் இவர்கள் செய்த கொலைகள், அக்கிரமங்கள் அளவில்லாதவை.
p34
மத்திய கிழக்கு ஆசியாவை ஆக்கிரமிக்க எண்ணெய் வளத்தைக் காரணம் காட்டி எப்படி கையகப்படுத்த முயன்றதோ, அதுபோலவே வாழைப்பழத்தைக் காரணமாகக் காட்டி ஹோண்டுரஸ் மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியது. இந்த வாழைப்பழ யுத்தம் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் இபா.சிந்தன்.
அவரது, ‘மீண்டுவருமா வாழைப்பழ தேசம்?’ என்ற வரலாற்றுத் தொடரில் ஹோண்டுரஸில் எப்படி அமெரிக்கா வாழைப்பழத் தோட்டங்களைக் கைப்பற்றி அரசை வீழ்த்தியது என்ற வரலாறு தெளிவாகக் கூறப்படுகிறது.
ஹோண்டுரஸின் பெரும்பகுதி தோட்டங்களைக் கைப்பற்றிய அமெரிக்க நிறுவனங்கள், இதற்காக நாடு முழுவதும் ரயில் பாதைகள் அமைத்துத் தருவதாகவும், அதற்குப் பதிலாக விளைநிலம் தேவை என்றும் ஓர் ஒப்பந்தம் போட்டன. வியாபார முதலாளிகளுக்கு மட்டுமே பயன்பட்ட ரயில் பாதைகளைக் காட்டி, தாங்கள் ஹோண்டுரஸுக்குப் பெரிய உதவிசெய்து வருகிறோம் என்று அமெரிக்கா பெருமையடித்தது.
வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பூஞ்சை நோயின் காரணமாக ஏராளமான தோட்டங்கள் அழிய ஆரம்பித்தன. மக்கள் நோயுற்றனர். அவர்களை அப்படியே அம்போவென விட்டுவிட்டு, வேறு பகுதிகளுக்கு தோட்டம் அமைக்கச் சென்றுவிட்டன வாழைப்பழ நிறுவனங்கள். அப்படி செல்லும்போது, ரயில் பாதைகளையும் அவர்கள் பெயர்த்துக்கொண்டு போய்விட்டனர் என்பதுதான் கொடுமை.
இவ்வளவு ஏன்? வாழைப்பழச் சந்தையை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக நாட்டின் அரசை கலைத்து, தங்களுக்கு ஆதரவான முன்னாள் அதிபர் மேனுவேல் பொனிலாவுக்கு ஆதரவாக ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றினர்.
1975-ல், ஹோண்டுரஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈகுவடார், குவாத்தமாலா, நிகராகுவா, பனாமா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து ‘வாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்கின.
‘உற்பத்திசெய்யும் தங்களைவிட வாங்கி விற்கும் அமெரிக்கா 83 சதவிகித லாபம் அடிக்கிறது. ஆகவே, அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்களுக்கு அதிக வரி போட வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது. உடனடியாக வரிவிதிப்பு தொடங்கியது. அதாவது, ஒரு பெட்டிக்கு அரை டாலர் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த வாழைப்பழக் கொள்முதல் நிறுவனங்கள், ஆட்சியாளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து வரியைத் தள்ளுபடி செய்யவைத்தன.
பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் வாழைப்பழத்துக்காக, எங்கோ லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கரீபியத் தீவுகளிலும் ஏழை எளிய மக்கள் முதுகு ஒடிய உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தினக்கூலி நான்கு வாழைப்பழம் வாங்கக்கூட போதுமானது இல்லை.
நிலத்தையும் உழைப்பையும் கொடுத்து இவர்கள் உருவாக்கிய வாழைப்பழங்கள்தான் சூப்பர் மார்க்கெட்களில் பகட்டான ஸ்டிக்கருடன் ஏதோ தொழிற்சாலையில் தயாரானவைபோல காட்சி தருகின்றன. இந்த நிலை இந்தியாவுக்கு வருவதற்கு அதிக காலம் இல்லை. வணிக நிறுவனங்களுக்கு மனித உயிர் என்பது தூக்கி எறியப்படும் வாழைப்பழத் தோல் போன்றதே.
அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது ஒரு நிமிடம் இந்தப் பழத்துக்காக வீழ்த்தப்பட்ட லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளை, உரிமைக்காகப் போராடி உயிர்துறந்த மக்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
இந்திய வாழை விவசாயிகளும் வணிகச் சந்தையில் ஏமாந்துபோய் தலையில் துண்டை போட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதையும் நினைக்க மறந்துவிடாதீர்கள். வாழைப்பழம் மென்மையானது. ஆனால் அதன் அரசியல் அத்தனை மென்மையானது இல்லை.

No comments: