Jun 26, 2014

உணவு யுத்தம்!-15

பிறந்தநாள் கேக்குகள்!

சில நாட்களுக்கு முன் நாளிதழ் செய்தி ஒன்றில் வெளியான செய்தி இது: மும்பையில் 60 வயதைத் தொட்ட ஒரு தொழில் அதிபர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஒரே நேரம் 60 கேக்குகளை வெட்டினார். அந்த கேக்குகளின் மொத்த எடை 6,000 கிலோ.
எதற்கு இந்த ஆடம்பரம்? வணிகச் சந்தை உருவாக்கிய பண்பாடு எந்த அளவு விபரீதமாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, புத்தாடை அணிந்து கேக் வெட்டுவதும் சாக்லெட்

பரிமாறிக்கொள்வதும், விருந்தும்தான் என உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உணவுச் சந்தையின் முக்கிய இலக்குகளில் ஒன்று பிறந்தநாள். அதை மையமாகக்கொண்டு பெரும் வணிகம் நடைபெறுகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் சராசரியாக தனது பிறந்தநாளில் கேக், குளிர்பானங்கள், சிற்றுண்டி, விருந்து என 2,000 ரூபாயில் தொடங்கி 5,000 வரை செலவு செய்கிறான். மேல்தட்டு குடும்பங்கள் ஐந்து லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவு செய்கின்றன. இந்த செலவில் 80 சதவிகிதம் சந்தைக்கானதே!  
இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனை யாகும் பேக்கரி பொருட்களின் மதிப்பு 3,295 கோடி ரூபாய். இதில் 50 சதவிகிதம் ரொட்டிகள் விற்பனை. 15 முதல் 18 சதவிகிதம் பிறந்தநாள் கேக்குகளின் விற்பனை என்கிறார்கள்.
இந்த விற்பனை ஆண்டுக்கு எட்டு சதவிகிதம் முதல் 9.5 சதவிகிதம் வரை வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்குக் காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் என்கிறது பேக்கரி மார்க்கெட் சர்வே.
ஒரு பிறந்தநாள் கேக்கின் விலை 500 ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் வரை இருக்கிறது. அவரவர் வசதியைப் பொறுத்து பிடித்தமான வடிவத்தில், ருசியில் வாங்கிக்கொள்கிறார்கள். பெருநகரங்களில் புதுப் பழக்கம் உருவாகி உள்ளது. குழந்தைகளின் பிறந்தநாள் கோடை விடுமுறையில் வந்துவிட்டால், பள்ளி திறந்த பிறகு ஒரு நாளை பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிற பழக்கம் நமக்கு மரபானது இல்லை. அதை ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இதை ரோமானியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். பைபிளில் பிறந்தநாள் கொண்டாடும்படியாக எந்தக் குறிப்பும் இல்லை. நமது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்பதை சந்தையும் ஊடகங்களும்தான் தீர்மானிக்கின்றன. ஐந்து முக்கிய உணவு நிறுவனங்களே இன்று பிறந்தநாளை வடிவமைக்கின்றன என்கிறார் உணவியல் ஆய்வாளர் ஆர்தர் டிகாட்.
அவை, பிறந்தநாள் கேக்குகள் தயாரிக்கும் பேக்கரிகள், சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள், மது மற்றும் குளிர்பானங்கள், உணவகங்கள், பரிசுப்பொருள் விற்பனையகங்கள்… இவர்களின் சந்தைப்படுத்துதலே பிறந்தநாளை வடிவமைக்கின்றன.
எனது தாத்தா காலத்தில் யாரும் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. அதைவிடவும் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டதுகூட இல்லை. எந்த மாதம் பிறந்தேன் என்றுதான் சொல்வார்கள். எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம் என்பதை வைத்து அந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில்களுக்குப் போய் வணங்கி வருவதும் பெரியவர்களின் ஆசி பெறுவதும் தானம் அளிப்பதும் வழக்கம். எளிமையான நம்பிக்கையாக மட்டுமே பிறந்தநாள் இருந்தது.
இன்று வயது வேறுபாடின்றி எல்லோரது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கேக் தவறாமல் இடம் பெறுகிறது. கேக் வெட்டும் ஒருவர்கூட எதற்காகப் பிறந்தநாளில் கேக் வெட்டுகிறோம்… ஏன் மெழுகுவத்திகள் ஏற்றப்படுகின்றன… ஏன் அதை ஊதி அணைக்கச் சொல்கிறார்கள்… ஹேப்பி பர்த்டே டு யூ பாடலை யார் உருவாக்கினார்கள் என எதையும் அறிந்திருக்கவில்லை.
முன்பு ஊருக்கு ஒன்றோ, இரண்டோ பேக்கரி இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் கிடையாது. நோயாளிகளுக்கு பன், ரஸ்க், பிரெட் வாங்குவதற்கும், குழந்தைகளுக்கு கேக், பிஸ்கட், செர்ரி பழ ரொட்டி வாங்குவதற்கும் போவார்கள். பேக்கரியின் பெயர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவப் பெயர்களாகவே இருக்கும். மாடசாமி பேக்கரி, மதுரைவீரன் பேக்கரி என்ற பெயர்களை நான் கண்டதே இல்லை. கருப்பட்டி மிட்டாயும் காரச்சேவும் அதிரசமும் முறுக்கும் சாப்பிட்டு பழகிய தமிழ் மக்கள் எப்படி இன்று கேக், சாண்ட்விச், டோனெட் சாப்பிடப் பழகினார்கள்? வெறும் பழக்கம் மட்டும் பாரம்பரிய உணவு முறையை கைவிட செய்துவிடுமா என்ன?
30 ஆண்டுகளுக்கு முன் பேக்கரிக்குப் போய் வருகிறேன் என்றாலே, ‘வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா?’ என்றுதான் கேட்பார்கள். அதுபோல பன், ரொட்டி சாப்பிடுவதற்காகவே காய்ச்சல் வர வேண்டும் என நினைக்கும் சின்னஞ்சிறுவர்களும் இருந்தனர். கேக்கில் முட்டை கலந்திருக்கிறது, அதனால் சைவர்களாகிய நாங்கள் கேக் சாப்பிடமாட்டோம் என ஒரு கோஷ்டி கேக் மற்றும் பிஸ்கட்டுகளை ஒதுக்கி வைத்திருந்தது. இன்று அந்த பேதங்கள் மறைந்து போய்விட்டன. வீதிக்கு இரண்டு பேக்கரிகள் முளைத்திருக்கின்றன. மாநகரில் பிரெட் பட்டர் ஜாம் சாப்பிடும் பழக்கம் அடித்தட்டு மக்கள் வரை பரவியிருக்கிறது. பண்பாட்டைத் தீர்மானிப்பதில் சந்தை எவ்வளவு முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதற்கு பேக்கரிகளே உதாரணம்.
இன்று பேக்கரி மிக முக்கியமான வணிக மையம். பெரு நகரங்களில் புதிது புதிதாகப் பன்னாட்டு அடுமனைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒரு துண்டு கேக்கின் விலை ரூபாய் 275-ஐ தொட்டுவிட்டது. கேக் சாப்பிடுவது இளமையின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஒரு துண்டு கேக்கில் 385 கலோரி இருக்கிறது. ஆகவே, பார்த்துச் சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் நீரழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் உருவாகக்கூடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இளையோர் காதுகளில் அது ஒலிப்பதே இல்லை.
பேக்கரி என்பதற்குப் பதிலாக வெதுப்பகம் என்ற தமிழ்ச் சொல்லை ஒரு கடையின் பெயர் பலகையில் பார்த்தேன். அடுமனை என்றும் சில விளம்பரங்களில் கண்டிருக்கிறேன். இப்படி அழகான தமிழ்ச் சொற்கள் வந்தபோதும் மனதில் பதிந்துபோன பேக்கரி என்ற சொல்லை விலக்கவே முடியவில்லை. கேக், பிரெட், பிஸ்கட் என ஆங்கிலச் சொற்கள்தான் உடனடியாகப் பேச்சில் வருகின்றன.
பேக்கரியின் சமையல் கூடத்துக்குள் போயிருக்கிறீர்களா? அபூர்வமான ஒரு மணம் வரும். அந்த மணத்துக்காகவே பேக்கரியின் பின்கட்டில் போய் நின்றிருக்கிறேன். பிஸ்கட் செய்பவர்கள் எப்படி இவ்வளவு கச்சிதமாக செய்கிறார்கள், பன் ரொட்டிக்குள் எப்படி செர்ரி பழம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என, பள்ளி வயதில் வியப்பாக இருக்கும்.
கிறிஸ்துவர்கள் மட்டுமே வீட்டில் கேக் செய்வார்கள் என பள்ளி நாட்களில் நம்பிக் கொண்டிருந்தேன். உடன் படித்த கிறிஸ்துவ நண்பனிடம் ‘உன் வீட்டில் கேக் செய்வீர்களா?’ எனக் கேட்டபோது, ‘இல்லை, பேக்கரியில்தான் வாங்குவோம்’ என்றான். இவ்வளவு ருசியாக உள்ள கேக்குகளை ஏன் வீட்டில் செய்வதில்லை என யோசித்திருக்கிறேன். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன். ‘அதை செய்வதற்கான அடுப்பு வேண்டும். சரியான பக்குவம் தெரிய வேண்டும். கடையில் உள்ளதுபோல வீட்டில் செய்ய முடியாது’ என்றார்.
இன்று வரை கேக் வகைகள், பிஸ்கட்டுகள், ரொட்டித்துண்டுகள் கடைகளில் வாங்கப்படும் விற்பனைப் பொருளாக மட்டுமே இருக்கின்றன. இந்தியா முழுவதுமாக 20 லட்சம் பேக்கரிகள் இருக்கின்றன என்கிறார்கள். சிறுதொழிலாக இதை செய்பவர்கள் 60 சதவிகிதம். இரண்டு பெரிய நிறுவனங்கள்தான் இந்தச் சந்தையில் கோலோச்சுகின்றன. பெரிய நிறுவனங்களுடன் சிறிய வீட்டுத் தயாரிப்புகள் பலத்த போட்டி போடுகின்றன. நோயாளிகளுக்கான உணவில் பேக்கரி தயாரிப்புகளே இப்போதும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.
எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து பிறந்தநாட்களைக் கொண்டாடுகிறோம்? உண்மையில் நாம் கொண்டாட்டத்துக்காக ஏங்குகிறோம். மதம் சார்ந்த விழாக்கள், பண்டிகைகள் தவிர, வேறு கொண்டாட்டங்களுக்கு தனிநபர் வாழ்வில் இடம் இல்லை. ஆகவே, பிறந்தநாளும் திருமணநாளும் முக்கியமானதாக மாறியிருக்கின்றன.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கித் தந்துவிட்டார்கள். அதை அப்படியே நாமும் பின்பற்றுகிறோம். ஆனால், திருமண தினத்தைக் கொண்டாடும்போது அவர்களின் பண்பாடு நம்மோடு ஒத்துப்போக மறுப்பதால், சாம்பெயின் குடிப்பதையும் கைகோத்து நடனமாடுவதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருகாலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மன்னர்களுக்கு மட்டுமேயானது. கிறிஸ்து சகாப்தம் துவங்குவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே எகிப்திலும் ரோமிலும் அரசர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. கிரேக்க மக்கள் நிறைய கடவுள்களை வணங்குபவர்கள். நிலவுக்கான கடவுள் ஆர்திமிஸ். அதன் வடிவம் போலவே தேன் கலந்த வட்டவடிவமான கேக் ஒன்றை செய்து, அதில் பிரகாசத்துக்காக மெழுகுவத்தியை ஏற்றி கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படித்தான் பிறந்தநாள் கேக் பிறந்தது என உணவியல் அறிஞர் டி.எஸ்.ராவத் கூறுகிறார்.
பிறந்ததினத்தின்போது மெழுகுவத்தியை ஏற்றுவது ஒரு சடங்கு. தீவினைகள் விலகி ஓடுவதற்காகவே மெழுகுவத்தி ஏற்றப்படுகிறது என்கிறார்கள் ஸ்காட்டிஷ் நாட்டுபுறவியல் ஆய்வாளர்கள்.
பிறந்தநாள் கேக்கின் நடுவில் ஒரேயொரு மெழுகுவத்தி ஏற்றிவைக்கும் வழக்கம் ஜெர்மனியில்தான் துவங்கியிருக்கிறது, குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களை தனியே ஓர் அரங்கில் கொண்டாடுவது ஜெர்மானியரின் வழக்கம். அதன் பெயர் கிண்டர்பெஸ்ட். அதில் இருந்துதான் குழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தனித்த நிகழ்வாக கொண்டாடுவது தொடங்கியிருக்கிறது.
குழந்தைகளை தீய ஆவிகள் பற்றிக் கொள்ளாமல் காப்பதற்காகப் பெரியவர்கள் ஒன்றுகூடி வாழ்த்துவதும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கம். அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் உலகெல்லாம் பரவியது என்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிறவர் தனது மனதுக்குள் ஓர் ஆசையை நினைத்துக்கொள்ள வேண்டும். அது நிறைவேற வேண்டும் என்பதன் அடையாளமாக எரியும் மெழுகுவத்தியை ஊதி அணைக்க வேண்டும். இதன் வழியேதான் மெழுகுவத்தியை ஊதி அணைக்கும் பழக்கம் உருவானது என பிரிட்டிஷ் மக்கள் சொல்கிறார்கள். வயதுக்கு ஏற்ப மெழுகுவத்திகள் அதிகமாவது பின்னாளில் உருவான மாற்றமே.
கிரேக்கர்கள் ஆரம்ப காலங்களில் கேக்குகளை குறிப்பதற்கு பிளகோஸ் என்றே அழைத்தனர். அதன் பொருள் வட்ட வடிமானது என்பதாகும். அவர்களே சடுரா என்ற கேக்கையும் தயாரித்தார்கள். அது பெரிய அளவிலான கேக் ஆகும்.
ரோமானியர்கள் இதுபோலவே பிளசென்டா என்ற வெண்ணைய் சேர்ந்த கேக்குகளை தயாரித்து கடவுளுக்கு அர்ப்பணம் செய்தனர். ரோமில் மூன்றுவிதமான பிறந்ததினங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. ஒன்று தனிநபர்களின் பிறந்ததினங்கள், மற்றது கடவுளின் பிறந்ததினம். மூன்றாவது அரசனின் பிறந்ததினம். இந்த மூன்றில் அரசனின் பிறந்தநாளே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்பட்டது. மூன்று நிகழ்வுகளுக்கும் மூன்றுவிதமான கேக்குகள் தயாரிக்கப்பட்டன.
பிறந்தநாள் கேக்கின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன்பாக ரொட்டியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அது..

No comments: